தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார். கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவெடுத்துள்ளது. வரும் ஜூன் 18ஆம் தேதி ‘ஜகமே தந்திரம்’ திரைப்படமானது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை ஆல்பம் நேற்று வெளியிடப்பட்டது.
இதையடுத்து, ரசிகர்களுடன் உரையாடுவதற்காக ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் ஒர் உரையாடல் நிகழ்வை படக்குழு ஒருங்கிணைத்தது. நடிகர் தனுஷ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ரசிகர்களிடம் நீண்ட நேரம் உரையாடிய நடிகர் தனுஷ், ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த பாகம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
இது குறித்து அவர் பேசுகையில், "எனது திரைப்பயணத்தில் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்களில் சுருளியும் ஒன்று. இப்படத்தின் 2ஆம் பாகத்திற்கான கதையை எழுதுமாறு கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டுள்ளேன். அந்தளவுவிற்கு இந்தக் கதாபாத்திரம் எனக்குப் பிடிக்கும்" எனக் கூறினார்.