Skip to main content

“கேப்டன் என்று இதனாலேயே கூப்டுறோம்” - ராம்கி

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Actor Ramki about Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ராம்கி பேசியதாவது “விஜயகாந்த் நடித்த ஊமைவிழிகள் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன், செந்தூரப்பூவே படத்தில் இணைந்து நடித்தேன். அந்த படத்தில் அவரது கேரக்டர் ‘கேப்டன்’, அதனாலேயே படப்பிடிப்பு தளத்தில் கேப்டன் என்றே கூப்டுவோம், பிறகு கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு பொதுமக்களும், ரசிகர்களுமே கேப்டன் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். பின்நாளில் அப்படியே கேப்டன் விஜயகாந்த் ஆகிப்போனார். 

அந்த காலகட்டத்தில் எந்த பிரச்சனைக்கும் நடிகர்கள் போக மாட்டார்கள். ஆனால் விஜயகாந்த் பல பொது பிரச்சனைகளை கையில் எடுத்து போராட்டங்கள் செய்திருக்கிறார். நடிகர் சங்கத்திற்கு தலைவர் பொறுப்பை ஏற்று கலைநிகழ்ச்சிகள் செய்து நடிகர் சங்க கடனை எல்லாம் அடைத்தவர். திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை தந்தவர்.” என்றார்.

சார்ந்த செய்திகள்