
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த செய்தி இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் ஸ்ரீதேவி தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கி இறந்ததாக பிரதேச பரிசோதனையில் தெரியவந்தது. பின்னர் ஸ்ரீதேவியின் உடல் மூன்று நாட்கள் கழித்து இந்தியா கொண்டுவரப்பட்டு, மும்பையில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, போனி கபூர் சில ஊர்களில் இரங்கல் கூட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நாளை மாலை இரங்கல் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் சென்னை வந்து இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.