Skip to main content

தேர்வு பயத்தால் தூக்கிட்ட பிளஸ் 2 மாணவன்!- பெற்றோரின் எதிர்பார்ப்பைச் சுட்டிக்காட்டிய கடிதம்! 

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

12th student incident in virudhunagar district wrote a letter

 

நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் சரி, சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கும் சரி, தேர்வு வந்துவிட்டால், அதுவரையிலும் இல்லாத பயம் தேடிவந்து ஒட்டிக்கொள்கிறது. கேள்விக்கு பதில் எழுதுபவர்களாக இல்லாமல், கேள்விகளைக் கேட்பவர்களாக மாணவர்கள் இருந்தால், தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றல், தானாகவே வந்துவிடும். இந்தப் புரிதலை, ஆசிரியர்களும் பெற்றோரும்  மாணவன் தினேஷுக்கு ஏற்படுத்தத் தவறிவிட்ட நிலையில், பிளஸ் 2 தேர்வுக்கு முதல் நாள், அம்மாவுடைய சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். 

 

விருதுநகர் மாவட்டம், சூலக்கரையைச் சேர்ந்த முருகேசன்- ஈஸ்வரி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். மூத்தமகன் கல்லூரியில் படிக்கிறார். இளையமகன் தினேஷ்,  ராமசாமி ராஜா நகரிலுள்ள ராம்கோ வித்யாலயா (CBSE) பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தான். மே 5- ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவேண்டிய நிலையில், கடும் மனஉளைச்சலில் இருந்திருக்கிறான். இதனையறியாத அவன் பெற்றோர், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வெளியூர் சென்றுவிட்டனர். 

 

தாத்தா வேலுச்சாமி மட்டும் சூலக்கரை வீட்டில் இருந்திருக்கிறார். தாத்தா வீட்டிலிருந்து கிளம்பிய நேரம் பார்த்து, தனது அறையைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு உயிரைவிட்டுள்ளான். தகவலறிந்த சூலக்கரை போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

 

என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று மாணவன் தினேஷ் எழுதியுள்ளதாகச் சொல்லப்படும் கடிதத்தில், படிப்பில் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத நிலையில், தற்கொலை முடிவெடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளானாம்.  

 

மாணவன் தினேஷ் தற்கொலை குறித்து வேதனைப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர், “பெற்றோர் மற்றும் பள்ளியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இயந்திரங்களாகவே மாணவர்கள் இயக்கப்படுகின்றனர்.  பள்ளியில் படிக்கும் பாடங்கள் என்பது, தினசரி வாழ்க்கையோடு தொடர்புடைய ஒன்று என்பதை மாணவர்களுக்குப் புரியும்படி செய்தால், கற்றலில் ஆர்வம் ஏற்படுவதோடு, கல்வியைச் சுமையாகக் கருதாமல் சுவையானதாக ஆக்கிக்கொள்ள முடியும். பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்படும் அனுபவம், வாழ்க்கையை இனிமையாக்குவதற்குப் பதிலாக, கசப்பாக்கிவிடுகிறது. 

 

எதற்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது என்பதை மாணவ சமுதாயத்துக்கு நம்மால் ஏன் உணர்த்த முடியவில்லை? பாடநூல்களில் உள்ள கருத்துகளைக் குருட்டு மனப்பாடம் செய்து, தேர்வில் அப்படியே எழுதும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதென்பது, சாத்தியப்படாமலே இருந்துவருகிறது. இந்த மனப்பாட யுக்தியானது, கருத்துகளைப் புரிந்துகொள்ளாமல், மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கிறது. இதற்கென்றே, குருட்டு மனப்பாடத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10-ஆம் தேதி,   குருட்டு மனப்பாடம் எதிர்க்கும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை பழமொழி வாயிலாகவே முன்னோர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர். ஆனாலும், இன்றைய தலைமுறையினருக்கு அதனை உணர்த்த நாம் தவறிவிட்டோம்.” என்றார் ஆதங்கத்துடன்.   

 

மனப்பாடத்தை விடுத்து, சரியான கற்றல் முறைக்கு மாறுவது என்றோ? 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.