Skip to main content

ஜெயலலிதா வாழ்க்கை படம் தொடங்க தாமதம் ஏன்..? இயக்குனர் விளக்கம்!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ள படம் 'தி அயர்ன் லேடி'. பிரியதர்ஷினி இயக்கவுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிகை நித்யா மேனன் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தொடங்கப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து இப்பட இயக்குனர் பிரியதர்ஷினி விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

jaya

 

''பத்திரிகை, ஊடகம் மற்றும் அனைத்து இந்திய சினிமா ஆர்வலர்களும், வணக்கம். 

 

'தி அயர்ன் லேடி' (THE IRON LADY) படத்தின் இயக்குனராக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இங்கே விவாதிக்கப்பட்ட சில உண்மைகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் என்றாலும், சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதிலளிக்க அவற்றை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். 'தி அயர்ன் லேடி' திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் "அம்மா" செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களை கவனமாக பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனன் அவர்களை அம்மாவின் பாத்திரத்திற்கான சரியான நடிகர் ஆக தேர்வு செய்தேன். அம்மா அவர்களை போல முக அமைப்பு  முதல் நிகர் இல்லா ஆளுமை திறன் வரை  நித்யா மேனன் இயற்கையாகவே அம்மா அவர்களின் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார். நமது அம்மா புரட்சி தலைவி அவர்களை போலவே தமிழ் உள்ளடக்கி ஆறு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர், சிறு வயது முதலே "பரதநாட்டியம்" மற்றும் ஆடல் கலை அறிந்தவர் மற்றும் இசையிலும் நேர்த்தியான திறன் கொண்டவர்.  

 

 

ஒரு வாழ்க்கை வரலாற்றின் மிகவும் சவாலான அம்சம் அதை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். வாழ்கை வரலாற்று படங்கள் பொதுவாக அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் அதன் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றுகொண்டு இருக்கிறேன். இந்த களத்தில் ஒரு இயக்குனருக்கு முன் முன்வைக்கப்படும் சவால்கள் அதிகம். மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய, ரசிக்க கூடிய வகையில் ஒரு தரமான படைப்பை கொடுக்க கடமைபட்டு இருக்கிறேன். சர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ அவர்கள் "காந்தி" வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார்.  ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று படம் மிக சிறந்த படைப்பாக அமைய அதற்கான சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

 

இந்த களத்தில் 50 சதவீத வெற்றி சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் இருக்கிறது. இதில் எந்த நிலையிலும் சமரசம் செய்ய இயலாது. அப்படி செய்தால் நீங்கள் கண்டிப்பாக ஏற்று கொள்ள மாட்டீர்கள் என்பதை அறிந்து இருக்கிறோம். மேலும் "உண்மை நிலையில் இருந்து மாறாமல், படைப்பாற்றல் சுதந்திரத்தோடு உங்கள் முன் வைக்க எண்ணுகிறோம்".  படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஏற்ற நேரத்திற்காகவும் காத்துகொண்டு இருக்கிறேன். இதனை அறியும்போது சுவாரஸ்யமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். சாத்தியமற்ற அனைத்தையும் சாத்தியமாக்குவோம்..! உங்கள் ஆதரவுகளோடும் அன்போடும்.

 

நன்றி,
அன்புடன்
ஆ.பிரியதர்ஷினி '' என குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்