Skip to main content

தமிழ் ரசிகர்களுக்கு வாக்குறுதி அளித்த அர்ஜுன் ரெட்டி 

Published on 09/03/2018 | Edited on 10/03/2018
vijay devar


'அர்ஜுன் ரெட்டி' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா அடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் 'நோட்டா' படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடா நடிக்கிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில்  இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட  விஜய் தேவரகொண்டா பேசியபோது...."பெள்ளி சூப்புலு' படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். அர்ஜுன் ரெட்டி வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் எனக்கு பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன். இயக்குநர் ஆனந்த், என்னை சந்தித்து கதையை சொன்னார். அப்போது நான் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்கமுடியவில்லை. பிறகு அவரிடம் இந்த கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன் என்று சொன்னேன். பிறகு சற்று ஒய்வு கிடைத்தவுடன் இந்த கதையை முழுமையாக கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழை கற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மக்கள் முதல்வர் தெரியும், திடீர் முதல்வர் தெரியும், ரௌடி முதல்வர் தெரியுமா? - நோட்டா விமர்சனம் 

Published on 06/10/2018 | Edited on 06/10/2018

அமைதிப்படை, மக்களாட்சி, முதல்வன், கோ... ஒரு புறம், ஜி, ஆயுத எழுத்து, சகுனி மறுபுறம் என தமிழ் சினிமாவில் அரசியல் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளையும் தோல்விகளையும் பதிவு செய்திருக்கின்றன. இதில் எந்த வரிசையில் நோட்டா இணைகிறது என்று பார்ப்போம். தெலுங்கு தேசத்தில் 'பெல்லி சூப்புலு' படம் மூலம் மிகவும் பிரபலமடைந்து பின் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் ஆகிய படங்கள் மூலம் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்த விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேரடி தமிழ் படமாக வந்துள்ளது நோட்டா.
 

nota vijay



முதல்வராக இருக்கும் நாசர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி கைது செய்யப்பட இருப்பதால், லண்டனில் ஜாலியாக ஊர் சுற்றி கும்மாளம் அடித்துக்கொண்டு, கேம் டெவலப்பராக வேலை பார்க்கும் தன் மகன் விஜய் தேவரகொண்டாவை ஒரே இரவில் சி.எம் ஆக்குகிறார். ஆரம்பத்தில் தனக்கு பிடிக்காமல் வேண்ட வெறுப்புமாக பதவி ஏற்கும் விஜய் தேவரகொண்டா பின்னர் ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியின் உன்னதத்தை உணர்ந்து, பத்திரிகையாளர் சத்யராஜின் ஆலோசனைப்படி பொறுப்பாக ஆட்சி நடத்தும் வேளையில் ஏற்படும் எதிர்ப்புகளையும், சவால்களையும் சமாளித்தாரா இல்லையா என்பதே 'நோட்டா'.

நிகழ்கால அரசியல் சூழலை கதையின் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையில் படத்தைத் தாங்கி நிற்கும் இரு தளபதிகளாக சத்யராஜும், நாசரும் நடித்துள்ளனர். அரசியல் படம் என்பதால் சத்யராஜும், நாசரும் கரும்பு தின்னக்  கூலியா என்பதுபோல் காட்சிக்கு காட்சி சுலபமாகப் புகுந்து விளையாடி விடுகின்றனர். இப்படி அரசியல் என்றால் என்ன என்பதை இவர்கள் வசனம் மட்டுமல்லாமல், உடல் மொழியிலும் காட்டி அசத்திக்கொண்டிருக்கும் வேலையில் இவர்களுக்கு சரியான டஃப் கொடுத்து நடித்துள்ளார் எம்.எஸ் பாஸ்கர். இவர்கள் இருவரும் மாறி மாறி வசனம் பேசி கவரும் வேலையில் சின்னச்  சின்ன அசைவுகள் மூலமே அப்லாஸ்களை தட்டிச் சென்றுவிடுகிறார் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். குறிப்பாக சொகுசு விடுதியில் நாசர் எம்.எல்.ஏக்களிடம் உணர்ச்சிபொங்க பேசும் இடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் காட்டும் உடல் மொழி வேற லெவல்.

 

nota sathyaraj



தெலுங்கு தேசத்திலிருந்து வந்தாலும் தமிழை ஒழுங்காக உச்சரித்ததற்கே விஜய் தேவரகொண்டாவிற்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட பயிற்சியும், உழைப்பும் தெரிகிறது. பத்திரிகையாளர்களிடம் உணர்ச்சிகரமான மிரட்டல் தொனியில் பேசுவது, மக்களுக்கு ஒரு பிரச்னை என்றவுடன் துரித நடவடிக்கையில் இறங்குவது, உருக்கமான காட்சியில் காட்டும் முகபாவம் என நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி தமிழுக்கு சரியான விதத்தில் அறிமுகமாகியுள்ளார். வெல்கம் டு தமிழ் சினிமா ப்ரோ.

படத்தின் நாயகி மெஹ்ரின் பிர்சாடாவிற்கு அதிக வேலை இல்லை. சொல்லப்போனால் இவரைக்காட்டிலும் பெண் அரசியல்வாதியாக வரும் சஞ்சனா நடராஜன் அந்த வேலையை சிறப்பாக செய்து மிரட்டியுள்ளார். தன் அறிமுகப்படத்திலேயே மனதில் பதியும்படியான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
 

nota nasser



எம்.எல்.ஏ க்கள் சொகுசு விடுதியில் குடித்து கும்மாளம் அடிப்பது, ஐ.சி.யு வார்டு அட்ராசிட்டி, ஸ்டிக்கர் பிரச்சனை, முதல்வரை பார்க்கும் எம்.எல்.ஏ க்கள் தலைகுனிந்தபடியே இருப்பது, இரவு நேர அறிக்கை, இடைத்தேர்தல் என நிகழ்கால அரசியல் நையாண்டியை கலந்துகட்டி கொடுத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். செம்பரம்பாக்கம் ஏரி திறந்து ஏற்பட்ட வெள்ளம் போன்ற சம்பவங்களை இக்கால நிகழ்வுகளோடு காட்சிப்படுத்தி அதிரடியாகக் கதை சொல்ல முயற்சி செய்துள்ளார். என்னதான் படத்தில் உள்ள பலமான காட்சிகள் ஆங்காங்கே ரசிக்கும் படி இருந்தாலும் முதல்பாதி முடிவில் ஏற்பட்ட எதிர்பார்ப்பை பிற்பாதியில் நிறைவாக பூர்த்தி செய்யாதது சற்று ஏமாற்றமே.

ரௌடி சி.எம் எனும் பில்ட்-அப்போடு வரும் இடைவேளைக்குப் பின் ரௌடி சி.எம் பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஷான் கருப்பசாமி எழுதிய வெட்டாட்டம் நாவலின் அடிப்படையில்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். திரைக்கதையை அவரும் இணைந்து எழுதியிருக்கிறார். ஆனால், அந்த விறுவிறுப்பு படத்தில் குறைவே. படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஏற்படும் சவால்களும் அவர் எதிர்கொள்ளும் வில்லன்களும் பலமாக இல்லை. நிகழ்கால அரசியல் சம்பவங்களை இணைத்தது தைரியம்தான், பாராட்டலாம். ஆனால், அந்தக் காட்சிகளை காமெடியாக அமைத்தாலே போதுமென்று நினைத்தது தவறாகிவிட்டது.

சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் விக்ரம் வேதாவிற்கு பிறகு நோட்டா உட்பட இவர் இசையில் வந்த படங்களின் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாததை அவர் சற்று சின்சியராக பரிசீலிப்பது நல்லது.  சந்தானகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்தை தரமாக உருவாக்க உதவியுள்ளது. 'அருவி' ரேமண்ட் டெரிக் க்ராஸ்டாவின் படத்தொகுப்பு ஷார்ப்பான கட்டிங்கால் படத்தை பரபரப்பாக்க முயற்சி செய்துள்ளது.     
 

நோட்டா - மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

 

 

Next Story

அஞ்சு மணி ஷோ... அதிரடி அரசியல்... - விஜய் தேவரகொண்டா என்ட்ரி எப்படி?

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

அர்ஜுன் ரெட்டி... தமிழ் இளைஞர்கள் வட்டாரத்தில் பிரபலமான பெயர். கிட்டத்தட்ட எல்லா தமிழ் இளைஞர்களும் பார்த்திருக்கும் தெலுங்கு படம்.

 

vijay arjun



இந்தப் படத்தின் மூலம்தான் விஜய் தேவரகொண்டா தமிழகத்துக்கு அறிமுகம். கட்டுக்கடங்காத தலைமுடி, சுதந்திரத்தை வெளிப்படுத்தும் தாடி என கரடு முரடு ஹீரோவாக கவர்ந்தவர் விஜய். அந்தப் படத்தில் அவரது ஸ்டைல், ராயல் என்ஃபீல்டு பைக், உடை, கூலர்ஸ் என அனைத்தும் தெலுங்கு தேசத்தைத் தாண்டி தென்னிந்தியா முழுவதுமுள்ள இளைஞர்களின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் ஆனது. இதற்கு முன் 'ப்ரேமம்' படத்தின் மூலமாக நிவின் பாலிக்கு அந்தப் புகழ் கிடைத்தாலும் அவரது அடுத்தடுத்த படங்கள் வேறு திசையில் சென்றுவிட்டன.

 

vijay in theatre

5 மணி காட்சி



அர்ஜுன் ரெட்டி மயக்கம் தெளியும் முன்பே வந்தது 'கீதா கோவிந்தம்'. ரக்கட் (rugged) டாக்டராக இருந்து ஹேண்ட்ஸம் ப்ரொஃபசர் ஆனார் விஜய். 'மேடம், மேடம்' என்று அவர் கெஞ்சியதில் தமிழக இளம் பெண்களும் மனதிறங்கிவிட்டனர். நேரடி தெலுங்கு படமான 'கீதா கோவிந்தம்' சென்னையில் பல வாரங்கள் பலத்த போட்டிகளைத் தாண்டி ஓடியது மிகப்பெரிய வெற்றி. சென்னையைத் தாண்டி பல ஊர்களிலும் திரையரங்குகளில் வெளியானது அதை விட பெரிய வெற்றி.  சோஷியல் மீடியாவில் வெளிப்பட்டு வந்த விஜய் தேவரகொண்டா ரசிகைகள், இன்று காலை சென்னை ரோகிணி திரையரங்கில் நடந்த அதிகாலை 5 மணி காட்சியில் கூடியது பெரிய ஆச்சரியம். கீதா கோவிந்தம் படத்துக்கு காலை 8 மணி காட்சி திரையிடப்பட்டதே பெரிய விஷயமாகப் பேசப்பட்டது.

'இன்கேம் இன்கேம்' என்ற அந்த ஒரு பாடலும் அதில் நடித்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடியும் போதுமானதாக இருந்தது அந்தப் படத்திற்குக் கூட்டத்தை இழுக்க. அந்தப் படத்தின் வெற்றி இப்போது நேரடியாக விஜய் நடிக்கும் முதல் தமிழ் படமான 'நோட்டா'வுக்கு காலை 5 மணி காட்சியை பெற்றுத் தந்துள்ளது. ஆரம்பத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் நால்வருக்கு மட்டுமே இந்த அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. பின்னர் சூர்யா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு இது வாய்த்தது. அவர்கள் அனைவருக்கும் பல படங்கள் வெற்றி பெற்ற பின் கிடைத்த இந்த வாய்ப்பு, விஜய் தேவரகொண்டாவுக்கு முதல் நேரடி தமிழ் படத்திலேயே கிடைத்துள்ளது. அவர் அதை மிகச் சரியாகப் பயன்படுத்தி வளர்க்கிறார். சென்னையில் நடந்த 5 மணி காட்சிக்கு வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார் விஜய் தேவரகொண்டா. படத்தின் பிரமோஷனுக்காக பல விதங்களில் நேர்காணல்கள் கொடுத்தார். 


 

nota vijay

நோட்டா

 

இவை படத்துக்கு வெளியே என்றால் 'நோட்டா' படத்தில் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கி கொண்டாட்டமாக இருந்ததில் இருந்து, சென்னை வெள்ளத்தின் போது அரசு நடந்து கொண்ட விதம் வரை தமிழக அரசை நேரடியாக கிண்டல் செய்யும் வகையில் பல காட்சிகளை வைத்து களத்தில் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் மாநில அரசியல்வாதிகளை நேரடியாக பலமாக விமர்சித்த படம் 'ஜோக்கர்' என்றே சொல்லலாம். பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் மாநில அரசை நேரடியாக விமர்சிக்கும், கிண்டல் செய்யும் தன்மை குறைவு. 'மெர்சல்' படத்தில் விஜய் அரசியல் பேசியிருந்தாலும் அது மேலோட்டமானதாக, பொதுவானதாக இருந்தது. அந்த வகையில், விஜய் தேவரகொண்டா கொஞ்சம் தைரியமாகத்தான் செய்துள்ளார். தன் பேட்டிகளிலும் அதிமுக அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கும் மரியாதைகளை கிண்டல் செய்து பேசியுள்ளார் விஜய். இப்படி, படத்தின் உள்ளடக்கத்திலும் படத்துக்கு கிடைத்த ஓப்பனிங்கிலும் விஜய் தேவரகொண்டாவின் என்ட்ரி அதிரடியாகத்தான் அமைந்துள்ளது.