Skip to main content

“டெல்லிய நம்பர் 1 ஆக்கிட்டோம்.. அடுத்து இந்தியாதான்” - களத்தில் இறங்கிய ஆம் ஆத்மி

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Aam Aadmi started Make in India  Tamil Nadu

 

“நாங்க டெல்லிய நம்பர் 1 ஆக்கிட்டோம். அடுத்து 2024ல் இந்தியாவை நம்பர் 1 ஆக்குவோம்" என பாதயாத்திரை நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் பேசியது மக்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் ‘மேக் இன் இந்தியா நம்பர் 1' என்ற பிரச்சார இயக்கத்தை டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி வைத்து இந்த இயக்கத்தில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தார். 

 

மேலும், சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் நிலையான கவனத்தை செலுத்தினால் இந்தியாவை மீண்டும் நம்பர் 1 ஆக்கலாம் எனத் தெரிவித்தார். அதே சமயம், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை காட்டமாக விமர்சிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டின் வளர்ச்சிக்காக நாம் இந்த அரசியல் தலைவர்களை நம்பி இருக்க முடியாது. அப்படி செய்வது நமக்கும், நாட்டுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் எனப் பேசினார்.

 

இந்நிலையில், கெஜ்ரிவாலின் கனவு திட்டமான ‘மேக் இன் இந்தியா நம்பர் 1’ குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில் திருச்சியில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை நடத்தப்படுகிறது. மேலும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தலைமையில் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு இந்த பாதயாத்திரையின் தொடக்கவிழா நடைபெற்றது.

 

இது குறித்து ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் வசீகரன் பேசும்போது, “நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சி 75 வருஷம் ஆகுது.. ஆனா, இப்ப வரைக்கும் 66 சதவீத மக்களுக்கு தரமான கல்வி கிடைக்கல. அரசு மருத்துவமனையில சுகாதார வசதிகள சரியா கட்டமைக்கல. இதையெல்லாம் மாற்றுவதற்கு ஒரே வழி மேக் இந்தியா நம்பர் 1 திட்டம் தான். இதை வெச்சி நாங்க டெல்லிய நம்பர் 1 ஆக்கிட்டோம். நெக்ஸ்ட் பஞ்சாப நம்பர் 1 ஆக்கப்போறோம். அதே மாதிரி 2024ல் இந்தியாவை நம்பர் 1 ஆக்குவோம்” எனப் பேசியிருந்தார்.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம்” - டெல்லி எம்.பி. குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024

 

 "Anything can happen to Kejriwal in jail" - Delhi MP Accusation

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை எம்.பி சஞ்சய் சிங் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். மேலும், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலேயே கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தது. குறிப்பாக வீட்டில் சமைத்த உணவு, இன்சுலின் போன்றவை அவருக்கு மறுக்கப்பட்டு உள்ளதாக டெல்லி மந்திரி அதிஷி குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், அக்கட்சியின் எம்.பி சஞ்சய் சிங்கும், டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியதை உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பா.ஜ.க.வின் நடவடிக்கை ஒருவரைக் கொல்லும் நிலைக்குக்கூட தள்ளும். எனவே, சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம். அவருக்கு எதிராக சதி செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.