விஷால் - சுந்தர் சி கூட்டணியில், தமன்னா நாயகியாக நடித்த 'ஆக்ஷன்' படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சுந்தர் சி இப்படம் குறித்து பேசியபோது.....
![sundar c](http://image.nakkheeran.in/cdn/farfuture/MY7bNVeaIv4cLVnUll0MZAYoeyjga6Cu6jcyOEg_Llk/1573299917/sites/default/files/inline-images/EI21hG4WwAAJQdA.jpg)
''இந்த படமும் என்னுடைய கனவு படம் என்று கூறலாம். முதன்முதலாக நான் எடுத்த படம் கிராம பின்னணி கொண்ட படம். அப்படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே என்றனர். அதன் பிறகு இந்த கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன். எதுதான் என்னுடைய படம். என்னுடைய படமென்றால் எந்த பாணியில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்று குழப்பமடைந்தேன். ஆனால், இப்படம் மூலம் எல்லோருக்கும் இது என்னுடைய படமென்ற உணர்வு இருக்குமென்று நினைக்கிறேன். இதுபோன்ற பெரிய படங்களுக்கு தயாரிப்பாளர் ரவிசந்திரன் மாதிரி அமைவது வரம். சண்டைக் காட்சிகளில் தமன்னா டூப் போடாமல் அவரே தைரியமாக பணியாற்றினார். இதுவரை இப்படியொரு கதாநாயகி தமிழ் சினிமாவில் இருந்திருப்பார்களா என்று சந்தேகம்தான்.
![cxs](http://image.nakkheeran.in/cdn/farfuture/B5-X55dhBu6pW7sZ7yC6eQdu_uXoDTI_E0-1FTrY4ig/1573299945/sites/default/files/inline-images/miga%20miga%20avasaram%20youtube%20bar%20ad_10.jpg)
அக்கன்ஷாவும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்து தான் தேர்ந்தெடுத்தோம். விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அக்கன்ஷா மாதிரிதான் இருப்பார். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். தமன்னா, அக்கன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடு தான் போவார்கள். ஐஸ்வர்யா லக்ஷமி இப்படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்த எல்லா படம்மும் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழில் அவருக்கு இது முதல் படம். இப்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சாயாசிங் சில காட்சிகளில் வந்தாலும் கண்ணியமாக நடித்திருப்பார். லட்சுமிகரமாக இருக்க வேண்டும், அனைவரின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற சவாலான கதாபாத்திரத்தைக் கூறியதும், சிறு புன்னகையுடன் ஒப்புக் கொண்டார். மேலும், இப்படத்தில் எனக்கு பக்க பலமாக அமைந்தது தேசிய விருது பெற்ற அன்பறிவு இருவரும் தான். அடுத்து ஹிப்ஹாப் ஆதி. முதலில் நான் ஆதிக்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்றிருந்தேன். ஆனால், என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் அவர் பிடுங்கிச் சென்று இசையமைத்தார். நான் நினைத்ததைவிட வேகமாக தன் பணியை முடித்துவிட்டார் ஆதி.
மிலிட்டரி, தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லி கிடையாது, வில்லன் தான். அந்த வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும். தமன்னாவை எனக்கு பிடிக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அது இப்படத்தில்தான் நிறைவேறியது. ‘பாகுபலி’ படத்தில் தமன்னாவின் சண்டைக் காட்சிகளைப் பார்த்தேன். அவர்தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தேன். இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் செய்த அனைவருமே சென்னையைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தான். சென்னையில் இந்தளவு உயர்தரமான காட்சிகளைக் கொடுக்க முடியுமா என்று அனைவரையும் இப்படம் ஆச்சரியப்பட வைக்கும். விஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவர் ஒப்பந்தம் செய்துவிட்டால் நாம் என்ன சொல்கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய்வார். மேலிருந்து குதிக்க சொன்னேன். உடனே குதித்து விட்டார். விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை ஆறு மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது. அதற்கு தயாரிப்பாளரும் நன்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்'' என்றார்.