Skip to main content

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: அன்புமணி

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
anbumani



கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பரங்கிப்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் தீமைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.
 

 இதில் பாமக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி  கலந்துகொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கும் துண்டுப்பிரசுரத்தை வழங்கி வழங்கினார்.
 

 அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய மாநில அரசுகள் டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு சூழ்ச்சி செய்து வருகிறது. இதனால் பேராபத்து ஏற்படப்போகிறது. பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள  பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் அகதிகளாக வாழும் நிலைமை ஏற்பட ஏற்பட போகிறது.
 

 மத்திய அரசு இந்தியா முழுவதும் 54 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதில் தமிழகத்தில் கடலூர், நாகை மாவட்டங்களில் மூன்று இடத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இப்பகுதிகளிலுள்ள 45 கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசடையும் நிலை ஏற்படப்போகிறது.
 

எனக்கு இந்த திட்டத்தால் எந்த பிரச்சினையும். இல்லை நான் சென்னையில் வாழ்கிறேன். ஆனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடவில்லை என்றால் பேராபத்தை சந்திக்க நேரிடும். இந்த பகுதியில் வாழும் மக்களை காக்க ஓடோடி வருவேன். நான்  அரசியல் பேசவோ, ஓட்டுக்காகவோ இங்கு வரவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைப்பதை தடுக்கவே வந்திருக்கிறேன்.
 

 அனைத்து மக்களும் எந்தவித பாகுபாடின்றி இந்த திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள நிலங்களில் ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டேன்.  எடப்பாடி பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர். மோடி கார்ப்பரேட் முதலாளிகளுக்காக எதையும் செய்யக்கூடியவர். அவர்களுக்கு மக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லை.
 

 தமிழகத்திலுள்ள டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பெட்ரோல் கெமிக்கல் மண்டலத்திற்கு திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிமுக அரசு அதனை நிறைவேற்ற துடித்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள சைமா சாயப்பட்டறை தொழிற்சாலையின் கழிவுகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. வெளிநாடுகளில் இதுதடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பகுதியில் இயங்கி வரும் தனியார் அனல்மின் நிலையம் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

 கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள  தாய்மார்களுக்கு தாய்ப்பாலில் டையாக்சின் என்ற புற்று நோயை ஏற்படுத்தும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் கூறுகிறார்கள். பலர் அங்கு புற்று நோயால் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இந்த இடமும் அமைந்துவிடக்கூடாது. இதனால் கடல் உயிரினங்களும்  அழியும் நிலை ஏற்படும். விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதரம் பாதிக்கப்படும். எனவே  இதனை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மக்கள் ஒற்றுமையுடன் இருந்து திட்டத்தை அகற்ற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இலங்ககையில் தமிழர்களை கொன்று குவித்த கொலைவெறியன் ராஜபக்சே மீன்டும் அதிபராக பதவியேற்றது கண்டிக்கதக்கது. சூழ்ச்சியால் பதவியேற்றுள்ளார். இதற்கு இந்திய அரசு துணைநிற்கிறது என்றார்.
 

 இதனைத்தொடர்ந்து அவர் புவனகிரி சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்குடி ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.