Skip to main content

"ஜெயகாந்தன் கேட்ட கேள்வி பளார் பளார்னு அறைஞ்ச மாதிரி இருந்தது!" - இளையராஜா பகிர்ந்த நிகழ்வு  

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

சமீபத்தில் சென்னையில் ஒரு கல்லூரியில் நடந்த விழாவில் இசைஞானி இளையராஜா, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பதில்களினூடே பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். அப்போது ஒரு மாணவி எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் இளையராஜாவுக்குமிடையிலான உறவு குறித்து பகிருமாறு கேட்டுக்கொண்டார். மகிழ்ச்சியடைந்த இளையராஜா, தான் திரையுலகத்துக்கு வருவதற்கு முன்பு ஜெயகாந்தனை சந்தித்த நிகழ்வொன்றை பகிர்ந்தார். 
 

ilaiyaraja with jayakanthan

 

 

"எங்க பாவலர் அண்ணன் ட்ரூப்ல இருந்து நானும் பாஸ்கர் அண்ணனும் வெளியே வந்து சினிமாவில் வாய்ப்புக்காக முயற்சி பண்ணிக்கிட்டுருந்தோம். அப்போது ஒரு நாள், நான், பாஸ்கர் அண்ணன், இயக்குனர் பாரதிராஜா மூனு பேரும் சேர்ந்து எழுத்தாளர் ஜெயகாந்தனை சந்திக்கப் போலாம்னு கிளம்புனோம். அவரிடம் சினிமா வாய்ப்புக்கு உதவச் சொல்லி கேட்கலாம்னு திட்டம். அப்போது நுங்கம்பாக்கத்தில் அவரது வீடு. நேரா அங்க போயி நின்னோம். எங்களை முன்பே அவர் அறிவார். 'வாங்க தோழர்'னு கூப்பிட்டு, 'என்ன தோழர் விஷயம்?'னு கேட்டார். நாங்க அவரை சந்திக்கப் போனதால், 'சரி சொல்லி வைப்போமே'னு "தோழர், நாங்க அண்ணன் ட்ரூப்ல இருந்து வெளில வந்துட்டோம். சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவீங்கன்னு உங்களை நம்பித்தான் வெளிய வந்தோம்"னு சொன்னோம். அப்படி சொன்னா முக்கியத்துவம் கொடுத்து உதவுவார்னு நினைச்சோம். ஆனா அவர், நாங்க இப்படி சொன்னதும் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாகிவிட்டார். எதுவுமே பேசல. சுத்தமா அமைதியாகிட்டார். எங்களுக்கு ஒன்னுமே புரியல. 'எதுவும் தப்பா பேசிட்டோமோ'னு குழப்பத்தில் இருந்தோம். திடீர்னு சத்தமா, கோபமா, "என்னை கேட்காமல்... என் அனுமதியில்லாமல்... நீங்கள் எப்படி என்னை நம்பலாம்? எப்படி நீங்கள் என்னை நம்பி வெளியே வரலாம்?"னு அவரோட சிம்மக் குரலில் கேக்குறார். எங்களுக்கு அப்படியே காது அடைச்சிருச்சு. அவர் கேட்ட விதம் எங்கள 'பளார் பளார்'னு அறைஞ்ச மாதிரி இருந்தது. அவர் கோபமானதும் என்ன பண்றதுன்னு தெரியாம ஏதோ சொல்லிட்டு வெளியே வந்துட்டோம். வெளியே வந்து பாஸ்கரும் பாரதிராஜாவும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. "என்னயா இது, இவரெல்லாம் என்ன கம்யூனிஸ்டு? இவரை நம்பி வந்தோம்னு சொல்றோம். ஒரு ஆறுதல், நம்பிக்கை சொல்லாம, இப்படி கோபப்படுறாரு. வெளியில மட்டும் தொழிலாளி வர்க்கம், ஏகாதிபத்யம்னு பேசுறாரு?"ன்னு ரெண்டு பேரும் கிண்டல் பண்ணுனாங்க. நான் சொன்னேன், "அப்படியில்லப்பா, 'நீங்க ஏன் என்னை நம்பி வந்தீங்க? உன்னை நம்பி நீ வந்துருக்கணும்'னு சொல்றாருல? அவர்தான் ஜெயகாந்தன்” என்று சொன்னேன். அப்போதிருந்தே அவரை என் குருவாக ஏற்றேன். பின்னாடி நாங்க நண்பர்களாகிட்டோம்".
 

இவ்வாறு மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுடனான தன் நினைவை பகிர்ந்துகொண்டார் இளையராஜா. ஜெயகாந்தன், எழுத்துலகில் அரசராகத் திகழ்ந்தவர். ஞானச்செருக்கு கொண்டவர். அவரது கோபம் அந்த வட்டாரத்தில் புகழ்பெற்றது. இளையராஜாவின் இசைஞானமும் கோபமும் அனைவரும் அறிந்ததே. இந்த இருவருக்குள் இப்படி ஒரு நட்பு இருந்ததை அறிந்த இளம் தலைமுறை மாணவிகள் மகிழ்ந்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"மோடியே முன்வந்து இளையராஜாவை நியமித்திருக்கிறார்... அதனால் தமிழ்நாட்டில்..." - கவிஞர் முத்துலிங்கம்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

muthulingam speech at sivaji ganesan book release function

 

நடிகர் சிவாஜி கணேசன் குறித்து மருது மோகன் என்பவர் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(18.12.2022) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா  'சிவாஜி கணேசன்' புத்தகத்தை வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

 

நிகழ்ச்சியில் பேசிய முத்துலிங்கம், "ஒரு நடிகரைப் பற்றி இவ்வளவு ஆய்வு செய்து 1600 பக்கங்களில் ஒரு புத்தகத்தை எழுதியவர் இந்தியத் துணைக் கண்டத்தில் உலக வரலாற்றில் எவரும் கிடையாது மருது மோகன் மட்டும்தான்.  இந்த விழாவிற்கு இளையராஜாவை அழைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார் மருது மோகன். அதற்காக மூன்று மாதம் காத்திருந்து இளையராஜாவிடம் தேதியைப் பெற்றிருக்கிறார். 

 

சிவாஜி பற்றி எல்லாருக்கும் தெரியும். தமிழ் சிறந்த மொழி என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்றால் சிவாஜி படத்தைத் திரையிட்டுக் காண்பித்தால் போதும். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குக் கிடைத்த பெருமை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. மத்திய அரசே, அதாவது மோடியே முன்வந்து மாநிலங்களவை உறுப்பினராகச் சேர்த்திருக்கிறார். இதை விட வேறு என்ன சிறப்பு வேண்டும். இதற்காகவே மோடி அவர்களை நான் பாராட்டுகிறேன். மத்திய அரசையும் போற்றுகிறேன். 

 

அதே நேரத்தில் மொழிக் கொள்கை என்று வரும்போது, என்னதான் செய்தாலும் திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்றிருக்கிற காலம் வரையிலும் தாமரை கட்சி தமிழ்நாட்டில் தலை நிமிர முடியாது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தை வழங்கியவர் கலைஞர்தான்." என்றார். மேலும் தொடர்ந்து இளையராஜாவைப் பற்றிப் புகழ்ந்து தள்ளினார் கவிஞர் முத்துலிங்கம். 

 

 

Next Story

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் எவர்க்ரீன் கூட்டணி

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

after 23 years ilaiyaraja composing music for ramarajan movie samaniyan

 

80களில் 'எங்க ஊரு காவல்காரன்', 'கரகாட்டக்காரன்', 'தங்கமான ராசா' என பல ஹிட் படங்களைக் கொடுத்து டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ராமராஜன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய ராமராஜன் தற்போது 'சாமானியன்' படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தை ராகேஷ் இயக்க ராதாரவி மற்றும் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 

 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளது படக்குழு. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

இவர்கள் கூட்டணியில் வெளியான 'செண்பகமே...செண்பகமே', 'சொர்கமே என்றாலும்...', 'மதுர மரிக்கொழுந்து...' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் உள்ளது. அதிலும் சில பாடல்கள் ராமராஜன் குரலுக்கு இளையராஜாவின் குரல் அப்படியே பொருந்தியிருக்கும். இப்படி நீங்கா நினைவுகளாகப் பல பாடல்களைத் தந்த இந்த எவர் க்ரீன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.