Skip to main content

"விக்ரம் நடிப்பை உழைப்பாக பார்க்கவில்லை" - பா.ரஞ்சித்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

pa.ranjith speech at thangalaan teaser launch

 

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. 

 

இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் டீசர் வெளியீட்டு விழாவில், விக்ரம், பா. ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய பா. ரஞ்சித், "கே.இ.ஞானவேல் ராஜா, ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தார். விக்ரம் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது கல்லூரி காலங்களில் இருந்து பார்த்து வருகிறேன். அவருடன் சேர்ந்து ஒர்க் பண்ண ஆவலோடு இருந்தேன். இப்படியொரு பீரியட் ட்ராமா கதையை அவர் நன்றாக நடிப்பார் என தோன்றியது. அதை போலவே அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். இதை ஒரு உழைப்பாக நான் பார்க்கவில்லை. அந்த கதாபாத்திரத்திற்கு அவர் செய்த நியாயமாக பார்க்கிறேன். இவ்வளவு படங்கள் நடித்த அவர் இந்த அளவிற்கு உழைப்பை கொடுக்கிறார் என்றால், எந்தளவிற்கு அந்த கதாபாத்திரம் அவருக்கு பிடித்திருக்கும் என யோசித்தேன். அது எனக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்தது. அந்த நம்பிக்கை தான் இன்று தங்கலானாக வந்திருக்கு. 

 

மக்களுக்கு ஒரு படம் பிடிக்கவில்லை என்றால், படத்தை பற்றி எதையுமே பேசமாட்டார்கள். ஆனால் பிடித்துவிட்டால் அவ்ளோ விரிவாக பேசுவார்கள். சின்ன சின்ன விஷயங்களையும் கவனித்து ப்ரொமோட் செய்வார்கள். அது மாதிரி படம் தான் தங்கலான். நாங்கள் கஷ்டப்பட்டோம் என்கிறதற்காகவே நல்ல படமாக இருக்குமா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் இந்த படம் உங்களுக்குள் உறவாடும். விஎப்எக்ஸ் காட்சிகள் மிக சிறப்பாக வந்திருக்கு. விஎப்எக்ஸ் படங்களுக்கு தங்கலான் ஒரு முன்னுதாரணமாக இருக்குமென நம்புகிறேன். 

 

உங்களுக்கு எப்படி எதிர்பார்ப்பு இருக்கோ, அதே போல எனக்கும் இருக்கு. அதே சமயம் பயமும் இருக்கு. எதிர்பார்ப்பு அதிகமா இருந்தால் அதற்கேற்ப தீனி போடனும், இல்லையென்றால் செஞ்சிருவாங்களோ என பயமும் இருக்கு. இருந்தாலும் நாங்கள் உருவாக்கின எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிற வாழ்க்கை ரொம்ப முக்கியமானது. தொன்மத்திற்கும் வரலாற்றிற்கும் இடையில் இருக்கிற நம்பிக்கையை பற்றி இந்த படம் பேசுகிறது. உண்மையான மக்களை பற்றியும் அவர்களின் வாழ்க்கையை பற்றியும் காட்ட முயற்சி செய்திருக்கிறோம். தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான சினிமாவாக இருக்கும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்