Skip to main content

"தமிழர், இந்தியர் என்ற உணர்வே நம் மக்களுக்கு பிரச்சனையாகிவிட்டது" - பர்மா தமிழர்களின் கதைகள் பகிரும் பாக்யம் | பர்மா கதைகள் #1

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

Burma History

 

பிழைப்புத்தேடி உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு, கடந்த நூற்றாண்டில் முதன்மைத் தேர்வாக இருந்தது பர்மா. குறிப்பாக, தமிழர்களுக்கும் பர்மாவுக்கும் இடையே மிகநெருக்கமான உறவு உள்ளது. அந்த வகையில், பர்மாவில் பிறந்து தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் பர்மாவில் கழித்த பாக்யம், பர்மா குறித்தும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு குறித்தும் நக்கீரனிடம் தொடர்ந்து பகிர இருக்கிறார். அவர் பகிர்ந்து கொண்ட பர்மா கதைகளின் முதல் பகுதி...   

 

"என் பெயர் பாக்யம். பர்மாவிலேயே பிறந்து வளர்ந்த நான் 1965ஆம் ஆண்டு அங்கிருந்து இந்தியா வந்தேன். பர்மா பற்றி எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் தொடர்ந்து பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். 

 

எங்க அப்பா, அம்மா சொந்த ஊர் ராமநாதபுரம். அவர்கள் திருமணமானவுடன் அங்கிருந்து கிளம்பி பர்மா வந்தனர். வாழ்வதற்கு வழியில்லாமல் இந்திய மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் பிழைப்பதற்காக வெளிநாடு செல்ல முடிவெடுத்தால் பர்மாதான் அவர்களது முதல் தேர்வாக இருக்கும். அப்படி ராமநாதபுரத்தில் இருந்து நிறைய பேர் அங்கு வந்தார்கள். சிலர் கப்பலில் சென்றார்கள், சிலர் கால்நடையாகவும் சென்றார்கள். இங்கிருந்து வந்த ஆட்களுக்கு நிலம் பிரித்துக்கொடுத்து அதில் விவசாயம் செய்ய வைத்தார்கள். நம் ஊரில் இருப்பது மாதிரியான பயிர் அங்கு இருக்காது. ஆறு அடி உயரத்திற்கு வளர்ந்து நிற்கும். அங்கு சபனை என்று ஒரு அரிசி இருந்தது. ரொம்பவும் சுவையாக இருக்கும். அந்தக் காலத்தில், உலகத்திலேயே பர்மாவில் விளையும் அரிசிதான் சிறந்த அரிசியாக இருந்தது.

 

அங்கு மொய்ங்கா, பன்றி இறைச்சி, மீன் அதிகமாக சாப்பிடப்படும் உணவாக இருந்தது. ஆனால், அங்கிருந்த நம் மக்கள் அதை அவ்வளவு விரும்பி சாப்பிடமாட்டார்கள். அங்கிருந்த சைனீஸ்காரர்கள்கூட வீட்டில் பர்மாவில் பேசுவார்கள். ஆனால், நம் ஆட்கள் தமிழில்தான் பேசுவார்கள். தமிழ் உணர்வோடுதான் நம் மக்கள் அங்கு வாழ்ந்தார்கள்.    

 

எந்தக் கெட்ட எண்ணமும் இல்லாமல் பழகக்கூடியவர்கள் பர்மா மக்கள். சைனீஸ் ஆட்கள் அதிகமான பின்னர்தான், அங்கு பிரச்சனையே ஆரம்பித்தது. இப்போது சிறையில் இருக்கும் ஆங் சாங் சூகியின் தந்தை ஆங் சாங் கையில்தான் சுதந்திரம் கொடுத்தார்கள். 16 பேரை வைத்து அவர் அரசாங்கத்தை நடத்திவந்தபோது அவர் உட்பட 13 பேரை சுட்டுக்கொன்றுவிட்டார்கள். அதன் பிறகு யு நு பிரதமரானார். இவருக்கு இந்திய பிரதமர் நேருவோடு நல்ல நெருக்கம் இருந்தது. 

 

அங்கிருந்த நம் மக்கள் தமிழர்கள், இந்தியர்கள் என்ற உணர்வோடே கடைசிவரை இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அதுவும் பிரச்சனைக்கு காரணமாகிவிட்டது. பர்மியர், பர்மியர் அல்லாதவர்கள் என்று அந்த நாட்டில் கணக்கெடுத்தார்கள். பர்மியர் அல்லாதவர்களுக்கு ஒரு அட்டையைக் கையில் கொடுத்து வருடத்திற்கு 25 ரூபாய், 50 ரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். நம் மக்கள் அதையும் கட்டினார்கள். ராணுவ ஆட்சி வந்த பிறகு, பர்மியர் அல்லாத ஆட்களின் கடைகளை பிடுங்கிவிட்டார்கள். கரன்சியை மாற்றிவிட்டதால் கையில் இருந்த காசும் செல்லாத காசுகளாகிவிட்டது. அங்கிருந்த இந்திய தூதரகத்தில் சென்று போராட்டம் நடத்தியதால் இந்தியாவிலிருந்து கப்பல் அனுப்பினார்கள். அந்தக் கப்பலில் அகதியாகவும் வரலாம். 50 ரூபாய் பணம் கட்டியும் வரலாம். பணம் கட்டி வந்தவர்களுக்கு ஒரு பவுன் தாலிச்செயின் மட்டும் எடுத்துவர அனுமதி. அகதியாக வருபவர்கள் நகை, சொத்துகள் எதையும் எடுத்துவர முடியாது. அதனால் அங்கு சேர்த்து வைத்திருந்த வீடு உள்ளிட்ட சொத்துகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

 

அந்த மிலிட்டரி ஆட்சியில்கூட நம்ம ஊர் செட்டியார் ஒருவர் அமைச்சராக இருந்தார். அந்த மக்களையும் குறை சொல்ல முடியாது. அவர்கள் நாடு என்பதால் அவர்கள் உரிமை என்று பேசினார்கள். அதில் நிறைய பேர் பாதிக்கப்பட்டார்கள். தமிழர்கள் நாம் கொஞ்சம் அதிகப்படியாகவே பாதிக்கப்பட்டோம்".  

 

 

Next Story

"எருமை மாட்டின் முடிக்காம்புகளில் தடவி கஞ்சா கடத்துவாங்க" - பர்மா அனுபவம் பகிரும் பாக்யம் #4

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

burma history

 

பிழைப்புத்தேடி உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு, கடந்த நூற்றாண்டில் முதன்மைத் தேர்வாக இருந்தது பர்மா. குறிப்பாக, தமிழர்களுக்கும் பர்மாவுக்கும் இடையே மிகநெருக்கமான உறவு உள்ளது. அந்த வகையில், பர்மாவில் பிறந்து தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் பர்மாவில் கழித்த பாக்யம், பர்மா குறித்தும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு குறித்தும் நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அவர் பகிர்ந்து கொண்ட பர்மா கதைகளின் நான்காம் பகுதி பின்வருமாறு...

 

ராணுவ ஆட்சி வருவதற்கு முன்புவரை தமிழை வளர்ப்பதற்கான சூழல் பர்மாவில் நிறையவே இருந்தது. தமிழ்நாட்டில் வெளியாகிற புத்தகங்கள், நாளிதழ்களெல்லாம் அங்கு வரும். ஆனால், ஒருநாள் தாமதமாக வரும். அங்கிருந்த நம் மக்கள் பெரியாரை நேசித்தார்கள். அதே நேரத்தில் தீவிரமாக கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்தார்கள். அண்ணாவுடைய பேச்சும் அங்கிருந்த எங்களிடம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. பர்மாவிற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் நம் மக்கள் தமிழ் உணர்வோடுதான் இருந்தார்கள். 

 

அந்தக் காலத்தில் பர்மாவில் கடத்தல் அதிகமாக இருக்கும். போதைப்பொருட்களில் தொடங்கி பவளம் வரை கடத்தல் நடக்கும். எருமை மாட்டினை சுத்தமாக கழுவிவிட்டு அதன் முடிக்காம்புகளில் கஞ்சாவை தடவி, இங்கு கொண்டுவந்து கழுவி எடுத்துக்கொள்வார்கள். எல்லையில் தீவிரவாதம் தலைதூக்கிய பிறகு அதெல்லாம் ஒழிந்துவிட்டது. அங்கு கடத்தலில் ஈடுபட்டவர்கள் நாட்டிற்குள் வந்து வேறு தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். நகை, துணிமணிகள் கடத்தலும் அதிகமாக நடக்கும். நம் நாட்டிலும் அதே விலைதான் இருக்கும் என்றாலும், அங்கிருந்து வரும் தங்கம், துணிகள் தரமாக இருக்கும். 

 

அங்கு எம்.ஜி.ஆர், ரஞ்சன், ராஜகுமாரி, சிவாஜிக்கு தீவிரமான ரசிகர்கள் இருந்தார்கள். அதிலும் எம்.ஜி.ஆர், தெலுங்கு நடிகர் ரஞ்சனுக்கு பர்மிய மக்களும் ரசிகர்களாக இருந்தார்கள். ஒருமுறை, எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரு நடிகை அங்கு வந்தார். நம் ஆட்கள் அவர் கையைப் பிடித்து இழுத்துவிட்டார்கள். எதுக்கு உன் கணவனை டைவர்ஸ் பண்ண என்று அவரிடம் கேட்டு பெரிய பிரச்சனையே ஆகிவிட்டது. தமிழர்கள் வெளியேற ஆரம்பித்த பிறகு பர்மாவில் விவசாயம் பெரிய அளவில் குறைந்துவிட்டது. ஒருகட்டத்தில், சைனீஸ் மக்கள் அதிகமானது பர்மிய மக்களுக்கு பல வகையில் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. இன்றைக்கும் நம் ஆட்கள் கணிசமான அளவில் அங்கு இருக்கிறார்கள். பெரிய அளவில் தொழில் செய்தவர்கள் ஓரளவு பிழைத்துவிட்டனர். சாதாரணமான தொழில் செய்தவர்களும் கூலி வேலை செய்தவர்களும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

 

 

Next Story

"அரைவேக்காட்டு சாப்பாடுதான்; அந்த வாசனையே நம் ஆட்களுக்கு பிடிக்காது" - பர்மா கதைகள் பகிரும் பாக்யம் #3

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

burma history

 

பிழைப்புத்தேடி உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு, கடந்த நூற்றாண்டில் முதன்மைத் தேர்வாக இருந்தது பர்மா. குறிப்பாக, தமிழர்களுக்கும் பர்மாவுக்கும் இடையே மிகநெருக்கமான உறவு உள்ளது. அந்த வகையில், பர்மாவில் பிறந்து தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் பர்மாவில் கழித்த பாக்யம், பர்மா குறித்தும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு குறித்தும் நக்கீரனிடம் தொடர்ந்து பகிர இருக்கிறார். அவர் பகிர்ந்து கொண்ட பர்மா கதைகளின் மூன்றாம் பகுதி பின்வருமாறு...

 

"இங்கிருந்து பர்மாவிற்கு சென்ற மக்களுக்கு ஆரம்பத்தில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. உழைப்பு, வசதி, திருப்தியான வாழ்க்கை அவர்களுக்கு கிடைத்தது. பிள்ளைகள் வளர்ப்பு மட்டும்தான் அவர்களுக்கு சிரமமாக இருந்தது. நம் ஆட்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்தார்கள். சிலர் துறைமுகத்தில் வேலை பார்த்தார்கள். முஸ்லீம்கள் சிலர் சொந்தமாக மரக்கடை வைத்திருந்தார்கள். 

 

பர்மாவை அப்பர் பர்மா, லோயர் பர்மா என்று பிரித்திருந்தார்கள். நாங்கள் இருந்தது லோயர் பர்மா. மலைப்பகுதிதான் அப்பர் பர்மாவில் வரும். அங்கிருந்து இந்தியாவின் எல்லைவரை அப்பர் பர்மாதான். நாட்டில் பெரிய அளவில் சட்டங்கள் இல்லை. குழந்தை பிறந்தால் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்றெல்லாம் அங்கு கிடையாது. நான் பிறந்ததற்கெல்லாம் அந்த நாட்டில் பதிவு இருக்காது. யார் வேண்டுமானாலும் வரலாம், வாழலாம் என்று இருந்ததை ராணுவ ஆட்சி வந்த பிறகுதான் ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவந்தார்கள். அதன் பிறகுதான், அங்கிருந்த வெளிநாட்டினர் வெளியேற ஆரம்பித்தனர். 

 

மீன், கீரைதான் அந்த மக்கள் அதிகம் சாப்பிடுவார்கள். நம்மைப்போல அல்லாமல் அரைவேக்காட்டில்தான் உண்பார்கள். அதிலிருந்து வரும் ஒருவகையான வாசனை பெரும்பாலும் நம் ஆட்களுக்கு பிடிக்காது. கையெடுத்து கும்பிடும் பழக்கமெல்லாம் அங்கு கிடையாது. நெஞ்சில் கை வைத்து தலையை குனிவதுதான் அங்கு மரியாதை செலுத்தும் முறை. உடை விஷயத்தில் ரொம்பவும் கண்ணியமாக இருப்பார்கள். வயிறு தெரிவதுபோல உடை உடுத்தவே மாட்டார்கள். 

 

இன்று அங்குள்ள தமிழர்கள் பர்மாகாரர்களாகவே மாறிவிட்டார்கள். அவர்கள் மொழி பேசிக்கொண்டு, அந்த மக்கள் உடையை உடுத்திக்கொண்டு அந்த மக்களோடு மக்களாகவே ஆகிவிட்டார்கள். பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை கிறிஸ்டியன் பள்ளிகள்தான் அதிகம். இன்று அரசியலில் பெரிய ஆட்களாக உள்ள பெரும்பாலோனோர் அங்கு படித்தவர்கள்தான்".