Skip to main content

இறந்தவர்களைப் புதைக்கவும் நிலமில்லை! - பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகளின் அவலம்

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
Perumbakkam

 

 

 

சென்னையில் கூவம் நதியோரத்தில் குடிசை அமைத்து வாழ்ந்துவந்த பெருவாரியான மக்களை, ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயருடன் அப்புறப்படுத்தியது சென்னை உயர்நீதிமன்றம். அவர்கள் சென்னையோடு தொடர்பில் இல்லாத பெரும்பாக்கம், கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். வானுயர்ந்த கட்டடங்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அந்த மக்களுக்கு இன்றுவரை எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டும், அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே சுடுகாடு அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு கூறிய மாநில மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய உத்தரவை குடிசை மாற்று வாரியம் கிடப்பில் போட்டதே அதற்கான சாட்சி.
 

சென்னையில் இருந்து கண்ணகிநகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி வெளியேற்றப்பட்ட மக்கள் படும் இன்னல்களைப் பற்றி தொடர்ந்து குரலெழுப்பி வரும் மக்களிசைப் பாடகரும், தண்டோரா நடுவம் அமைப்பைச் சேர்ந்தவருமான இசையரசுவிடம் பேசினேன்.
 

 

​Isai

“பெரும்பாக்கத்தில் 21,820 குடியிருப்புகள் இருக்கின்றன. 8 மாடிக் கட்டிடங்களில் வரிசைக்கு ஐந்து/ஆறு வீடுகள் என 200 ப்ளாக்குகள் இருக்கின்றன. இங்கு ‘வசித்து’வரும் மக்கள் தாங்கள் ‘வாழ்ந்து’வந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ‘ரேஷன், ஆதார் கார்டுகள் இருப்பதால் மட்டுமே உங்களை பூர்வகுடிகளாக ஏற்கமுடியாது; நீங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள்தான். பெரும்பாக்கம் செல்லுங்கள். உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் ஏற்படுத்தித் தர உத்தரவிடுகிறோம்’ என்றது சென்னை உயர்நீதிமன்றம். கையோடு, ‘இந்த மக்களை பெரும்பாக்கம் குடியிருப்பில் வைத்து புகைப்படம் எடுக்கவேண்டும். அவர்கள் அங்கேயே இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்’ என காவல்துறைக்கு உத்தரவிட்டார் நீதிபதி வைத்தியநாதன். நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பெரும்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து குடியமர்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
 

இங்கு மருத்துவமனை, பள்ளிக்கூடம், காவல்நிலையம், நூலகம் என எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தாமல் வெறுமனே கட்டிடங்களை எழுப்பி மக்களைத் தங்க வைத்துள்ளனர். சிசிடிவி கேமராக்கள், குப்பைத்தொட்டிகள் என எதுவுமே கிடையாது. இறந்தவர்களைப் புதைக்க சுடுகாடு கூட இல்லை. இங்குள்ள பெண் குழந்தைகள் உடல்சார்ந்த மிக மோசமான தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு இளம் வயது விதவைகள் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தும் அவலத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆரம்ப சுகாதார நிலையம்கூட இல்லாததால் மழைக்காலங்களில் வரும் வியாதிகளுக்கு இந்த மக்கள் என்ன செய்வார்கள் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் யோசிப்பதே கிடையாது.
 

 

 

இதுபோலவே கண்ணகி நகர், செம்மஞ்சேரி பிரச்சனைகள் இருந்தபோது மக்கள் ஒன்றுதிரண்டு போராடியதாலும், மீடியாக்கள் தொடர்ந்து எழுதியதாலும் குறைந்தபட்ச வசதிகள் செய்துதரப்பட்டன. அதனாலேயே பெரும்பாக்கத்தில் மக்கள் அரசியலாக ஒன்று திரள்வதை நூதனமுறையில் தடுத்துவருகிறது குடிசைமாற்று வாரியம். இங்கு குடிசைமாற்று வாரியம்தான் பிரதமர், சி.எம்., அமைச்சர்கள் எல்லாமே. அரசின் நிழலே படாததுதான் பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகள்” என்றார் ஆதங்கத்துடன். 
 

இதுபற்றி சோழங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், “இந்த மக்களைப் பற்றி குடிசைமாற்று வாரியம் துளியளவும் யோசிப்பதில்லை. அலட்சியமாக செயல்படுகிறது” என குற்றம்சாட்டுகிறார்.
 

 

 

முன்னதாக பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட இசையரசு, “ஐம்பது வருடங்களாக ஆக்கிரமிப்பில் வாழ்ந்துவந்த மக்கள், ஏன் நாம் சொந்த நிலம்கூட இல்லாமல் வாழ்கிறோம் என்கிற கேள்வியை சுயமாக எழுப்பிக் கொள்ளவில்லை. அவர்களின் சென்னை வாழ்க்கையான முதல்பாதியின் வரலாற்றை அவர்களுக்குப் புரியவைக்காமல், சென்னைக்கு வெளியில் இருக்கும் அவர்களது மீதிப்பாதி மோசமான வாழ்வைப் பற்றி பேசிப் பிரயோஜனமில்லை” என்றார்.
 

தமிழகத்திலேயே தனித்தீவு போல் வாழும் இம்மக்களின் அவலக்குரல் அரசுக்கு எப்போதுதான் கேட்குமோ?
 

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய பரபரப்பு கடிதம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Wife who lost her husband passed away in Chennai

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பிரவீனும் ஷர்மிளாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களை மறந்த இவர்கள் தங்களது காதலைத் தொடர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக ஷர்மிளாவுக்கு தனது சொந்த சமூகத்திலேயே திருமண வரன் பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, இச்சம்பவம் குறித்து தன் காதலனான பிரவீனிடம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய ஷர்மிளா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன் காதலன் பிரவீனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி 2 மாதங்கள் வெளியூரில் வசித்துவந்த நிலையில் ஜனவரி மாதம் தான் பள்ளிக்கரணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஷர்மிளாவின் அண்ணனான தினேஷ் என்பவர் பிரவீனை கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பிரவீன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மனைவி ஷர்மிளாவுடன் இருந்த பிரவீன், இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது 4 நண்பர்களுடன் வந்து பிரவீனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் பிரவீன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிரவீன் கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், வெட்டுக்காயங்களுடன் இருந்த பிரவீனின் உடலைப் பார்த்து அழுததில் அந்த இடம் முழுக்க சோகத்தில் மூழ்கியது.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடை வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 4 நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், இந்த வழக்கை துரிதப்படுத்திய பள்ளிக்கரணை உதவி ஆணையர் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரவீனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஷர்மிளா, தனது கணவன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவீன் கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, சிறையில் இருக்கும் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்த நிலையில் இது ஷர்மிளாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். அதே நேரம், தனது கணவரை இழந்த துக்கம் தாளாமல் இருந்த ஷர்மிளா போலீசாரின் அலட்சிய போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில்  தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிய ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதியன்று அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், ஷர்மிளாவுக்கு கழுத்து எலும்பு, நரம்பு, உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷர்மிளா, கடந்த திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்ட 2 மாதங்களில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.

அதே வேளையில், ஷர்மிளா தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என்று ஷர்மிளா தன்னுடைய குடும்பத்தார் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரவீனின் மாமியார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.