Skip to main content

"கார்த்தி எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்" - தமன்னா

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

tamannaah speech in karthi 25 and japan event

 

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். இப்படம் கார்த்தியின் 25வது படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கார்த்தி25 என இரண்டு திரையுலகப் பயணத்தையும் ஒரு சேரக் கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்ட  விழா நடைபெற்றது. 

 

இந்தநிகழ்வில் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, கே.எஸ். ரவிகுமார், தமன்னா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் பா. ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ், பி.எஸ். மித்ரன், ஹெச். வினோத், உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் இந்த 20 வருடங்களில் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

 

நடிகை தமன்னா பேசும்போது, “கோலிவுட்டில் எனது ஆரம்ப நாட்களில் எனக்கு ஒரு போதும் நண்பர்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் கார்த்தி எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். சென்னையை எனக்கு சிறப்பானதாக ஆக்கியதற்காக ஞானவேல் ராஜா சார், சிவா சார் ஆகியோருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இதுபோன்ற மனிதர்கள் தான் சென்னை எனக்கு சிறந்ததாக இருக்கப் போகிறது என்கிற நம்பிக்கையை அளித்தார்கள். கார்த்தியுடன் பணியாற்றிய சமயத்தில் எப்போதும் சினிமாவைப் பற்றியும் அவருக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை பற்றியும் தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் வெற்றிகரமாக 25 படங்களை நிறைவு செய்துவிட்டார் என்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இனி அடுத்தடுத்து வரும் படங்களிலும் இதுபோன்று மிகப்பெரிய வெற்றியை அவர் பெறவேண்டும் என நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

 

இயக்குநர் சிறுத்தை சிவா பேசும்போது, “என்னுடைய பெற்றோர் எனக்கு சிவா என்று பெயர் வைத்தனர். ஆனால் கார்த்தி சாருடன் நான் இணைந்து பணியாற்றிய படம் எனக்கு முன்பாக சிறுத்தை என்கிற பெயரையும் சேர்த்து கொடுத்துவிட்டது. அதனால் அவர் எப்போதுமே எனக்கு ஒரு ஸ்பெஷலானவர் தான். அவர் அந்த அளவிற்கு ஒரு நேர்மையான உன்னதமான மனிதர். அவருடைய தொழிலுக்கு எப்போதுமே அவர் உண்மையாகவே இருந்திருக்கிறார். அவருடைய நிறைய விஷயங்களை தனது தொழிலுக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார். சிறுத்தை படப்பிடிப்பின் போது நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் அவர் அழகாக கையாண்டார். சிறுத்தை படத்தில் கார்த்தியை இயக்க ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக ஞானவேல் ராஜா சாருக்கு நன்றி சொல்வதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்