Skip to main content

'நடிக்க வாய்ப்பு கேட்டேன்... போய் மிலிட்டரில சேருன்னு சொல்லிட்டாங்க...' கலைஞானத்தை அப்செட் ஆக்கிய கடிதம்!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்தது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

அந்தக்காலத்தில் எல்லா ஊர்களிலும் இரண்டு காட்சிகள்தான் படம் போடுவார்கள். மதுரையில் தியேட்டர் இருந்ததால் அங்கு மட்டும் வார இறுதிநாட்களில் மூன்று காட்சிகள் போடுவார்கள். மதுரையில் ஏதாவது புதுப்படம் போட்டார்கள் என்றால் என் நண்பர்கள் என்னை போய் பார்த்துவிட்டு வரச்சொல்வார்கள். நான் பார்த்துவிட்டு வந்து படம் நன்றாக இருக்கிறது என்று கூறினால் மற்றவர்கள் போய் பார்ப்பார்கள். அப்படி மதுரையில் சென்று நான் படம் பார்ப்பதற்காக என் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து காசு கொடுத்து என்னை அனுப்புவார்கள். நான் படம் பார்த்துவிட்டு வந்த பிறகு, எங்கள் ஊர் காளியம்மன் கோவிலில் உட்கார்ந்து அனைவருக்கும் கதை சொல்வேன். படம் பார்க்க காசு கொடுத்து அனுப்புகிறார்கள் என்றால் நான் எவ்வளவு சிறப்பாக கதை சொல்வேன் என்று யோசித்துப்பாருங்கள். 

 

நான் கதை சொல்வதைக் கேட்டு, ஏன்டா நீ படத்துல நடிக்கக்கூடாது என்று என் நண்பர்கள் கேட்டனர். நான் ஆள் பார்ப்பதற்கு செக்கசெவேரென்று இருப்பேன். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என்று அவர்களிடம் கூறினேன். ஏதாவது நடிகருக்கு லெட்டர் போட்டு அவர்களிடம் வாய்ப்பு கேள் என்று என் நண்பர்கள் கூறினார்கள். அந்தக் காலத்தில் ரிப்ளை கார்டு என்று ஒரு கார்டு இருக்கும். அதில் இரண்டு கார்டு இருக்கும். அதில் நாம் ஒரு அட்டையில் எழுதி அனுப்புவோம். மற்றொரு அட்டையில் அவர்கள் பதில் எழுதி அனுப்புவார்கள். ஒரு ரிப்ளை கார்டு வாங்கிவந்து அஞ்சலி தேவிக்கு ஒரு கடிதம் போட்டேன். உங்கள் தோட்டத்தில் ஏதாவது வேலை இருந்தால் கொடுங்கள் என்றுதான் கடிதத்தில் எழுதினேன். அவர் வீட்டு தோட்டத்தில் வேலை செய்து அங்கிருந்து நடிக்க வாய்ப்பு வாங்கிவிடலாம் என்ற யோசனையில் தோட்ட வேலை கேட்டேன். சில நாட்கள் கழித்து அஞ்சலி தேவியிடம் இருந்து ஒரு லெட்டர் வந்தது. தற்போது ஆட்கள் தேவையில்லை என்று அஞ்சலி தேவியின் மேனேஜர் பதில் கடிதம் எழுதியிருந்தார்.  அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து மாடர்ன் தியேட்டருக்கு லெட்டர் எழுதினேன். அந்த லெட்டரில், நான் சினிமாவிற்கு தகுந்த உயரம், சிவந்த உருவம், அடர்ந்த முடி, அகன்ற நெற்றி, சரியான வரிசையில் பல் இருக்கும், நல்ல உடல்வாகு என என் தோற்றத்தைப் பற்றி எழுதியிருந்தேன். சில நாட்கள் கழித்து அதற்கு பதில் கடிதம் வந்திருந்தது. அதில், உங்கள் கடிதத்தை உன்னிப்பாக கவனித்தோம். நல்ல உயரமும் உடல்வாகும் இருப்பதாக எழுதியிருந்தீர்கள். எல்லா பொருத்தமும் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் அப்படியே மிலிட்டரியில் போய் சேர்ந்துவிடுங்கள் என்று பதில் எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதத்தை படித்துவிட்டு நானும் என் நண்பர்களும் அப்செட் ஆகிவிட்டோம். 

 

அடுத்த என்ன செய்யலாம் என்று நண்பர்கள் அனைவரும் சேர்ந்து யோசித்தோம். அப்போது வீட்டில் உட்கார்ந்து கடிதம் எழுதிக்கொண்டே இருந்தால் சரிவராது... சென்னையில் சென்று வாய்ப்பு தேடு என ஒரு நண்பன் கூறினான். அதுவும் சரி என்று தோன்றியது. பின், என் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் காசு கொடுத்து என்னை சென்னை அனுப்பி வைத்தார்கள். 1949இல் முதன்முறையாக சென்னைக்கு வந்தேன். அப்போது வாகினி ஸ்டூடியோவில்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழி படங்களும் எடுப்பார்கள். நான் அங்கு சென்றபோது சௌகார் என்று ஒரு படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். சென்னை வந்த முதல் நாளிலேயே துணை நடிகர் ஒருவருடைய அறிமுகத்தைப் பெற்றுவிட்டேன். மறுநாள் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்வதாக அவர் கூறினார். அன்று இரவு பாண்டிபஜாரில் இருந்த ஒரு பிளாட்பாரத்தில் ஓரமாக படுத்துக்கொண்டேன். நடு இரவில் திடீரென போலீஸ் ரைடு வந்து பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர்களை எல்லாம் வண்டியில் ஏற்றினார்கள். அங்கிருந்து சிலர் தப்பித்து ஓடுகையில், நானும் தப்பித்து ஓடிவிட்டேன். பின், அந்த ஏரியாவில் இருந்த ஒரு ஓட்டலின் பின்புறத்தில் எச்சி இலை போடும் இடத்திற்கு பக்கத்தில் போய் ஒளிந்துகொண்டேன். போலீசுக்கு பயந்து விடியவிடிய அங்கேயே உட்கார்ந்திருந்தேன். மறுநாள் ஸ்டூடியோவிற்கு சென்றேன். வாசலில் நின்று ஒருவர் நடிக்க வாங்க... நடிக்க வாங்க என்று கூப்பிட்டுக்கொண்டு இருந்தார். என்னடா இப்படி கூவிக்கூவி கூப்பிடுறாங்க... இது தெரியாம நாம லெட்டர் எழுதிக்கிட்டு இருந்திருக்கோமே... நடிக்க வாய்ப்பு கிடைப்பது ரொம்ப ஈஸியோ... என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே வரிசையில் போய் நின்று கொண்டேன்.

 

வரிசையில் நின்ற அனைவருக்கும் டோக்கன் கொடுத்து உள்ளே அனுப்பினார்கள். நான் டோக்கன் கவுன்டருக்கு அருகே செல்லும்போது டோக்கன் முடிந்துவிட்டது என்று கூறி கவுண்டரை மூடிவிட்டனர். அடுத்து எப்போது வரவேண்டும் என்று கேட்டேன். அதெல்லாம் தெரியாது... இப்ப இடத்தை காலி பண்ணு... என்று கூறி அங்கிருந்த கூட்டத்தைக் கலைத்துவிட்டனர். எனக்கு மிகவும் ஏமாற்றமாகிவிட்டது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் மாடர்ன் தியேட்டர் நினைவுக்கு வந்தது. அங்கு நேரில் சென்று வாய்ப்பு கேட்டு பார்ப்போம் என்று முடிவெடுத்து மாடர்ன் தியேட்டருக்குச் சென்றேன். அங்கு ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அதுபற்றி அடுத்த பகுதியில் விரிவாக கூறுகிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.