Skip to main content

விஜய் சேதுபதியா இது? வைரலான புகைப்படம் குறித்த உண்மை விளக்கம்  

Published on 21/09/2018 | Edited on 21/09/2018

சமூக ஊடகங்களில் எந்த அளவுக்கு உண்மை பரவுகிறதோ, அதை விட வேகமாக பொய் பரவுகிறது. பல முறை இதைப் பார்த்திருக்கிறோம். இன்று அப்படி ஒன்று நடந்திருக்கிறது.

 

krushi



நரை முடி, நரை தாடியுடன் கையில் ஒரு பையுடன் நடந்து வரும் எளிமையான முதியவரின் படமொன்று 'கடைசி விவசாயி' படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய தோற்றம் என்ற பெயரில் பரவியது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதியின் அர்ப்பணிப்பைப் பாராட்டித் தள்ளியதோடு அதை ஷேர் செய்யும் தங்கள் தார்மீகக் கடமையை தீவிரமாக செய்தார்கள். நம்பியவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஏனெனில் சமீபத்தில் வெளிவந்த 'சீதக்காதி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் விஜய் சேதுபதியின் தோற்றம் மிக வித்தியாசமாக இருந்தது. அவர் என்று யாராலும் எளிதில் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் இதுவும் உண்மை என்று நம்பினார்கள். துயரம் என்னவெனில், இந்தப் புகைப்படத்தை ஒரு செய்தித்தாள், தொலைக்காட்சி ஆகியவற்றின் சமூக வலைதள பக்கமும் விஜய் சேதுபதி என்று குறிப்பிட்டு பகிர்ந்ததுதான்.

 

seethakkadhi

சீதக்காதி



உண்மையில் அந்தப் புகைப்படத்தில் இருந்தவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞரும் இலக்கிய ஆர்வலருமான க்ருஷி. சென்னையில் நடந்த ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தபோழுது எடுக்கப்பட்ட  புகைப்படம்தான் இவ்வாறு பரவியது. இதற்கு முன்பும் பல படங்களுக்கு ரசிகர்களே ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலிருந்து ட்ரைலர் வரை அனைத்தையும் உருவாக்கி வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், இன்றோ இப்படி ஒரு நகைச்சுவை சமூக ஊடக வட்டத்தில் இன்று நிகழ்ந்துள்ளது.         

புகைப்படத்துடன் அடிபட்ட திரைப்படமான 'கடைசி விவசாயி', இயக்குனர் 'காக்கா முட்டை' மணிகண்டன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிவரும் திரைப்படம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி காது கேளாத ஒரு வயதான விவசாயி பாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.    




     

சார்ந்த செய்திகள்

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.