Skip to main content

தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறேன் என...: மு.ஞானமூர்த்தி

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

 

ஒரே நாளில் திமுகவுடனும், அதிமுகவுடன் தேமுதிக பேசியதாக செய்திகள் வெளியானது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

திமுகவின் செந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், 
 

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. ஜெயலலிதா ஆட்சி அமைத்தார்.  விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். சட்டசபையில் விஜயகாந்த் அதிமுகவை விமர்சனம் செய்ததால் தனது கட்சி எம்எல்ஏக்களை விட்டு எதிர்த்து பேசச் சொன்னார் ஜெயலலிதா. 
 

சட்டமன்றத்தில் விஜயகாந்த் நாக்கை கடித்து பேசியதால் அவரை சஸ்பெண்ட் செய்து எதிர்கட்சி தலைவர் தகுதியையும் பறித்தார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக சேரவில்லையானால் அவர்களுக்கு ஒரு சீட்டுகூட கிடைத்திருக்காது. எதிர்கட்சி தலைவர் பதவிக்கே தகுதியில்லாதவரோடு கூட்டணி வைத்ததை எண்ணி வெட்கப்படுகிறேன் என்று சட்டமன்றத்திலேயே கூறினார் ஜெயலலிதா. 
 

jayalalitha


 

தேமுதிக கட்சி எம்எல்ஏக்கள் மதுரை மேற்குத்தொகுதி எம்எல்ஏ சுந்தர்ராஜன், பேராவூரணி எம்எல்ஏ நடிகர் அருண்பாண்டியன், நெல்லை தொகுதி எம்எல்ஏ மைக்கேல்ராயப்பன், அப்போதைய எம்எல்ஏவாகவும், தற்போதைய அமைச்சராகவும் உள்ள மாபா. பாண்டியராஜன், மங்களூர் எம்எல்ஏ தமிழழகன் ஆகியோரை பிரித்து தனது கட்சியில் சேர்த்தார் ஜெயலலிதா. மேலும் பலரையும் விஜயகாந்துக்கு எதிராக பேசவைத்தார். 
 

ஒரு இளம் வயது எம்எல்ஏ விஜயகாந்தை சட்டமன்றத்திலேயே எதிர்த்து பேசியதை ஜெயலலிதா கைதட்டி ரசித்து சிரித்தார். எம்எல்ஏவாக இருந்த அவருக்கு மறுநாளே மாவட்ட செயலாளர் பதவியும், மந்திரி பதவியும் கொடுத்தார்.  
 

தன்னை நம்பி கட்சிக்கு வந்த பலரை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்த்த விஜயகாந்த், பின்னாளில் அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் அவர்களில் சிலர் விஜயகாந்தையே விமர்சனம் செய்து காயப்படுத்தினார்கள். தேமுதிகவிற்கு மக்களிடம் இருந்த செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. 
 

எம்எல்ஏ ஆக்கி தன்னால் அடையாளம் கட்டப்பட்ட நண்பர்களே தனக்கு எதிரியாகிவிட்டதை எண்ணி எண்ணி மன உளைச்சலுக்கு ஆளானார். பொதுவாழ்க்கையில் எம்ஜிஆர் போல் மிளிரலாம் என்னும் ஆசையில் அரசியலில் குதித்த விஜயகாந்தை பலகீனமடையச் செய்தார் ஜெயலலிதா.
 

dmdk 44


உடல் நலம் பாதிக்கப்படுள்ள விஜயகாந்தை நலம் விசாரிக்க சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விசாரித்து விட்டு வெளியில் வரும்போது தேர்தல் குறித்து பேசினீர்களா? என நிருபர்கள் கேட்டபோது அரசியல் பேச வரவில்லை, நலம் விசாரிக்கத்தான் வந்தேன் என நாகரீகமாக பதிலளித்தார். மறுநாள் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவோ தேர்தல் குறித்தும் பேசினோம் என அப்பட்டமாக ஒரு பொய்யை சொல்லி தனது கட்சிக்கான தேர்தல் ஏலத்தை துவக்கினார். அன்றிலிருந்து திமுக தனது கதவை அடைத்துவிட்டது. 

 

mg 445


 

திமுக பொருளாளர் துரைமுருகனிடம் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வருகிறோம் திமுகவில் கூட்டணி வைத்துக்கொள்கிறோம் என்று பேசிவிட்டு கட்சி நிர்வாகிகளையும் துரைமுருகன் வீட்டுக்கு அனுப்பி விட்டு, சுதீஷ் மீனம்பாக்கத்தில் ஓட்டலில் தங்கியுள்ள பிஜெபியை சார்ந்த மத்திய அமைச்சரை சந்தித்து கூட்டணி குறித்து பேச ஓடுவது கேவலமாக இல்லையா!

 

பிஜெபியும், அதிமுகவும் மாறிமாறி சென்று பேரம் பேசி வருகின்றனர். பணத்திற்கும், 6 தொகுதிக்கும் இசைந்துள்ளார்கள். பிரேமலதாவோ பாமகவுக்கு கொடுத்ததையே எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளார். தேமுதிக தொண்டர்களோ அதிமுகவுடன் கூட்டணி வைப்பதை விஜயகாந்த் விரும்பமாட்டார் என்கின்றனர். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.