Skip to main content

”10 டன் பீரங்கியால் மாவீரன் சிங்கம் செட்டி உடலை சிதறவைத்த வெள்ளைக்காரன்” - கமுதி போரின் பின்னணி விளக்கும் ரத்னகுமார் 

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

writer rathnakumar about singam shetty

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கழுதி கோட்டை போர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"இன்றைக்கு தாஜ்மகாலையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும் வரலாற்று பொக்கிஷங்கள் என்கிறோம். ஆனால், அதைவிட பெரிய வரலாற்றுப் பொக்கிஷமாக கமுதி கோட்டை உள்ளது. அங்கு நம் ஆட்களைப் பீரங்கி முன்னால் நிற்க வைத்து வெள்ளைக்காரன் சுட்டுத் தள்ளியிருக்கிறான். அவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கோட்டை இன்று கவனிப்பற்று கிடைக்கிறது. நம்முடைய வரலாறு அனைத்தையுமே வெள்ளைக்காரன் ஆவணமாகப் பதிவு செய்துள்ளான். ஆனால், இன்றைக்கு நம் ஆட்கள் அதை எடுத்துப் படித்துப் பார்ப்பதுகூட இல்லை. 

 

மயிலப்பன் சேர்வை, முத்துக்கருப்பத் தேவர், சிங்கம்செட்டி, ஜெகநாத ஐயர் பற்றியெல்லாம் பலருக்கும் தெரிவதில்லை. ஆஷ் துரைக்கு வாஞ்சிநாதன் குறிவைப்பதற்கு முன்னரே, லூசிங்டன் என்ற கலெக்டருக்கு குறி வைத்தவர்கள் மயிலப்பன் சேர்வையும் ஜெகநாத ஐயரும். இவர்களது குறியிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக  லூசிங்டனே எழுதியிருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மனை கொல்வதற்கு முன்பாக பானர்மேன், கொடூரமான படைத்தளபதியான மில்லர், அக்னியூவ் கமுதிக்கு படையெடுத்துவருகின்றனர். அப்போது மயிலப்பன் சேர்வை தலைமையிலான நம்முடைய புரட்சிக்காரர்கள் கமுதி கோட்டையை கைப்பற்றி விடுகின்றனர். அங்குதான் நெல் உள்ளிட்ட அனைத்தையும் வெள்ளைக்காரன் சேமித்து வைத்திருந்தான். அதைக் கைப்பறி நம்முடைய ஆட்களுக்கு விநியோகம் செய்ததால் வெள்ளைகாரனுடன் மிகப்பெரிய சண்டை வெடிக்கிறது. அந்தச் சண்டையில் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த சிங்கம்செட்டி வெள்ளைக்காரனிடம் சிக்கி விடுகிறார். 10 டன் எடைகொண்ட பீரங்கி முன்னால் நிற்க வைத்து அவரைச் சுட்டு வீழ்த்துகிறார்கள். கவர்னர் எட்வர்ட் க்ளைவுக்கு எழுதிய கடிதத்தில் கலெக்டர் லூசிங்டன் இதைப் பதிவு செய்திருக்கிறான். 

 

ஜெகநாத ஐயரை யார் என்றே அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஐயர் என்றால் கொண்டை போட்டுக்கொண்டு சாதுவாக இருப்பான் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஜெகநாத ஐயர் திடகாத்திரமான உடலமைப்புடன் பயங்கரமாக சண்டை செய்துகொண்டிருந்தார். அந்தச் சண்டையில் வெள்ளைகாரனின் கையில் படமால் மயிலப்பன் சேர்வை, முத்துக்கருப்பத் தேவர், ஜெகநாத ஐயர் தப்பித்துவிட்டனர். அதன் பிறகான மயிலப்பன் சேர்வை மற்றும் ஜெகநாத ஐயரின் எழுச்சி மிகப்பெரியது.

 

இது மாதிரியான நம்முடைய வரலாறெல்லாம் தூசி படிந்து கிடக்கிறது. அதைத் தட்டியெடுத்து படிக்க வேண்டும். நம்முடைய சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வரலாற்றை படிக்கும்போதுதான் நமக்கு தேசப்பற்றும், அந்தத் தலைவர்களின் மீது மரியாதையும் வரும்".

 


Next Story

5 ரூபாய்க்கு வேலைக்கு வந்தவர் ஆற்காட்டை கைப்பற்றியது எப்படி? - சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களை விளக்கும் ரத்னகுமார்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ராபர்ட் க்ளைவ் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”நான் ராபர்ட் க்ளைவின் மிகப்பெரிய ரசிகன். அலெக்சாண்டர், நெப்போலியன் போல ராபர்ட் க்ளைவும் வரலாற்று நாயகன். அடிதடி, வெட்டுக்குத்து எதற்கும் அஞ்சாதவன் ராபர்ட் க்ளைவ். ஹைதர் அலி வேகமாக முன்னேறுவதில் வல்லவர். மருதநாயகம் வியூகம் வகுப்பதில் வல்லவர். இந்த இரண்டையும் ஒருசேரப் பெற்றவர் ராபர்ட் க்ளைவ். வெறும் 500 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு ஆற்காட்டைப் பிடித்துக்காட்டியவர். 

 

இந்தியா பற்றிய அறிவை ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்த நூலகத்தில்தான் நான் கற்றுக்கொண்டேன் என்று  ராபர்ட் க்ளைவ் பதிவு செய்துள்ளார். அவர் இந்தியாவிற்கு வந்தபோது அவருடைய வயது 19. கிளர்க் வேலைக்காக வந்தவருக்கு 5 ரூபாய் சம்பளம். பின், சில காலம் குடோனில் கணக்குவழக்கு எழுதியுள்ளார். அதன் பிறகு ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்த நூலகத்தில் புத்தகத்தைத் துடைத்து வைக்கும் வேலை பார்த்திருக்கிறார். 

 

அந்த நூலகத்தில் வெள்ளைக்காரர்கள் எழுதிய புத்தகம்தான் இருக்கும். கடுக்காய் மையைப் பயன்படுத்தித்தான்  வரலாற்றைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். அதை விருப்பு வெறுப்பு இன்றி உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை படித்துத்தான் இந்தியர்களை அடையாளம் கண்டதாக  ராபர்ட் க்ளைவ் பதிவுசெய்துள்ளார். வெறும் கிளர்க்காக பணியில் சேர்ந்த  ராபர்ட் க்ளைவ், ஆறு வருடங்களிலேயே லாரன்ஸ் ஸ்டிங்கர் மூலமாக ஆர்மி கேப்டனாகிவிடுகிறார்.  

 

திருச்சியில் ஆற்காடு நவாப் முகமது அலி சண்டை செய்துகொண்டு இருக்கிறார். அவருக்குப் பிரிட்டிஷ் ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறது. பிரெஞ்சு படைகள் சந்தா சாஹேப்பிற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இருந்தன. அந்த சமயத்தில் பிரெஞ்சு படைகளை ஒப்பிடும்போது பிரிட்டிஷ் படைகள் சற்று பலவீனமாக இருந்தன. இந்த திருச்சி முற்றுகையில் சந்தா சாஹேப் தோல்வியடைகிறார். அதற்கு முக்கிய காரணம் ராபர்ட் க்ளைவ் வகுத்த நேர்த்தியான போர் வியூகம்தான். 

 

இந்தச் சண்டையின்போது பிரெஞ்சு படைகள் வலுவுடன் இருந்ததால் சந்தா சாஹேப்பை தாக்க வேண்டுமா என்று பிரிட்டிஷுக்கு யோசனை இருந்தது. அப்போது ராபர்ட் க்ளைவ்தான், சந்தா சாஹேப்பை வீழ்த்த இங்குதான் அடிக்க வேண்டும் என்றில்லை; ஆற்காட்டிலும் அடிக்கலாம் என்று யோசனை கூறுகிறார். ஆற்காட்டுக் கோட்டையில் சந்தா சாஹேப்பின் மொத்த குடும்பமும் இருந்தது. அப்போது ராபர்ட் க்ளைவ்வுக்கு 30 வயதுக்குள்தான் இருக்கும். பிரிட்டிஷ் உயரதிகாரிகள் அந்த யோசனையை ஏற்கவில்லை. நான் செய்துகாட்டுகிறேன், எனக்கு ஒருநாள் அவகாசமும் 500 பேரும் கொடுங்கள் என ராபர்ட் க்ளைவ் கேட்டுள்ளார். தான் சொன்னது போலவே 500 பேரோடு சென்று ஒரு குண்டைக்கூட வெடிக்கச் செய்யாமல் ஆற்காட்டைக் கைப்பற்றிக்காட்டினார் ராபர்ட் க்ளைவ்”.     

 

Next Story

”’கருங்காலிப் பயலே’னு திட்டுறோமே, அதன் அர்த்தம் தெரியுமா?” - உண்மையை உடைக்கும் எழுத்தாளர் ரத்னகுமார்

Published on 16/06/2022 | Edited on 22/06/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கருங்காலி என்ற சொல்லுக்கான பெயர்க்காரணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"தோகத்தி மரத்தைத்தான் கருங்காலி மரம் என்று அழைப்பார்கள். நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் இருக்கும் தோகத்தி கருமை நிறத்தில் இருக்கும். அந்த மரத்தை அரிவாள் கொண்டு வெட்டவே முடியாது. கருங்காலி மரக்கட்டை கோடாலி, ஈட்டி, வேல் கம்பு செய்வதற்குப் பயன்படும். அந்தக் கட்டையை பாறையில் அடித்தால்கூட உடையாது, தெறிக்காது. 

 

கருங்காலிப் பயலே என்று சிலர் திட்டி கேட்டிருப்போம். அதற்கு என்ன காரணம்? தற்போது கருங்காலி மரம் வெட்ட நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தக் காலத்தில் கருங்காலியை வெட்ட வேண்டுமென்றால் கோடாரியைத்தான் பயன்படுத்துவார்கள். கோடாரி வலிமையாக இருக்க வேண்டுமென்பதால் கருங்காலி கட்டையில்தான் அதன் கைப்பிடி செய்யப்பட்டிருக்கும். கருங்காலி கட்டையில் செய்யப்பட்ட கோடாரி கருங்காலி மரத்தை வெட்டவே பயன்படுவதால், தன்னுடைய இனத்தை காட்டிக்கொடுப்பவனை குறிப்பிட கருங்காலி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. கருங்காலி என்பதற்கான பெயர்க்காரணம் இதுதான்".