Skip to main content

ஒலிம்பிக் தகுதி சுற்றில் மேட்ச் ஃபிக்சிங் செய்யச் சொன்ன தேசிய பயிற்சியாளர்?  - விசாரிக்கக் குழு அமைத்த டெல்லி உயர்நீதிமன்றம்!   

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

manika batra

 

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றவர் மாணிகா பத்ரா. ஒலிம்பிக் போட்டிகளின்போது இந்திய அணிக்கான பயிற்சியாளரைப் புறக்கணித்தார். போட்டியில் விளையாடியபோது அணியின் பயிற்சியாளரிடமிருந்து எந்த அறிவுரையையும் பெறவில்லை. இது சர்ச்சையைக் கிளப்பியது.

 

தனது தனிப்பட்ட பயிற்சியாளரைப் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்ததற்காகவே, அவர் தேசிய அணியின் பயிற்சியாளரைப் புறக்கணித்ததாகக் கூறப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக விளக்கம் கேட்டு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு மாணிகா பத்ராவிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

 

இந்த நோட்டீஸிற்கு பதிலளித்த மாணிகா பத்ரா, தேசிய அணியின் பயிற்சியாளர் தன்னை மேட்ச் ஃபிக்சிங் செய்ய அழுத்தம் கொடுத்ததாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்தநிலையில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் மாணிகா பத்ரா தேர்வு செய்யப்படவில்லை.

 

இதனையடுத்து மாணிகா பத்ரா, இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் வீரர்களைத் தேர்வு நடைபெறவில்லை என்றும், தன்னை போன்ற தனிநபர்களைக் கூட்டமைப்பு குறி வைக்கிறது என்றும் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தேசிய அணியின் பயிற்சியாளர் தன்னை ஒலிம்பிக் தகுதி சுற்றில் மேட்ச் ஃபிக்சிங் செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  மாணிகா பத்ராவின் குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணையை நடத்த உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு சமர்ப்பித்த அறிக்கையில், மாணிகா பத்ரா மீது தவறு இல்லை என கூறியது. இதனையடுத்து இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு செயல்படும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், மாணிகா பத்ராவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

 

இந்தநிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், தேசிய அணியின் பயிற்சியாளர் தன்னை மேட்ச் ஃபிக்சிங் செய்ய அழுத்தம் கொடுத்ததாக மாணிகா பத்ராவின் குற்றச்சாட்டை விசாரிக்க இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஒரு விளையாட்டு வீரர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றச்சாட்டை விசாரித்து நான்கு வாரங்களில் இடைக்கால அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் அந்த மூவர் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரும் மனு; உயர் நீதிமன்றம் அதிரடி! 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Petition seeking impeachment of Kejriwal; High Court action

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் ஜெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்னு குப்தா என்பவர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.