Skip to main content

ஆந்திர வனத்துறை என்கவுண்டர்! - தமிழக கூலி தொழிலாளி பலி!

Published on 02/09/2018 | Edited on 02/09/2018
sd


விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜம்னாமத்தூர் தாலுக்கா, போளுர் தாலுக்கா, ஆரணி தாலுக்காவை சேர்ந்த சில கிராமத்தை சேர்ந்த மக்கள், குறிப்பாக இளைஞர்கள் புரோக்கர்களின் பேச்சை நம்பி ஆந்திரா காடுகளில் செம்மரம் வெட்டச்சென்று மாட்டிக்கொள்கிறார்கள். சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் மீது ஆந்திராவில் வழக்கும், 500க்கும் அதிகமான கூலி தொழிலாளிகள் ஆந்திராவின் சித்தூர், திருப்பதி, குண்டூர், நகரி சிறைகளில் உள்ளனர்.

இதுவரை 30க்கும் மேற்பட்ட தமிழக கூலி தொழிலாளிகள் ஆந்திராவின் செம்மர தடுப்பு பிரிவு மற்றும் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். அப்போதும், செம்மரம் வெட்டச்செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்கிறது ஆந்திரா காவல்துறை.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ந்தேதி இரவு திருப்பதியை அடுத்த காளஸ்திரி வனப்பகுதியில், செம்மரம் வெட்டச்சென்ற 30 பேர் கொண்ட கும்பலை கண்டு அவர்களை பிடிக்க ஆந்திரா வனத்துறையினர் முயன்றதாகவும், அவர்கள் சிக்காமல் இருக்க வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் திருவண்ணாமலை மாவட்டம், ஜம்னாமத்தூர் தாலுக்காவை சேர்ந்த கண்ணமலையை சேர்ந்த காமராஜ் என்பவரின் இடுப்பில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து சம்பவயிடத்திலேயே இறந்ததாகவும், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காளஸ்திரி போலிஸார் ஆகஸ்ட் 1ந்தேதி மதியம் தகவலை வெளியிட்டுள்ளனர்.
 

sdf


சம்பவம் நடத்தயிடத்துக்கு ஆகஸ்ட் 1ந்தேதி மதியம் 2 மணியளவில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்ற போலீஸார், சம்பவம் நடந்தயிடத்தை பார்வையிட்டுவிட்டு உடலை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடத்தப்பட்டு காமராஜ் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுட்டுக்கொல்லப்பட்டவரின் தகவலை வெளியிட்ட காவல்துறை, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவரின் பெயர், முகவரியை வெளியிடவில்லை.

ஆந்திரா வனத்துறையின் இந்த நடவடிக்கை தமிழக மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே மவுனமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்