Skip to main content

தட்டிக்கேட்ட போலீஸ்... தாக்கிய இளைஞர்... துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்...

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

ஊரடங்கின் போது காவலரைத் தாக்கிய இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

 

bengaluru lockdown police issue

 

 

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 800 ஐ கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 66லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசு 21 நாட்கள் லாக்டவுன் அறிவித்துள்ளது.  

இந்நிலையில் பெங்களூருவின் சஞ்சய் நகரில் ஊரடங்கை மீறி இளைஞர்கள் இரண்டு பேர் சாலையில் வீலிங் செய்துள்ளனர். அப்போது அங்கு பணியிலிருந்த காவலர் மஞ்சண்ணா இருவரையும் கண்டித்துள்ளார்.பின்னர் லத்தியால் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், காவலர் மஞ்சண்ணா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். காவலர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சஞ்சய் நகர் போலீஸார் இரண்டு இளைஞர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையின் போது இளைஞர்களில் ஒருவருக்குக் குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பெங்களூரு வடக்கு மண்டல துணை காவல் ஆணையர் ஷஷி குமார், "இரு இளைஞர்களும் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்துள்ளனர். இதனை எச்சரித்த போலீஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்த போலீஸார் இருவரையும் சஞ்சய் நகர் காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் சேர்ந்து போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் துணை காவல் ஆய்வாளர் ரூபா, காவலர் சுரேஷ் குமார் காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞரின் இடது காலில் குண்டு பாய்ந்தது" எனத் தெரிவித்துள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்