Skip to main content

இயக்குநராக அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

 Sivakarthikeyan will be direct a film of cricket player natarajan biopic

 

'ப்ரின்ஸ்' படத்தைத் தொடர்ந்து தற்போது மடோன் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்தியேன். அடுத்ததாக கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' படம் உருவாகி வருகிறது. 

 

நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பு, பாடல் பாடுவது, பாடலுக்கு வரிகள் எழுதுவது உள்ளிட்ட துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். 'கனா', 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா' உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த சிவகார்த்திகேயன் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'டான்' படத்தைத் தயாரித்திருந்தார். இவர் குரலில் வெளியான 'இன்னா மயிலு’ (லிஃப்ட்) பாடல் மற்றும் இவர் வரிகள் எழுதிய அரபிக்குத்து (பீஸ்ட்) பாடல் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 

 

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது இயக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் சிவகார்த்தியேன் நடிப்பதாகத் தகவல் வெளியானது. பின்பு நடராஜனும் சிவகார்த்திகேயன்தான் நடிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தியிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது பயோ-பிக் படம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "என் பயோபிக்கை என் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகுதான் எடுக்கவேண்டும் எனச் சொல்லிக்கொண்டுள்ளேன். அவர்தான் நடிக்கிறார். அவர்தான் இயக்கவும் போகிறார் என நினைக்கிறேன்" எனப் பேசியுள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன்தான் தனது பயோ-பிக்கில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்திய நடராஜன், அவரே இயக்கவும் போகிறார் எனச் சொல்லியிருப்பது கோலிவுட்டின் ஹாட் நியூஸாக உள்ளது. 

 

திரைத்துறையில் நடிகராகத் தனது பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் அடுத்து பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்