
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 93- வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின், தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதேபோல், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்," சிவாஜி கணேசனின் 'சிந்து நதியின் மிசை' போன்ற பாடல்களைப் பாடி அவரை நினைவுகூர்ந்தார். சிவாஜி கணேசன் ஒரு வரலாறு; பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் சிவாஜி. திண்டுக்கல் சீனிவாசனுக்கு கட்சியின் விதிகள் தெரியும். அதன்படி, தகுந்த முறையில் பேச வேண்டும். ஓ.பி.எஸ். மாற்று கட்சியினரை அழைத்து பேசவில்லை. தன் சொந்த கட்சியினருடன்தான் பேசினார். ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லை. செயற்குழுவில் கருத்து வேறுபாடு வரலாம்; ஆனால் வெளியில் கருத்து கூறுவது தவறு.
அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்புக்கு அக்டோபர் 7- ஆம் தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள். ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே; வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே. சண்டை நடந்தால்தானே சமாதானம் செய்வதற்கு? கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.