Skip to main content

"இரவோடு இரவாக தாத்தா வீட்டில் இருந்து தப்பித்தேன்..." கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள்!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தனக்கு 12 வயதாக இருக்கும்போது தாத்தா வீட்டில் இருந்து இரவோடு இரவாக தான் தப்பி வந்தது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

என்னுடைய தாத்தா தோட்டத்தில் இருந்த மிளகாய் பழத்தைத் தாத்தாவிற்குத் தெரியாமல் திருடி விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணம் மூலமாக சினிமாவிற்கு போனது பற்றி கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அன்று சினிமாவிற்குச் சென்றதால் இரவு சாப்பிடவில்லை. சினிமாவிற்கு சென்ற விஷயம் தெரிந்ததால் தாத்தா அடித்துவிட்டார். தாத்தா வீட்டிலிருந்து சோளச்சோறு கொடுத்துவிட்டிருந்த போதிலும், தாத்தா அடித்துவிட்டதால் அதைச் சாப்பிடவில்லை. என் மாமாவிடம் சொல்லி என் முதுகுத்தோலை உரித்துவிடுவதாக தாத்தா எச்சரித்ததையடுத்து, பயத்தில் தாத்தா ஊரிலிருந்து நடந்தே ஆண்டிபட்டி வந்துவிட்டேன். இரவு 2 மணி டூரிங் டாக்கீஸ் முடிந்து அனைவரும் படுத்துவிட்டனர். ஊரே அமைதியாக இருந்தது. எனக்குப் பசி தாங்கமுடியவில்லை. ஒரேயொரு ஓட்டல் மட்டும் இருந்தது. அவரும் கடையைப் பூட்ட தயாராகிக்கொண்டு இருந்தார். என் கையில் காசும் கிடையாது. அதனால் அவரிடம் சென்று உணவு கேட்க கூச்சமாக இருந்தது. நான் அங்கேயே நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, அவரே  என்ன வேண்டும் என்று கேட்டார். நான் பசிக்குது எனக் கூறியவுடன் உள்ளே இருந்து சோறு எடுத்துக்கொண்டு வந்தார். பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்த மிச்ச சோற்றை எடுத்துவந்தார். கடை போட்டும் நேரம் என்பதால் அதுதான் இருந்தது. இரக்கக்குணம் உடையவராக அவர் இருந்ததால் அந்த நேரத்தில் சோறு கிடைத்தது. விடியக்காலை 4 மணி ஆகிவிட்டது. ஆண்டிபட்டியில் இருந்து 20 மைல் தொலைவில் இருந்தது எங்கள் ஊர் எழுமலை. இரவு நேரமாக இருந்ததால் இன்னும் கொஞ்சம் விடியட்டும் என்று நினைத்து ஆண்டிபட்டியிலேயே ஒரு கடை வாசலில் படுத்துவிட்டேன். 

 

அசந்து தூங்கிக்கொண்டு இருக்கையில், தாத்தா கூறியதைக் கேட்டு என் மாமா வந்து என்னை அடித்து தோலுரிப்பதுபோல கனவு வந்தது. பதறியடித்து எழுந்தேன். நான் கத்தியதைக் கேட்டு பக்கத்து கடைக்கு வெளியே படுத்திருந்தவர்களும் பதறி எழுந்துவிட்டனர். இனி இங்கிருந்தால் சரிப்பட்டு வராது என்று நினைத்து உசிலம்பட்டி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். உசிலம்பட்டி போய்விட்டால் அங்கிருந்து போகும் ஏதாவது வண்டியில் ஏறிச் சென்றுவிடலாம் என்பது என்னுடைய திட்டம். அந்த இருட்டிற்குள்ளேயே நடக்க ஆரம்பித்தேன். போகும் வழியில் பெரிய கணவாய் இருந்தது. மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அந்தக் கணவாய் வழியாகத்தான் மதுரையிலிருந்து போடி செல்லும் ரயில் போகும். அந்தக் கணவாய் வழியாகச் சென்றால் தூரம் குறைவு. அதனால் கணவாய் வழியாகவே பாறையில் கைவைத்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். கணவாய் உள்ளே ஆந்தை அகவும் சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது. முக்கால் மணிநேரம் நடந்து கணவாயின் அந்தப்பகுதியை அடைந்தேன். அப்போதுதான் எனக்கு நிம்மதியே வந்தது. 

 

அங்கிருந்து உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டிற்குச் சென்றேன். கிளார்க் மகன் என்று சொன்னால் யாரவது என்னை கொண்டுபோய் எங்கள் ஊரில் விட்டுவிடுவார்கள். என் அப்பாவிற்கு அந்த அளவிற்கு நல்ல பெயர் இருந்தது. எங்க ஊர் பஸ்களுக்கான ஏஜென்ட் அய்யனத்தேவர் என்னைப் பார்த்துவிட்டார். இருந்தாலும் அவருக்கு என்னை சரியாக அடையாளம் தெரியவில்லை. என்னை அழைத்து விசாரிக்கையில் எழுமலை கிளார்க் மகன் என்றேன். 'இந்த நேரத்துல இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க... எங்க இருந்து வர்ற' என்று அவர் கேட்க, நான் அனைத்தையும் விளக்கிக்கூறினேன். மதுரையில் கல்யாணம் பண்ணிக்கொடுத்திருந்த என் அக்கா, என் அம்மாவைப் பார்ப்பதற்காக எழுமலை சென்றிருப்பதாகவும் அவர் அடுத்த பஸ்ஸில் திரும்பிவந்துவிடுவாரென்றும், அவரிடம் என்னை ஒப்படைத்துவிடுவதாகவும் கூறினார். எங்கள் ஊருக்கு அந்த ஒரு பஸ்தான். அதனால் அடுத்த பஸ்ஸில் அவர் வந்துவிடுவார் என உறுதியாகக் கூறினார். அதேபோல என் அக்கா அடுத்த பஸ்ஸில் வந்தார். பஸ் ஸ்டாண்டில் என்னைப் பார்த்ததும் ஓடிவந்து என்னைக் கட்டிபிடித்துவிட்டார். எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது. எங்க அக்காவிற்கு ஒரு வயசில் கைக்குழந்தை ஒன்று இருந்தது. 'இவன நம்ம வீட்டிற்கு கூட்டிட்டுப் போவோம்ங்க... பிள்ள தூக்க ஆள் இருந்த மாதிரி இருக்கும்' என அவர் வீட்டுக்காரரிடம் கேட்டார். அவரும் சரி எனக் கூறிவிட்டதால் நான் அவர்களுடன் மதுரை சென்றுவிட்டேன். அந்த கைகுழந்தைதான் தற்போது என்னுடைய மனைவி.   

   

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.