Skip to main content

செந்தில் பாலாஜி வழக்கு; அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Senthil Balaji Case; Supreme Court notice to enforcement department

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

 

முன்னதாக, செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.

 

இதையடுத்து, வழக்கின் இறுதி விசாரணை கடந்த 14 ஆம் தேதி  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. இரு தரப்பின் இறுதி விசாரணையும் முடிவடைந்த நிலையில், நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வழக்கு குறித்து தனது கருத்தைத் தெரிவிக்கையில், “செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான். அவர் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில்  நிரூபிக்கட்டும். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று இரண்டு நீதிபதி அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும். எனவே செந்தில் பாலாஜி வழக்கின் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கும்” என தெரிவித்து இருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து,  சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா  ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் நேற்று இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வாதத்தை முன்வைக்கையில், “அமாலாக்கத்துறை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் காவல் அதிகாரிகள் அல்ல என விஜய் மதன்லால் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏராளமான சட்டப் பிரச்சனைகள் உள்ளன. அமாலக்கத்துறைக்கு வழங்கப்பட்ட 15 நாள் காவல் முடிந்துவிட்டது. எனவே செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலுக்கு தான் அனுப்ப வேண்டும். அமாலாக்கத்துறை அதிகாரிகள் காவல் அதிகாரிகள் அல்ல என்பதால் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 167 இன் கீழ் காவலில் எடுக்க முடியாது” என தெரிவித்தார்.

 

அதனை தொடர்ந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அமலாக்கத்துறை சார்பில் வாதிடுகையில், “கைது செய்து விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது. சீ.ஆர்.பி.சி. 167 வது பிரிவு முழுவதுமாக பொருந்தலாம் அல்லது பொருந்தாமல் இருக்க வேண்டும்”என வாதத்தை முன் வைத்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் அமலாக்கத்துறை பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. முன்னதாக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்