Skip to main content

இன்றைய கால இளையோருக்கு அவசியத் தேவை இது தான்! - மனநலமருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்கம்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Dr Poorna Chandrika  mental health care

 

இன்றைய இளைஞர்களின் மனநிலை குறித்து பல்வேறு விஷயங்களை நம்மோடு மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா பகிர்ந்துகொள்கிறார்

 

வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களைத் தாங்கி, எதிர்த்து நின்று வென்றவர்களைப் பார்க்கும்போது எப்போதுமே ஆச்சரியமாக இருக்கும். சிலருக்கு மட்டுமே 'இதுவும் கடந்து போகும்' என்கிற மனப்பக்குவம் இருக்கும். அது தான் எதிர்த்து நிற்கும் ஆற்றல். கலைஞர், ஜெயலலிதா போல் இதற்கு உதாரணமாக அரசியலில் பலரை நாம் பார்த்துள்ளோம். அவர்கள் போல் நம்மாலும் இருக்க முடியுமா என்றால், நிச்சயமாக முடியும். இந்த குணத்தை வளர்த்துக்கொள்வதற்கு பல வழிகள் இருக்கின்றன.

 

நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஒன்று சேரும்போது பலருக்கு உதவ முடியும். இதன் மூலம் ஒரு நட்பு வட்டம் உருவாகும். நம்முடைய நண்பர்களை நாம் சந்திக்கும்போது, அவர்களுடைய அனுபவங்களும் நமக்கு உதவும். நம் அனைவருக்கும் ஏதாவது ஒன்றில் விருப்பம் இருக்கும். அதை நாம் கண்டறியும்போது நம்முடைய வாழ்க்கைக்கான அர்த்தம் நமக்கு விளங்கும். வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்பட்டால் அதற்காக போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது தவறு. 

 

கஷ்டங்கள் ஏற்படும்போதும் பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே நாம் செய்ய வேண்டும். பத்து நிமிட நடை கூட நம்முடைய மனநிலையை மாற்றும். இப்போது மிட்நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. நல்லவை நம்மிடம் வந்து சேர நேரமாகும். தீயவை விரைவாக வந்து சேர்ந்துவிடும். இப்போது யாராவது அறிவுரை கூறினால் பூமர் என்று சொல்லிவிடுகிறார்கள். தோல்வியைத் தாங்கும் மனப்பான்மை அனைவருக்கும் வேண்டும். 

 

தோல்வி என்பது தற்காலிகமானது தான் என்கிற எண்ணம் வேண்டும். எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அது நமக்கு விருப்பமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது, வேலை காரணமாக நேரம் செல்வதே நமக்குத் தெரியாது. இதன் மூலம் துன்பங்களைக் கடப்பதற்கான மன தைரியம் கிடைக்கும். பிரச்சனைகளைத் தாண்டும் துடுப்பாக நல்ல விஷயங்களை நாம் வைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கைக்கான நல்ல நோக்கங்களைத் துணையாக வைத்துக்கொண்டு வாழ்க்கையை இனிமையாக்க வேண்டும். சின்ன காரணங்களுக்கெல்லாம் எதிர்த்து நின்று போராட முடியாமல் தற்கொலைக்கு முயலும் இன்றைய கால இளைய தலைமுறை இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டும்.