Skip to main content

8 வயதில் கள்ளக்காதலுக்கு உதவிசெய்த கலைஞானம்... தர்மஅடி கொடுத்த ஊர் மக்கள்!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், கள்ளக்காதலுக்கு உதவிசெய்து ஊர் மக்களிடம் அவர் அடிவாங்கிய சம்பவம் குறித்து பகிர்துகொண்டவை பின்வருமாறு... 

 

என்னுடைய அப்பா ஏழு வயதிலேயே இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது அவரிடம் இருந்தது வெறும் ஆறு ரூபாய்தான். அன்றைய காலத்தில் ஆறு ரூபாய் என்றால் அதை வைத்து ஐந்து மாதத்திற்கு குடும்பம் நடத்தலாம். அப்படிப்பட்ட கஷ்டமான நிலையில்தான் என் அம்மா குடும்பம் நடத்திவந்தார். சிறு வயதாக இருக்கும்போதிலிருந்தே சினிமா, நாடகம் மீது எனக்கு ஆர்வம் திரும்பியது. 1938 காலத்தில் எங்கள் ஊருக்கு முதல்முறையாக சினிமா வருகிறது. வேலுசாமி நாடார் என்பவர் எங்கள் ஊருக்கும் ஆண்டிபட்டிக்கும் மாறிமாறி சினிமா போடுவார். அதுவரை நாடகம் மட்டுமே பார்த்த நான், சினிமாவை எப்படியாவது பார்த்தாக வேண்டும் என்று நினைத்தேன். ஒன்னேகால் அணா கொடுத்தால் தரையில் உட்கார்ந்து பார்க்கலாம். இரண்டு அணா கொடுத்தால் பெஞ்சில் உட்கார்ந்து பார்க்கலாம். அப்போது இதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. என்னுடைய அம்மாவிற்குத் தெரியாமல் வீட்டிலிருந்து இரண்டு அணா எடுத்துக்கொண்டு சென்றேன். அதை வாங்கிக்கொண்டு பின்வரிசையில் போட்டிருந்த பெஞ்சில் என்னை உட்கார வைத்தார்கள். திரையில் இருந்து தூரத்தில் இருந்ததால் படம் நன்றாகத் தெரியாது என்று நினைத்துக்கொண்டே படம் பார்க்க ஆரம்பித்தேன். திரைக்கு அருகே அமர்ந்து பார்த்தால்தான் படம் நன்றாகத் தெரியும் என்பது எட்டு வயதில் என்னுடைய புரிதல். அப்படி நான் முதன்முதலில் பார்த்த படம் கருணாநிதியின் தாய்மாமன் நடித்த ‘கிருஷ்ண லீலை’ திரைப்படம். 

 

படம் முடிந்த பிறகு, 'இந்தத் திரைக்குள்தான படத்தில் வந்த அந்த வீடு இருந்தது என்று நினைத்து திரைக்குப் பின்னால் சென்றெல்லாம் பார்த்தேன். அங்கு வெறும் சவுக்கு கம்புகள் மட்டும் இருந்ததைப் பார்த்துக்கொண்டு, படம் முடிந்த பிறகு அந்த வீட்டையும் கழட்டி எடுத்துச் சென்றுவிடுவார்களோ' என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்கு வந்தேன். இரண்டு அணா எடுத்துச் சென்று நான் படம் பார்த்த விஷயம் தெரிந்து என் அம்மா என்னை அடி வெளுத்துவிட்டார். 'இந்தக் காச வச்சுத்தான் கேப்பை வாங்கி உங்களுக்குக் கஞ்சி காய்ச்சிக்கிட்டிருக்கேன். நீ இதைத் தூக்கிட்டுப்போய் சினிமா பாக்குறியா... நாளைக்கு இரண்டு அணா கொடுத்தாத்தான் உனக்கு சோறு போடுவேன்... போடா...' என்று கூறி என்னை விரட்டிவிட்டார். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நேரே வேலுச்சாமி நாடாரிடம் சென்று எனக்கு ஏதாவது வேலை கொடுங்கள் என்றேன். “சின்னப்பயலா இருக்க... உனக்கு என்னடா வேலை தெரியும்” என்றார். அப்போது எனக்கு 8 வயதுதான். நான் அவரிடம், என் அம்மாவிற்குத் தெரியாமல் வீட்டிலிருந்து இரண்டு அணா எடுத்துவந்து படம் பார்த்த விஷயம் குறித்தும், அது அம்மாவிற்கு தெரிந்ததால் என்னை அடித்தது குறித்தும் கூறினேன்.

 

உடனே அவர் மேனேஜரை அழைத்து, இவனுக்குப் பெண்கள் பக்கம் முறுக்கு விற்கும் வேலை கொடுங்கள் என்றார். தினமும் எனக்கு இரண்டு அணா சம்பளம். ஒரு தட்டு நிறைய முறுக்கை அடுக்கி என்னிடம் கொடுத்தார்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு ரீலுக்கும் விளக்கை அணைத்து அணைத்துப் போடுவார்கள். விளக்கை அணைத்துவிட்டார்கள் என்றால் நான் ஓர் ஓரத்தில் உட்கார்ந்துகொள்ள வேண்டும். விளக்கை ஒளிரச் செய்யும்போது முறுக்கு..முறுக்கு... எனக் கூவிக்கொண்டே கூட்டத்திற்குள் செல்ல வேண்டும். குறுக்கே ஒரு சுவர் இருக்கும். அதன் ஒருபுறத்தில் ஆண்களும் மற்றொரு புறத்தில் பெண்களும் அமர்ந்திருப்பார்கள். 

 

பெண்கள் பகுதியில் முறுக்கு விற்றுக்கொண்டிருந்த என்னை, ஆண்கள் புறத்திலிருந்து ஒருவர் அழைத்தார். ‘மல்லிகை பூ வச்சுட்டு ஓரத்தில் ஒரு பொம்பள உட்கார்த்திருக்காள... நான் கொடுத்தேன்னு சொல்லி அவளுக்கு ரெண்டு அணாவுக்கு முறுக்கு கொடுத்துடு... லைட் ஆஃப் பண்ணும்போது போ... லைட் இருக்கையில் போனா அவளுக்கு அவமானமாகிவிடும்’ என்றார். பின், நான் அவரிடம் காசு வாங்கிக்கொண்டு அந்தப் பெண்ணுக்கு முறுக்கு கொடுத்தேன். அவரும் வாங்கிக்கொண்டார். அன்றைய ஷோ முடிந்ததும் முறுக்கு விற்றதற்காக இரண்டு அணா சம்பளம் கொடுத்தார்கள். அதன் பிறகு, தினமும் அங்கு முறுக்கு விற்றேன். 

 

மறுநாள், வேறொருவர் என்னை அழைத்து வேறொரு பெண்ணைக் கைகாட்டி அவருக்கு முறுக்கு கொடுக்கச் சொன்னார். அங்கிருந்த ஆண்களில் சிலர், கள்ளக்காதலிக்கு முறுக்கு கொடுக்க என்னை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். அன்றொருநாள், ஒருவர் அழைத்து ‘சிவப்பு சேலை கட்டியிருக்க அந்தப் பொம்பளைக்கு முறுக்கு கொடு’ என்றார். நான் லைட் ஆஃப் செய்தவுடன் சென்று, ‘அக்கா உங்களுக்கு அண்ணே முறுக்கு கொடுக்கச் சொன்னார்’ என்றேன். ‘எவன்டா எனக்கு முறுக்கு கொடுத்தது’ என்று கெட்ட கெட்ட வார்த்தைகளில் அவர் திட்ட ஆரம்பித்துவிட்டார். உடனே லைட்டைப் போட்டுவிட்டார்கள். அதன் பிறகுதான் தெரிந்தது, நான் முறுக்கு கொடுத்தது அந்த ஊர் பெரிய மனுஷனின் மனைவியென்று. அவரும் சிவப்பு சேலை கட்டியிருந்ததால் ஆள் மாற்றிக் கொடுத்துவிட்டேன். ‘எவன்டா முறுக்கு கொடுக்கச் சொன்னது’ எனக் கேட்டு அங்கிருந்த ஆட்கள் என்னை அடி வெளுத்துவிட்டனர். கொடுக்கச் சொன்னவரை கூட்டத்தில் தேடினால் ஆள் இல்லை. நான் சொல்லிவிடுவேன் என்று நினைத்து பயத்தில் ஓடிவிட்டார்.

 

ஆண்கள் என்னைத் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறி மேனேஜர் ஆண்கள் பகுதியில் முறுக்கு விற்க என்னை மாற்றிவிட்டார். இப்படி முறுக்கு விற்றுக்கொண்டு 500 ஷோக்களுக்கும்மேல் படம் பார்த்துள்ளேன். இரண்டு வருடங்களுக்கும் மேலாக இப்படி முறுக்கு விற்றேன். ஒன்னே கால் அணா கொடுத்து படம் பார்க்க பணமில்லாத ஆட்கள், வெளியே நின்று பாடல்களையும் வசனங்களையும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஷோ முடிந்து நான் வெளியேவரும்போது படம் எப்படி இருந்தது... கதை என்ன என்று என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களுக்குப் படத்தின் முழு கதையையும் சொல்வேன். 8 வயதில் இப்படி கதை சொல்ல ஆரம்பித்துத்தான் கதை சொல்லும் பழக்கமும் எழுதும் பழக்கமும் எனக்கு வந்தது. நான் கூறும் கதையைக் கேட்டுவிட்டு படம் பார்த்த மாதிரியே இருக்குடா என்பார்கள் என் நண்பர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.