விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக வி.ஏ.டி. கலிவரதன் செயல்பட்டு வருகிறார். முன்னாள் எம்.எல்.ஏவான இவர், பாமகவில் இருந்தவர். அங்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சில வருடங்களுக்கு முன்பு பாமகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துகொண்டார். பாஜகவில் இணைந்ததும் தெற்கு மாவட்டத் தலைவராக பதவி வழங்கியது தலைமை.
திடீரென வந்த கலிவரதனுக்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டதில் பல ஆண்டுகளாக பாஜகவுக்காக பணியாற்றியவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பு பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரே கலிவரதன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதுபோல, கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் ஒருவர் இவர் மீது புகார் கொடுத்துள்ளார். இப்படி அடுக்கடுக்கான புகார்களால் சர்ச்சை நாயகனாக விழுப்புரம் தொகுதியில் வலம் வரத் தொடங்கினார் வி.ஏ.டி. கலிவரதன். பாஜகவுக்கு வந்த நாள் முதல் இந்தநாள் வரை இவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வரிசைகட்டின.
இந்த நிலையில், பா.ஜ.கவின் விழுப்புரம் மாவட்ட ஐ.டி விங் தலைவர் பிரபாகரன் என்பவர் வி.ஏ.டி. கலிவரதனிடம் செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் பேசுவதாக வெளியான அந்த ஆடியோவில், "இந்த பா.ஜ.கவில் இருப்பவனுங்களுக்கு எல்லாம் ஒன்னும் தெரியாது. நோகாமல் பொறுப்பு வாங்கிட்டு ஏமாத்திட்டு போயிடலாம்னு பாக்குறானுங்க” எனத் தகாத வார்த்தைகளால் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது கட்சி வட்டாரங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாஜக கட்சி நிர்வாகிகள் கமலாலயத்திற்கு புகார் அனுப்பியுள்ளனர். ஆனால், இந்த புகார் குறித்து பாஜக தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பாஜகவினர், விழுப்புரம் எல்லிச்சத்திரம் சாலையிலுள்ள பாஜக அலுவலக வளாகத்தின் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘’பாஜகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை. மாவட்டத் தலைவராக இருக்கக் கூடிய கலிவரதன் பெண்களை மதிப்பது இல்லை. சாதி ரீதியாக திட்டி இழிவுபடுத்துகிறார். கட்சி தலைமையிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பாஜக நிர்வாகிகள் எனக் கூறவே அசிங்கமாக உள்ளது’’ என்றனர்.
மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் தர்ணா போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது எந்தவித சலனமும் இல்லாமல் தெற்கு மாவட்டத் தலைவர் கலிவரதன் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்த ஆடியோ பழைய ஆடியோ. வேண்டுமென்றே சிலர் சதி செய்கின்றனர்.” என முடித்துக் கொண்டார்.