Skip to main content

சிவசங்கர் பாபா சிறையில் அடைப்பு: ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த செங்கல்பட்டு கோர்ட்

Published on 17/06/2021 | Edited on 17/06/2021
sivashankar baba

 

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் (செங்கல்பட்டு மாவட்டம்) சுசில் அரி இன்டர்நே‌ஷனல் பள்ளி இயங்கி வந்தது. உண்டு, உறைவிட பள்ளியான இங்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியை சிவசங்கர் பாபா என்பவர் நடத்தி வந்தார். ஆன்மீக நிகழ்ச்சிகளையும் அதிகம் நடத்தி உள்ளார். அந்த நிகழ்ச்சியின்போது நடனமாடியபடி பக்தர்களுக்கு ஆசி வழங்குவதை வழக்கமாக வைத்து இருந்தார். 

 

sivashankar baba

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதுதொடர்பாக மாமல்லபுரம் அனைத்து மகளிர் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குகளை பதிவு செய்தனர். போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

sivashankar baba

 

சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். அவரை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் பல்வேறு வியூகங்கள் வகுத்தனர். இந்நிலையில், சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சான்றுகளையும் புகைப்படங்களையும் அவரது தரப்பினர் சமர்ப்பித்திருந்தனர்.

sivashankar baba

இதையடுத்து, டேராடூனில் உள்ள சிவசங்கரை நேரடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி குழு விரைந்தது. மேலும், சிவசங்கர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே டேராடூனில் இருந்து சிவசங்கர் தப்பித்துச் சென்றார். 

sivashankar baba

போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது சிவசங்கர் பாபா டேராடூனில் இருந்து தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிவசங்கர் பாபா டெல்லியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் டெல்லி காவல்துறையினரின் உதவியுடன் சிவசங்கர் பாபாவை கைது செய்தனர்.

sivashankar baba

 

அதனைத் தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். 

விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் சிவசங்கர் பாபாவை அமர வைத்து ஒருவர் தள்ளிக்கொண்டு வந்தார். அப்போது விமான நிலையத்தில் தயாராக இருந்த போலீசாரின் வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை, போலீசார் அந்த வாகனத்தில் ஏற்றினர்.

sivashankar baba

சென்னை விமான நிலையத்தில் இருந்து எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நள்ளிரவு 1 மணியளவில் சிவசங்கர் பாபாவை போலீசார் அழைத்து வந்தனர். அங்கு சிறிது நேரம் அவரை ஓய்வு எடுக்க சொன்னார்கள். பின்னர் சிவசங்கர் பாபாவிடம் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து சிவசங்கர் பாபாவிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் சரமாரியாக எழுப்பப்பட்டன.

sivashankar baba

அங்கு விசாரணை முடிந்ததும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சிவசங்கர் பாபா அழைத்துச் செல்லப்பட்டார். சிறைக்கு அனுப்பப்படும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால் அங்கு அவருக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அங்கு பரிசோதனைகள் முடிந்ததும், சிவசங்கர் பாபா செங்கல்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். போக்சோ நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய நீதிபதி விடுமுறையில் இருக்கக் கூடிய காரணத்தினால், மகளிர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

அப்போது தனக்கு ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா மனு அளித்திருந்தார். இந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

sivashankar baba

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் சிவசங்கர் பாபாவை அழைத்து வந்தபோது, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிவசங்கர் பாபா மீது உரிய தண்டனை அளிக்கக்கோரியும், அவருக்கு உதவியாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் மாணவர் அமைப்பினர் மற்றும் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

 

படங்கள்: ஸ்டாலின், அசோக்குமார், குமரேசன்

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்