Skip to main content

ஆட்டோ உள்ளே வந்தால் 500 ரூபாய் அபராதம்! –கலங்கும் ஆட்டோ தொழிலாளர்கள்

Published on 06/06/2020 | Edited on 06/06/2020
 500 fine if auto comes in - troubled auto workers

 

கரோனா பரவலை தடுக்க 65 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு போக்குவரத்துக்காக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆட்டோக்கள் இயங்கலாம் என்றும் ஒரு ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணம் செய்யலாம் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.


அதேபோல் பேருந்துகளில் 50 சதவிதத்துக்கு மேல் பயணிகளை ஏற்றக்கூடாது என்கிற உத்தரவும் உள்ளது. இதனால் பொதுமக்கள் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், குட்டியானை என்கிற டாடா ஏசி வாகனங்களில் கிராமங்களில் இருந்து நகரப்பகுதிக்கு வருகின்றனர். அப்படி வருபவர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து இறக்கிவிடுகின்றனர். அங்கிருந்து பொதுமக்கள் நகர பகுதிக்குள் சென்று தங்களுக்கு தேவையானதை வாங்கி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வேலூர் மாநகருக்கு ஆட்டோ, ஷேர் ஆட்டோ, குட்டியானை போன்ற வாகனங்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அப்படி வருபவர்களை அந்த வாகன ஓட்டிகள் பழைய பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து இறக்கிவிடுகின்றனர்.

 

 


ஆட்டோக்கள், லோடு வண்டிகள் பழைய பேருந்து நிலையத்துக்குள் வரக்கூடாது என மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி வந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்ததோடு, இது தொடர்பாக பேருந்து நிலையத்திற்கு வரும் சாலைகளில் பேனர்கள் வைத்துள்ளனர். அதனையும் மீறி ஆட்டோக்கள் பழைய பேருந்து நிலையத்துக்குள் செல்கின்றன.

ஜீன் 6ந் தேதி மாநகராட்சி அதிகாரிகள் பழைய பேருந்து நிலைய பகுதியில் காவல்துறையினரோடு நின்றனர். பேருந்து நிலையத்துக்குள் வந்த ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், லோடு வண்டிகளை மடக்கி 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

nakkheeran app




65 நாள் ஆட்டோ ஓடாமல் சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல் துயரப்பட்டோம், இப்போது ஆட்டோ இயங்க அனுமதி தந்தபின்பே நாலு காசு சம்பாதிக்கிறோம். அதனையும் விதியை மீறினோம் என அபராதமாக பிடுங்கினால் என்ன நியாயம் என்கின்றனர்.

அதிகாரிகளோ, விதிகளை மீறாதீர்கள் என போர்டு வைக்கப்பட்டுள்ளது, அதையும் மீறினால் என்ன அர்த்தம். பேருந்து நிலைய வாசலில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடச்சொல்கிறோம், சொல்வதை மீறுவதால் தான் இந்த அபராதம் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்