Skip to main content

இந்தியா ஏன் தொடர்ந்து சொதப்புகிறது? - நான்கு காரணங்கள்

Published on 17/08/2018 | Edited on 17/08/2018

இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்த செய்த வெளியானபோதே, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வலுத்தது. ஒரு கிளாசிக் ஆட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு என்பது மிக அரிதானது. அதிலும் குறிப்பாக லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், டெக்னிக்கல் விளையாட்டை ஊக்குவிக்கும் டெஸ்ட் போட்டிகளின் மீது எதிர்பார்ப்பு குவிவதில் வியப்பேதும் இல்லை.
 

India

 

 

ஆனால், இந்த எதிர்பார்ப்பை இந்திய அணி பாசிட்டிவ்வாக கையாண்டதா? என்று கேட்டால் இல்லை. ஒருநாள் தொடரை இழந்த கையோடு, அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றிருக்கிறது இந்திய அணி. அணியில் தீர்க்கப்பட வேண்டிய ஏராளமான பிரச்சனைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. மீதமிருக்கும் மூன்று போட்டிகளில் கட்டாய வெற்றி பெறுவது மட்டுமே இந்திய அணியின் மீது திரும்பியிருக்கும் மோசமான விமர்சனங்களுக்கு பதிலளிக்கக் கிடைத்துள்ள ஒரே வாய்ப்பு. அதிலும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தோல்வியைச் சந்தித்திருக்காத அணி என்பதால், அந்தக் கட்டாயமும் இந்திய அணிக்கு இருக்கிறது. 
 

இந்திய அணியின் சொதப்பலுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமான நான்கு காரணங்களை இதோ பட்டியலிட்டிருக்கிறோம். ஒருவேளை வேறு காரணம் இருந்தால், அதை கமெண்டிடலாம்..
 

ஓப்பனிங் சோதனைகள்
 

Virat

 

 

இங்கிலாந்தின் சூழல், காற்று வீசும் வேகம், ஈரப்பத நிலை என எல்லாமும் ஒன்றுசேர்ந்து வேகப்பந்து வீச்சுக்கு ஏதுவாக இருக்கின்றன. அங்கு எந்த வேளையில் பந்துவீசினாலும் ஸ்விங் ஆகும் என்பதால், புதிய பந்தை எதிர்கொள்ளும் ஓப்பனிங் வீரர்கள் தவறான ஸாட்களைக் கூட பவுண்டரிகளாக மாற்ற முடியும். ஆனால், இந்திய ஓப்பனிங் அதைச் செய்யத் தவறிவிட்டது. குறிப்பாக, ஓப்பனிங் இணையை பலமுறை மாற்றிய பிறகும் அந்த இடைவெளியை நிரப்பவே முடியவில்லை. 
 

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்
 

அணியின் முக்கியமான பொறுப்புக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு, பலரது நம்பிக்கையைப் பெற்ற பிறகுதான் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்தார். ஆனால், ஒரு கம்பேக் கதக்களியைக் கொடுக்காமல், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிவிடுவது அவர்மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விடுகிறது. அணியில் தொடர்ந்து இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவாவது அவர் சிறப்பாக விளையாட வேண்டும். இல்லையென்றால், ரிஷப் பாண்ட் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்வார்.

 

 

ஆல்ரவுண்டர்(!) பாண்டியா
 

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடுகிறார் என்ற காரணத்திற்காக, டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விமர்சனங்களைச் சம்பாதித்தவர் பாண்டியா. எதிர்கொள்ளும் முதல் பந்திலேயே பவுண்டரியைப் பறக்கவிட்டாலும், நீண்ட ஃபார்மேட்டில் களத்தில் நீடிப்பதே முக்கியத்துவமானது. பந்துவீச்சிலும் பெரிதும் சோபிக்காமல் விட்டால் ஆல்ரவுண்டர் மீதான நம்பிக்கைக்கு மதிப்பில்லாமல் போய்விடும். அதனால், அந்நிய மண்ணில் அதிரடியாக விளையாட்டை வெளிப்படுத்தும் ஒரு ஆல்ரவுண்டரை இந்திய அணி கூடியவிரைவில் தயார் செய்ய வேண்டும்.
 

விராட் படும் பாடு
 

Virat

 

 

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இருந்த விமர்சனங்களை தலைகீழாக மாற்றியவர் விராட் கோலி. அதனால்தான், இப்போதைய நிலையில், அணியின் மொத்த சுமையும் அவர் பக்கம் திரும்பிவிட்டதோ என்னமோ. முதல் டெஸ்ட் போட்டியில் தனியாளாக விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு, நிலையான இணை கிடைத்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம். முக்கியமாக இங்கிலாந்து பயிற்சியாளர் சொன்னதுபோல், விராட்டிற்கு மறைமுகமான நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அதை மாற்ற சகவீரர்கள் விராட்டிற்கு உதவி செய்ய மனமிறங்க வேண்டுமே.
 

Next Story

ட்விஸ்ட் இருக்கு... சன் ரைசர்ஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

ஐபிஎல் 2024இன் 41 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி, அனுபவ கோலி, டு பிளசிஸ் இணை ஹைதராபாத் பந்து வீச்சை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைத்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டு பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜேக்ஸும் 6 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த பட்டிதார், கோலியுடன் இணைந்து அசர வைக்கும் விதத்தில் ஆடினார். மார்கண்டேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து ஹைதராபாத் பவுலர்களை திகைக்க வைத்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். க்ரீனின் 20 பந்துகளுக்கு 37 எனும் கடைசி கட்ட அதிரடி கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்து வீசிய உனாத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும், மார்கண்டே, கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 207 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தியது. கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து வரும் ஹைதராபாத் அணி இந்த இலக்கை எளிதில் அடித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் தைரியமாக முதல் ஓவரை ஸ்பின்னரான வில் ஜேக்ஸுக்கு கொடுக்க, சிக்சர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ட்விஸ்ட் நடந்தது. தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை மிரட்டி வந்த ஹெட் 1 ரன்னில் அவுட் ஆனார்.

There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

பின்னர் சிறிது அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஸ்வப்னில் சிங் சுழலில் மார்க்ரம் 7, கிளாசென் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நித்திஷ் ரெட்டியும் 13 ரன்களில் கரன் ஷர்மா பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத்தும், கரன் ஷர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

85-6 என்ற இக்கட்டான சூழலில் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். அவருடன் இணைந்து சபாஸ் அஹமதுவும் இணைந்து எவ்வளவோ முயன்றும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. கம்மின்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் நின்ற சபாஸ் அஹமது 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா, க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், யாஸ் தயால், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். அட்டகாசமாக ஆடி 20 பந்துகளில் அரை சதம் அடித்த பட்டிதார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 புள்ளிகள் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து பெங்களூரு அணிக்கு கொஞ்சம் பிளே ஆஃப் வாய்ப்பு எஞ்சியுள்ளது. அதனால் இந்த வெற்றியானது 6 ஆட்டங்களாக தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.