Skip to main content

பாகிஸ்தானில் நடந்த மொழிப் போர்! - சர்வதேச தாய்மொழி தினம்

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

ஒருநாடு மற்றொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும், அந்த நாட்டு மக்களை அடிமையாக்க வேண்டும் என்றால் அவனின் கலாச்சாரத்தை, பண்பாட்டை, மொழியை அழிக்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இதனைத்தான் உலகளவில் பல ஆதிக்க மக்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்கிறார்கள்.

ஒருக்காலத்தில் உலகத்தில் பேசப்பட்ட மொழி எண்ணிக்கைக்கும் இன்று பேசப்படும் மொழி எண்ணிக்கைக்கும் மலைக்கும் – மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. இன்று 7 ஆயிரம் மொழிகள் உலகளவில் பேசப்படுகின்றன. அதில் 500 மொழிகள் தான் இன்னும் சில ஆண்டுகளில் வழக்கில் இருக்கும் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள்.
 

mother tongue


மொழியை அழிக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆதிக்க மக்கள் தன் மொழியே சிறந்தமொழியென, அதிகாரத்தை கொண்டு சிறுபான்மை மக்கள் பேசும் மொழியை அழிப்பதே காரணம். அதோடு, பெரும் நிறுவனங்கள் உன்னையும், என்னையும் இணைக்க ஒரு பொதுமொழி வேண்டும் அதனால் உன் மொழியை விடு என அழுத்தம் தருவதால் அவர்களிடம் வேலை செய்பவர்கள் தங்களது தாய்மொழியை மறக்கின்றனர். தாய்மொழியில் படித்தால் வேலை கிடைக்காது என்கிற தவறான புரிதல் தாய்மொழியை மறக்கடிக்க வைக்கின்றனர்.

இந்தியாவில் இன்று நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்பட்டாலும், ஆட்சிமொழியாக 18 மொழிகளே உள்ளன. இந்த 18 மொழிகள் மற்ற மொழிகளை அழிக்கின்றன என்பதே உண்மை. இந்த 18 மொழிகளில் என் மொழியே உயர்ந்த மொழி என்கிறது இந்தி பேசுபவர்கள். மையத்தில் அவர்கள் அதிகாரத்தில் உள்ளதால் இந்தியாவின் ஒற்றை மொழிக்கொள்கையை கொண்டு வர சுமார் 100 ஆண்டுகளாக முயற்சி செய்துவருகிறார்கள். அதனை எதிர்த்து நின்று களம்மாடுவது சில மொழிகள் தான் அதில் முதன்மை மொழி. திராவிட மொழிகளின் முதல் மொழியான தமிழ்மொழி தான்.

தாய்மொழிக்காக போராடி உயிர் நீத்த நூற்றுக்கணக்கானவர்களை கொண்ட மக்கள் யார் என்றால் அது தமிழர்கள் தான். உலகத்தில் வேறு எந்த மொழியினருக்கும் அப்படியொரு சிறப்பு கிடையாது. அதேப்போல் தனது மொழியையே பெயராக கொண்டவர்கள் தமிழர்கள் தமிழ், தமிழ்செல்வன், தமிழ்க்குமரன், தமிழன்பன்பன், தமிழ்செல்வி, தமிழரசி என நூற்றுக்கணக்கில் தமிழ் பெயர்கள் உள்ளன. அப்படிப்பட்ட மொழியை அழிக்க துடிக்கிறது ஆரியக்கூட்டம். தமிழ்மொழியை விட செத்த மொழியான சமஸ்கிருதம் பழமையான மொழி என்கிறது.
 

tamil language


அதோடு, இந்தியா முழுமைக்கும் ஒரு மொழியை திணிக்க சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு முதல் இன்றைய பிரதமர்கள் வரை முயல்கிறார்கள். இதனை எதிர்த்து அன்று முதல் இன்று வரை இப்போதும் தொடர்ச்சியாக போராடுவது தமிழர்கள் தான். மொழி திணிப்பை எந்த வகையில் வந்தாலும் அதனை எதிர்த்து உதைத்து துரத்திக்கொண்டு இருக்கிறார்கள் தமிழர்கள். ஆனால், அவர்களால் பெரிய அளவில் வரலாற்றில் இடம்பெற முடியவில்லை.

பாகிஸ்தான் உருவானபின், உருதுவே ஆட்சிமொழி என்கிற சட்டத்தை அமுல்படுத்தியது. இதனை பாகிஸ்தான் நாட்டில் கிழக்கு பகுதியில் வாழ்ந்த அன்றைய கிழக்கு பாகிஸ்தான் மக்கள் எங்களது வங்கமொழியையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என போராடினார்கள். 1952ல் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். வங்கமொழியை அரசு மொழியாக அறிவிக்க வேண்டுமென மாணவ சமுதாயமும் போராட்ட களத்தில் குதித்தது. இந்த போராட்டங்களை பாகிஸ்தான் அரசாங்கம் காவல்துறையை கொண்டு அடக்கியது. அந்த அடக்கு முறையின்போது டாக்கா பல்கலைகழக மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 மாணவர்கள் இறந்தனர். இது சர்வதேச ரீதியில் பெரும் கண்டனத்தை எழுப்பியது. 

கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசம் என்கிற பெயரில் ஒரு நாடாக உருவாக இதுவும் ஒரு காரணம். வங்கதேசம் உருவானபின் இறந்த 4 மாணவர்களின் மரணத்தை வரலாற்று நிகழ்வாக மாற்றி அவர்களின் தியாகத்தை அனுசரித்தது. தாய்மொழிக்காக உயிர் துறந்தவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையில் இதுப்பற்றி பேசி, ஆவணங்களை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக 1999ல் உலக தாய்மொழி தினம் உருவாக்கப்பட்டபோது, அந்த இளைஞர்களின் நினைவாக அவர்கள் கொல்லப்பட்ட பிப்ரவரி 21ந்தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சாரம், பண்பாடு, கல்வி அமைப்பான யுனஸ்கோ. 2000 ஆமே் ஆண்டு முதல் உலகம் முழுவதும் தாய்மொழி தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.

Next Story

“தமிழர்களை இணைக்கும் ஒற்றை அடையாளம் தமிழ்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 CM Stalin's pridly says Tamil is the single identity that unites Tamils


உலக தாய்மொழி தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மொழியின் சிறப்பு, அவசியம், பன்மொழி கலாச்சாரம் ஆகியவற்றை போற்றவும், உணர்த்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில்  உலகத் தாய்மொழி தினமான இன்று (21-02-24) தமிழ் ஆர்வலர்கள் பலரும் அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வாழ்த்து பதிவு பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ்!

"தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?" 
எனப் பாவேந்தர் பாடியபடி தாய்த்தமிழ் காக்கும் மரபில் வந்தவர்கள் நாம்.

பெயர்சூட்டலில், மேடைச் சொற்பொழிவுகளில், திரைப்பட உரையாடல்களில், அரசு ஆவணங்களில் என எல்லாத் தளங்களிலும் தமிழினைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று மீட்டு அதன் பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம். அத்தகைய இயக்கத்தின் வழிவந்த நமது அரசின் சார்பில், உலகத் தாய்மொழி நாளான இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட அனைத்து உறுப்பினர்களும் உறுதியேற்றோம்” என்று பதிவிட்டு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 

Next Story

‘தமிழர்கள் பயன்படுத்திய எழுத்தாணிகளும்; அதன் வகைமைகளும்’ - முனைவர் சு. தாமரைப்பாண்டியன் 

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

தமிழர்கள் தங்களின் தொன்மையான அறிவு மரபுகளைப் பல்வேறு எழுதப்படு பொருள்களில் எழுதி வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர். தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் தங்கள் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இதில் ஓலையில் எழுதி வைக்கும் வழக்கம் மிகுதியாக இருந்துள்ளது. ஓலையில் எழுத எழுதுபொருளாக எழுத்தாணியை தமிழர்கள் மிக நீண்ட காலம் பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் ஆன எழுத்தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். 

 

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க முதன்மையான ஓலைச்சுவடி அறிஞராகத் திகழ்ந்து வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுக்கும் பணியில் ஈடுபட்டபொழுது சில அரிய எழுத்தாணிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அது குறித்து அவர் கூறியதாவது: தமிழர்களின் அறிவுசார் கண்டடைவுகள் பெரும்பாலும் ஓலையிலேயே எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந்துள்ளது. தூது சென்ற பார்ப்பான் ஒருவன் கையில் எழுதுவதற்கு பயன்படுத்தும் வெள்ளோலையினை வைத்திருந்ததாக அகநானூறு (பா. 337:7 - 8 ) குறிப்பிடுகிறது. இதன் மூலம் ஓலை மிக நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்படு பொருளாக இருந்து வந்துள்ளது புலனாகிறது.

 

மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, தமிழ் விடு தூது முதலிய பல நூல்களில் ஓலையில் தமிழர்கள் எழுதி வந்தது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு ஓலைச்சுவடி என்று அழைக்கப்பட்டது. ஓலைகள் அதன் எழுதப்படு பொருண்மை அடிப்படையிலும், எழுதப்படு பொருள் அடிப்படையிலும் மந்திர ஓலை, சபையோலை, அறையோலை, இறையோலை, தூது ஓலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன்னோலை, படியோலை என்று பலவாறு அழைக்கப்பட்டன. ஓலைகள் பாதுகாக்கும் இடம் ஆவணக் களரி என்று அழைக்கப்பட்டன.

 

தமிழர்கள் தங்கள் அறிவு மரபுகளை ஓலையில் எழுத எழுத்தாணிகளைப் பயன்படுத்தினர். எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதுதல் என்பது சிரமமான காரியம் ஆகும். இதனை, ‘ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் பாடல் வரிகள் தெளிவாகச் சுட்டுகின்றன.

 

எழுத்தாணி மிக நீண்ட காலமாக தமிழர்களிடம் வழக்கில் இருந்து வந்துள்ளது. பொன்னால் செய்த எழுத்தாணி இருந்தமையினை சீவக சிந்தாமணி நூல் வழி அறிய முடிகிறது. எழுத்தாணிகளை தமிழறிஞர்கள் தேடி அலைந்தமையினை ‘ஓலை தேடி எழுத்தாணி தேடி’ என்ற தனிப்பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எழுத்தாணியானது அதன் பயன்பாட்டு அடிப்படையில் மூன்று வித அமைப்பாக  உள்ளமையினை அறிய முடிகின்றது.

 

குண்டெழுத்தாணி


 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அதிக நீளம் இல்லாமல் எழுத்தாணியின் கொண்டைப் பகுதி கனமாகவும் குண்டாகவும் அமைந்து காணப்படும் எழுத்தாணி குண்டெழுத்தாணி எனப்படும். குண்டெழுத்தாணியின் முனைப் பகுதியின் கூர்மை குறைவாகக் காணப்படும். குழந்தைகள் எண்ணும் எழுத்தும் எழுதிப் பழக குண்டெழுத்தாணியைப் பயன்படுத்துவார்கள். எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

 

கூரெழுத்தாணி


எழுத்தாணியின் முனைப்பகுதி கூர்மையாக இருக்கும். இவ்வெழுத்தாணியினை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரிகள் வரை எழுதுவதற்குரியதாக அமைந்திருக்கும்.

 

வாரெழுத்தாணி

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

இவ்வெழுத்தாணி சற்று நீளமாக இருக்கும். எழுத்தாணியின் மேற்பகுதியியில் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும். கீழ்ப் பகுதியில் கூர்மையானதாக எழுதும் பகுதி அமைந்து காணப்படும். எழுத்தாணியின் ஒரு பகுதியில் உள்ள கத்தி ஓலையை வாருவதற்குப் பயன்படும். அதனால் இவ்வெழுத்தாணி வாரெழுத்தாணி என்று அழைப்படுகிறது.

 

மடக்கெழுத்தாணி


ஒரு முனையில் கத்தியும் மறுமுனையில் எழுதவும் பயன்படும் வாரெழுத்தாணியின் இரு முனைகளையும் மடக்கி ஒரு மரத்தாலான கைப்பிடிக்குள் அடக்கி வைத்துக் கொள்ளும் தன்மையிலான எழுத்தாணி மடக்கெழுத்தாணி எனப்படுகிறது. எழுத்தாணி மடக்கி வைக்கப்படுவதால் எழுத்தாணியின் கூர்மையான பகுதி மற்றும் கத்தியினால் ஏற்படும் எதிர்பாராத இன்னலைத் தடுக்க உதவுகிறது.

 

தமிழர்கள் வெட்டெழுத்தாணிகளையே அதிகம் பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. தமிழர்களின் இத்தகைய அறிவு தொழில்நுட்பக் கருவியான எழுத்தாணிகளைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நெல்லை மற்றும் குமரி மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வு செய்தபொழுது இராமலிங்கம், கணேசன் ஆகியோரிடம் இருந்த பழமையான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெண்கலம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டவை ஆகும் என்றார்.