Skip to main content

விஜய் ஆண்டனி இதை கன்சிடர் செய்வாரா? - 'கோடியில் ஒருவன்' விமர்சனம் 

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

bbnfxn

 

‘பிச்சைக்காரன்’ தந்த மிகப்பெரிய வெற்றி நடிகர் விஜய் ஆண்டனியை முன்னணி நடிகர்களில் ஒருவராக அடையாளம் காட்டியது. அதன்பிறகு அப்படியொரு வெற்றி படத்தை மீண்டும் கொடுக்க வேண்டும் என விஜய் ஆண்டனி முயற்சி செய்தாலும், அதற்கான பலன் இதுவரை பெரிதாக கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். தற்போது மீண்டும் அதேபோல் ஒரு முயற்சியையே 'கோடியில் ஒருவன்' படத்திலும் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. எடுத்த முயற்சி வெற்றியா..? தோல்வியா..?

 

ஒரு மலைக் கிராமத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. பெரிய லோக்கல் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகிறார். வந்த இடத்தில் சரியாக படிக்காமல் ரவுடிசம் செய்துகொண்டிருக்கும் டீனேஜ் சிறுவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். இது அங்கிருக்கும் கீழ்மட்ட தாதாக்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் பிடிக்காமல் போக, விஜய் ஆன்டனிக்கும், அங்குள்ள கவுன்சிலருக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் விஜய் ஆண்டனியின் ஐ.ஏ.எஸ். ஆகும் கனவை கவுன்சிலர் தகர்கிறார். அம்மாவின் ஆசைப்படி கலெக்டர் ஆக முடியாமல் போகும் விஜய் ஆண்டனி வில்லன்களைக் காலி செய்ய அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி முடிவுகள் என்ன..? என்பதே 'கோடியில் ஒருவன்' படத்தின் மீதி கதை.

 

grhrehrde

 

ஒரு பக்கா கமர்ஷியல் ஃபார்முலாவில் அதிரடி ஆக்சன் நிறைந்த திரைக்கதை மூலம் முதல் பாதியை ஜெட் வேகத்தில் நகர்த்தியுள்ளார் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன். சரியான கலவையில் அமைந்த அம்மா சென்டிமென்ட் காட்சிகள், ஜனரஞ்சகமான ஆக்சன் காட்சிகள், விளிம்புநிலை மக்களின் எதார்த்த வாழ்வியலின் அழுத்தமான பிரதிபலிப்பு, அங்கிருக்கும் மக்களின் அவல நிலை, அதிலிருக்கும் அபாயகரமான அரசியல், அதை அமைதியாகவும், நேர்த்தியாகவும் சமாளிக்கும் நாயகன் என எந்த இடத்திலும் கொஞ்சம் கூட அயர்ச்சி ஏற்படாதவாறு சாமர்த்தியமாக காட்சிகள் அமைத்து ரசிக்கவைத்துள்ளார் இயக்குநர். ஆனால் இதே வேகமும், நேர்த்தியும் இரண்டாம் பாதியில் தொடராதது சோகமே! இரண்டாம் பாதி முழுவதும் அரசியல், பிரச்சாரம், மக்கள் பணி, பதவிப் போட்டி என முழுக்க முழுக்க ஓட்டு அரசியலுக்குள்ளேயே கதை பயணிக்கிறது. இதனால் முதல் பாதி திரைக்கதையில் இருந்த வேகமும், நேர்த்தியும் இரண்டாம் பாதியில் இல்லாமல் படம் தடுமாறியுள்ளது. ஒரு எதிர்பார்ப்பை முதல் பாதியில் சிறப்பாக ஏற்படுத்தி அதை இரண்டாம் பாதியில் பூர்த்திசெய்ய முடியாமல் தடுமாறியுள்ளது படம். இருந்தும், இறுதிக்கட்ட காட்சிகள் சற்று நிமிர்ந்து உட்காரவைக்கும் விதமாக அமைந்திருப்பது ஆறுதல்.

 

jtrjtrfj

 

விஜய் ஆண்டனி எப்போதும் போல் அமைதியாக இருந்தே காரியத்தை சாதிக்கிறார். நடிப்பில் அதிகம் அலட்டல் இல்லாத அவரின் பழைய பாணியையே இப்படத்திலும் தொடர்ந்துள்ளார். இவருக்கும் அம்மாவுக்குமான நெகிழ்ச்சியான காட்சிகளிலும் சரி, வில்லன்களுடன் மோதும் காட்சிகளிலும் சரி அளவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிக்கவைத்துள்ளார். ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்குதான் இதே பாணி அவருக்கு கைகொடுக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதை விஜய் ஆண்டனி சற்று கன்சிடர் செய்ய இதுவே சிறந்த நேரம் என தோன்றுகிறது!   

 

கடமைக்கு வைக்கப்பட்டுள்ள ஹீரோயின் கதாபாத்திரத்தில் கடமைக்கு வந்து தன் கடமையை செய்துள்ளார் நாயகி ஆத்மிகா. படத்தில் இந்தக் கேரக்டர் அவசியமா..? என்ற எண்ணமே அதிகமாக தோன்றுகிறது! மிரட்டல் வில்லன்களாக வரும் ‘பூ’ ராம், கே.ஜி.எஃப். ராமச்சந்திர ராஜு, சூப்பர் சுப்புராயன், பாகுபலி பிரபாகர், சூரஜ் போப்ஸ் ஆகியோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேஸில் புகுந்து விளையாடி இருக்கின்றனர். அவரவருக்கு சரியான முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரம். அதை அனைவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல் இப்படத்தில் வரும் சிறுவர்களும் தேர்ந்த நடிகர்களுக்கு நிகராக மண்மணம் மாறாமல் சிறப்பாக நடித்துள்ளனர். அம்மா கதாபாத்திரத்தில் வரும் திவ்ய பிரபா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிந்துள்ளார். இவரின் கதாபாத்திரமே படத்தின் ஆணிவேராக அமைந்து படத்தின் வெற்றியை ஓரளவு உறுதிசெய்ய உதவியுள்ளது.

 

bfnhfdnhd

 

படத்துக்கு மிகப்பெரிய பலமாக ஒளிப்பதிவாளர் என்.எஸ். உதயகுமாரின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. ஏழைகளின் குடியிருப்பு பகுதிகளின் சின்னச் சின்ன ஏரியாக்களைக் கூட சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் அழகாகவும், அழுத்தமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் கேமரா கோணங்களை சுழற்றியடித்து மிரட்டியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது. கேட்ட பின் மனதில் பதிய மறுக்கிறது. பின்னணி இசை சொல்லிக்கொள்ளும் அளவு படத்துக்கு வேகம் கூட்டியுள்ளது. 

 

நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் ஒரு படித்த இளைஞன், கவுன்சிலர் ஆகும் பட்சத்தில் எந்த அளவு சமூகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்ற விழிப்புணர்வை சிறப்பாகவும், மிதமான வேகத்துடனும் கூறியுள்ள இப்படத்தில், முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியிலும் தொடர்ந்திருந்தால் பிளாக்பஸ்டர் ஹிட் வரிசையில் இணைந்திருக்கலாம்.

 

‘கோடியில் ஒருவன்’ - தரமான முயற்சி!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

விஜய் ஆண்டனிக்கு காதல் கதை கைகொடுத்ததா? - ரோமியோ விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
vijay antony mirnalini ravi romeo movie review

அதிகமாக கிரைம் கில்லர் மற்றும் சென்டிமென்ட் படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்ற விஜய் ஆண்டனி இந்த முறை காதல் திரைப்படம் மூலம் களத்தில் குதித்து இருக்கிறார். முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக வெளியாகி இருக்கும் ரோமியோ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா, இல்லையா? 

தன் குடும்பத்திற்காக வாங்கிய கடனை அடைத்து நல்ல நிலைமைக்கு வர மலேசியாவுக்கு சென்று வேலை செய்துவிட்டு நன்றாக சம்பாதித்து அனைத்து பிரச்சனைகளையும் முடித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்புகிறார் விஜய் ஆண்டனி. இதனாலேயே அவருக்கு வயது முதிர்ந்து விடுகிறது. இருந்தும் தன்னுடைய பிரைம் டைமில் செய்ய முடியாத காதலை இனிவரும் நாட்களில் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் விஜய் ஆண்டனி, ஒரு மரண நிகழ்வில் நாயகி மிருணாளினியை பார்க்கிறார். விஜய் ஆண்டனிக்கு கண்டவுடன் காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே தன் குடும்பத்துக்கு தெரியாமல் சென்னையில் ஐடியில் வேலை செய்வதாக சொல்லிவிட்டு சினிமாவில் மிகப்பெரிய ஹீரோயினாக வேண்டும் என்ற முனைப்பில் கிடைக்கின்ற சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டு சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கும் மிருணாளினி வீட்டில் மாட்டிக்கொள்கிறார்.

vijay antony mirnalini ravi romeo movie review

இதைத்தொடர்ந்து அவருக்கும் விஜய் ஆண்டனிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அப்பொழுது மிருணாளினி, விஜய் ஆண்டனிக்கு கண்டிஷன் போட்டு தான் சென்னையிலேயே வசிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவரை திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு விஜய் ஆண்டனியும் சம்மதிக்க திருமணம் ஜோராக நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு சென்னை வரும் விஜய் ஆண்டனிக்கு மிருணாளினியின் சுயரூபம் வெளிப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகும் அவர் பிறகு தன்னை தேத்திக்கொண்டு மிருணாளினியின் ஆசையை நிறைவேற்ற தானே ஒரு தயாரிப்பாளராக மாறுகிறார். இதையடுத்து மிருணாளினி பெரிய கதாநாயகியாக மாறினாரா, இல்லையா? விஜய் ஆண்டனியும் அவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

பாலிவுடில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ரப்னே பனாதி ஜோடி’ படத்தை உல்டா செய்து அதை தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி சுவாரஸ்யமான ஒரு காதல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். என்னதான் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய ஒரு திரைக்கதை வைத்து உருவாகிய படமாக ரோமியோ இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் அயற்சி ஏற்படாதவாறு சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள் யூகிக்கும்படி இருந்தாலும், அதே போல் படத்தின் முடிவும் நாம் ஏற்கனவே யூகித்தபடி இருந்தாலும் படம் பார்ப்பதற்கு எந்த ஒரு இடத்திலும் சுவாரசியம் குறையாமல் செல்வது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

திருமணமே பிடிக்காத கதாநாயகிக்கு திருமணத்திற்குப் பிறகு நாயகியை நாயகன் ஒன்சைடாக காதல் செய்து எப்படி கரெக்ட் செய்கிறார் என்ற கதைக் கருவை வைத்துக்கொண்டு தமிழுக்கு ஏற்றாற் போல் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் படத்தை கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தியில் வெளியான ரப்னே பனாதி ஜோடி படத்தில் எந்த அளவு கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஒரு ஆழமான தொடர்பு இருந்து ரசிகர்களை ரசிக்க வைத்ததோ, அதேபோல இந்த படத்திலும் வேறு ஒரு கதைக் கருவை வைத்துக் கொண்டு அதே மாதிரியான திரைக்கதை மூலம் அதே ஆழமான அழுத்தமான கதாபாத்திரத் தொடர்பை சரியாக கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார்கள். 

vijay antony mirnalini ravi romeo movie review

விஜய் ஆண்டனி வழக்கம்போல் அமைதியான நடிப்பின் மூலம் கவர்கிறார். எந்த வகையான கதையாக இருந்தாலும் தனது ட்ரேட் மார்க் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை கொடுக்க முயற்சி செய்கிறார். அந்தந்த கதைக்கு ஏற்றவாறு ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை சரியாக கொடுத்து படத்திற்கும் பக்கபலமாக அமைகிறார். அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். நாயகி மிருணாளினி நாம் இதுவரை பார்த்த படங்களில் இல்லாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் அப்படியே பொருத்தமாக இருக்கும் படியான தோற்றமும் நடிப்பும் கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவருக்கும் விஜய் ஆண்டனிக்குமான கெமிஸ்ட்ரி சுவாரசியமாக அமைந்து படத்துக்கு பிளசாக அமைந்திருக்கிறது. வழக்கம்போல் யோகி பாபு வந்து செல்கிறார் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இவரை காட்டிலும் விடிவி கணேஷ் பல இடங்களில் நன்றாக கிச்சுகிச்சு மூட்டி இருக்கிறார். இவருக்கும் விஜய் ஆண்டனிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மற்றபடி படத்தில் வரும் மற்ற நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

பரத் தனசேகர் மற்றும் ரவி ராய்ஸ்டர் இசையில் பாடல்கள் வித்தியாசமான முயற்சியில் ரசிக்க வைத்திருக்கின்றன. பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. ஃபாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவில் படத்தின் சென்னை சம்பந்தப்பட்ட காட்சிகளும் சினிமா சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தி சினிமாவுக்கும் இது பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு இந்த கதை புதிது. இந்தி சினிமாவை பார்க்காத தமிழ் ரசிகர்களுக்கும், பார்த்த தமிழ் ரசிகர்களுக்கும் நல்ல என்டர்டைன்மென்ட் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. 


ரோமியோ - மினிமம் கியாரண்டி!