
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவான வழக்கில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், ஆசிரியர் தீபா வெங்கட்ராமன் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்களுக்கு பதிலளிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சி.பி.சி.ஐ.டி.யால் கைது செய்யபட்டுள்ளார். மேலும் மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டுள்ளர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளி நிர்வாகி ஜானகி சினிவாசன், அவரது மருமகள் பாரதி, பள்ளி ஆசிரியை தீபா வெங்கடராமன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 2010-12ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், சிவசங்கர் பாபா மீதான வழக்கில் தேவையில்லாமல் தங்களையும் சேர்த்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. மீது புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாஜிஸ்திரேட் முன்பாக வாக்குமூலம் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். மேலும் தீபாவின் முன் மீன் தவிர மற்ற இருவரது வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி.யை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மூவரின் முன் ஜாமீன் மனுக்களுக்கும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, திருத்த மனுக்களை தாக்கல் செய்ய இரு மனுதாரர்களுக்கும் அறிவுறுத்தி விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.