Skip to main content

கரோனா கால மன உளைச்சலை போக்க தலாய் லாமாவின் 5 சிறந்த அறிவுரைகள்!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

dalailama shares ways to overcome stress

 

திபெத் நாட்டு மதத் தலைவரும், அரசுத் தலைவருமான இன்றைய தலாய் லாமா உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார். அமைதி, நல்லிணக்கம் தொடர்பாக உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பயிலரங்குகள், உரைகள், கூட்டங்கள் நடத்தி வருகிறார். நல்ல பேச்சாளரான இவர், வசீகரமான தலைவராகப் போற்றப்படுபவர். சார்ந்து வாழ்தலில் தொடங்கி காலநிலை மாற்றம் வரை, இவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் ஒரு செய்தி உள்ளது. இவர் திபெத்திய மக்களின் உயர்ந்த மதத்தலைவர் மட்டுமல்ல, உலகளாவிய அரசியல்வாதியும் ஆவார். தியானம் குறித்த ஆராய்ச்சிகளில் பெரும் பங்காற்றியவர். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். முழு உலகின் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர். காலநிலை மாற்றம் முதல் குறுங்குழுவாத வன்முறை, சுத்தமான குடிநீர், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு வரை அவர் தனது வாழ்நாள் முழுவதும் பலவிதமான பிரச்சினைகளைப் பற்றிப் பேசியுள்ளார்.

 

இப்போது, உலக மக்கள் அனைவரும் கரோனா கால நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருப்பதால், இவரின் வார்த்தைகள் நம்மைச் சரியான பாதையில் கொண்டு செல்ல உதவும்.

 

கரோனாவினால் கடந்த 2020 ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் ஒரு கடினமான ஆண்டாக அமைந்தது. இந்த 2021 ஆம் ஆண்டில் கரோனா தடுப்பூசிகள், உலக நாடுகளில் விநியோகிக்கப்பட்டு வருவது நம் அனைவருக்கும் ஆறுதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு தனிமை, சோகம், வேலையிழப்பு, மனச்சோர்வு, மற்றும் மனதளவிலான பிரச்சனைகளை நம் அனைவருக்கும் வழங்கியுள்ளது. இதன் தாக்கம், தவிர்க்க முடியாத 'நெகடிவ்' சிந்தனைகளைப் பெரும்பாலோனோருக்கு உருவாக்கியுள்ளதை நம்மால் கண் கூடாகப் பார்க்க இயலுகின்றது.

 

இந்தச் சூழலில், உலக மக்கள் கரோனா காலகட்ட சூழ்நிலைகளை, சிறப்பாகக் கையாள்வதற்குப் புத்தமதத் தலைவர் 14ஆம் தலாய் லாமாவின் 5 சிறந்த அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

1. இரக்கம் குறித்த தலாய் லாமாவின் அறிவுரைகள்!

 

அகிம்சை, கருணை, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவை இன்றைய உலக மக்களின் தேவையாக இருக்கிறது. மனித இயல்பின் அடிப்படையே இரக்கமாகும். பல்வேறு தத்துவ வேறுபாடுகள் கொண்டிருக்கலாம். இருப்பினும், கோபமும் வெறுப்பும் நம் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்துகின்றன.

 

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அமைதியாக வாழ சகிப்புத்தன்மை தேவை. சமூகம் மகிழ்ச்சியாக இருந்தால், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்கிறார்.

 

2. மக்களுக்கு நம்பிக்கையைக் கொண்டு வருவதில் தலாய் லாமாவின் அறிவுரைகள்!

 

இளைய தலைமுறையினரை வழி நடத்துவதில், அரசியல் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த நவீன காலங்களில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பத்திரிகையாளர்களின் சிறப்பான பங்களிப்பு வேண்டும். அவர்கள், சமூகம் சார்ந்த நல்ல விஷயங்களை மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மக்களை வழிநடத்திச் செல்வதில் அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்.

 

3. மதம் மீது  தலாய் லாமாவின் அறிவுரைகள்!

 

மதம் என்பது பிரார்த்தனைக்கு மட்டுமல்ல. பிரார்த்தனைகளை விட நெறிமுறை நடவடிக்கைக்கும் முக்கியமானது. மனிதர்களாகிய நாம் நமது பூமியை அழித்து, கடல்களைப் பிளாஸ்டிக்கால் நிரப்பினால் மீன் மற்றும் திமிங்கலங்கள் அழிந்து, அதி விரைவில் இவ்வுலகம் பாலைவனமாக மாறும். மேலும், ஏராளமான பசுமை நிற வாயுக்கள் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறினால் புத்தர், அல்லாஹ் அல்லது கிறிஸ்துதான் என்ன செய்ய முடியும். இவற்றை உலக மக்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்.

 

4. ஒற்றுமை மீது தலாய் லாமாவின் அறிவுரைகள்!

 

ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் இயற்கையின் அடிப்படை விதி. (மனிதர்கள் போன்ற) உயர் ரக உயிரினங்கள் மட்டுமன்று; மதம், கல்வி, சட்டம் எதுவும் அறியா புழு பூச்சிகள் கூட, கூடி வாழ்கிற அவசியத்தை உணர்ந்திருக்கின்றன. கடல்கள், மேகங்கள், காடுகள், மலர்கள் எல்லாமும் இந்தத் தத்துவத்தையே முன் நிறுத்துகின்றன. ''சார்ந்து வாழ்தலில்தான் மனித இனத்தின் இருப்பு அடங்கி இருக்கிறது.” என்கிறார்.

 

5. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தலாய் லாமாவின் அறிவுரைகள்!

 

சுற்றுச்சூழல் பேரழிவுகள், சூறாவளிகள், காட்டுத் தீ, பாலைவனமாக்கல் மற்றும் பனிப்பாறை உடைதல் போன்றவை மனித குலத்தின் பொறுப்பற்றத் தன்மையை உணர்த்துகின்றது.

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழலை தனி மனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கைச் சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். எனவே, சுற்றுச்சூழல் ஆபத்தின் முழு தீவிரத்தை, உலக மக்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்  என்கிறார்.

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.