![hc](http://image.nakkheeran.in/cdn/farfuture/V3TADjXwyap2oWkNkj-WXBXJHYXldiLwQaVWEHebxZc/1595476757/sites/default/files/inline-images/high%20court_13.jpg)
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முருகக் கடவுளின் பெருமைகளைப் போற்றி, உடல் உறுப்புகளைக் காக்க வேண்டுமென பாடப்பட்ட கந்த சஷ்டி கவசத்திற்கு, ஆபாச வார்த்தைகளால் விளக்கமளித்து, கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டது.
இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த செந்தில் வாசன், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம் மற்றும் வீடியோ எடிட்டர் குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டும், வீடியோவில் பேசியிருந்த நாத்திகன் என்ற சுரேந்திரன் சரணடைந்தும், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட வீடியோ பதிவிற்கு, 200 நாட்கள் கழித்து உள் நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீடியோக்கள் நீக்கப்பட்டு மன்னிப்பு கோரிய பிறகும், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். தன்னைக் கைது செய்ய வாய்ப்பிருப்பதால், முன்ஜாமீன் வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.
இந்த ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.