Skip to main content

யாருடன் கூட்டு சேர்ந்தால் தொழிலில் வெற்றி பெறலாம்?

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

படித்தவர்களோ, படிக்காதவர்களோ- வாழ்க்கையை நடத்த சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. உத்தியோகம் செய்து பிழைப்பவர் பலர் என்றாலும், சிலருக்கு மற்றவர்களிடம் அடிமையாக வேலை செய்வதோ, அடுத்தவர் தம்மை அதிகாரம் செய்வதோ பிடிக்காது என்பதால், சுயமாகத் தொழில் தொடங்கி சம்பாதிக்கிறார்கள். சிலர் அதில் நம்பிக்கைக்கு உரியவர்களை சேர்த்துக்கொண்டு கூட்டுத்தொழில் செய்கிறார்கள். நண்பர்கள் அல்லது மனைவி, உற்றார்- உறவினர்கள் ஆகியோருடன் தங்களால் இயன்ற அளவில் முதலீடுகளைப் போட்டு, ஏதாவது ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் படிப்படியாக முன்னேற்றமடையும் வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.
 

god

இப்படி கூட்டுத்தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் ஜோதிடரீதியாக யாருக்கு அமைகிறது என பார்த்தால், ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவம் தொழில் ஸ்தானமாகும். 10-க்கு 10-ஆம் இடமான 7-ஆம் பாவம் கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று அமைகின்றபோது, கூட்டுத்தொழில் மூலமாக அனுகூலங்களை அடைய நேரிடுகிறது. 7-ஆம் அதிபதி 10-ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம்பெற்று அமைந்தாலும், 10-ஆம் அதிபதி 7-ல் அமையப்பெற்றாலும் 7, 10-க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கூட்டுத்தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். 10-ஆம் வீட்டைவிட 7-ஆம் வீடு பலம்பெறுமேயானால் கூட்டுத்தொழில் சிறப்பாக அமையும்.
 

god

ஒருவருக்கு கூட்டுத்தொழில்மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தாலும் யாருடன் சேர்ந்து தொழில் செய்தால் லாபம் சிறப்பாக இருக்கும் என பார்க்கும்போது, ஒரு ஆணின் ஜாதகத்தில் 7, 10-க்கு அதிபதிகள் இணைந்து சுக்கிரனும் வலுவாக அமைந்தால், திருமணத்திற்குப்பின் மனைவியுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். ஜாதகர் கற்ற கல்வியையே மனைவியும் கற்றிருந்தால் அந்தத் துறையில் இருவரும் சேர்ந்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். அதன்மூலம் லாபங்கள் ஏற்படும்.
 

god

7-ஆம் இடம் கூட்டுத்தொழில் ஸ்தானம் என்பதால், 7-ஆம் அதிபதி 3, 6, 8, 12-ல் மறைந்து பகை பெற்றோ, நீசம் பெற்றோ, பாதக ஸ்தானத்தில் இருக்குமேயானால், அவர் எந்தவொரு தொழிலையும் கூட்டுசேர்ந்து செய்வதைத் தவிர்த்து, தனித்துச் செயல்படுவதே மிகவும் நல்லது. 7-ஆம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபர் பார்வை மற்றும் நட்பு கிரகச் சேர்க்கையுடன் இருந்தால் கூட்டுத்தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டு. தொழில் ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 10-ஆம் அதிபதியுடன் இணையும் பலம்பெற்ற கிரகங்களின் காரகத்துவத்திற்கு ஏற்ற நபர்கள், தொழில்ரீதியாக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பார்கள்.
 

அதுபோல, 3, 11-க்கு அதிபதிகள் 10-ஆம் அதிபதியுடன் சேர்ந்து செவ்வாய் பலம் பெற்றிருந்தால், உடன்பிறந்த சகோதரர்களுடன் இணைந்து கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன், சந்திரன் பலம் பெற்றிருந்தால் சகோதரி அல்லது உறவுப் பெண்கள், தோழிகள் போன்றவர்களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யும் வாய்ப்பு, சகோதரியைச் சார்ந்தவர்களுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு.

ஒருவர் என்னதான் கல்வி கற்றிருந்தாலும், அவர் ஜாதகத்தில் 5, 9-ஆம் அதிபதிகள் பலம்பெற்று 10-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்து, 5, 9-ஆம் வீடுகளில் பாவ கிரகங்கள் எதுவும் அமையாமல் இருந்து, தந்தைகாரகன் சூரியனும் பலமாக அமைந்து, சூரியனின் வீடான சிம்மத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையாமல் இருந்தால் தந்தை செய்த தொழிலையே ஜாதகர் தொடர்ந்து செய்யக்கூடிய அமைப்பு, தந்தைவழி மூதாதையர்கள் செய்த தொழிலைச் செய்யும் வாய்ப்பு, தந்தைவழி உறவுகளுடன் சேர்ந்து தொழில்செய்யும் அமைப்பு உண்டாகும்.
 

10-ஆம் அதிபதியுடன் 4-ஆம் அதிபதியும் சந்திரன், புதன் போன்ற கிரகங்களும் சேர்க்கைப் பெற்றிருந்தால் தாய்வழி உறவுகள் மற்றும் தாய்மாமனுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். 10-ஆம் அதிபதியுடன் 2-ஆம் அதிபதியும் இணைந்து பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் உள்ள நபர்கள் அல்லது உறவினர்களுடன் கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். 10-ஆம் அதிபதியுடன் குரு, புதன் இணைந்து பலம்பெற்று வலுவாக அமைந்திருந்தால், நண்பர்களுடன் கூட்டுசேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி பலம்பெற்று அமைந்து சனி பகவான் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் அவருக்கு திறமையான வேலையாட்கள் கிடைக்கப்பெறுவதுடன், வேலையாட்களிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்து அதன்மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
 

ஒருவர் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி 5-ஆம் அதிபதியின் சேர்க்கைப்பெற்று, புத்திரகாகரன் குரு பகவானும் பலம் பெற்றிருந்தால் தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் உதவியுடன் தொழிலில் பல சாதனைகள் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். கூட்டுத்தொழில் செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய ஜனன ஜாதகத்தை நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஒருவரது ஜாதகத்தை ஆராயும்போது ஏதாவது ஒரு ஸ்தானம் பலமாக இருந்தால் அந்த ஸ்தானத்தின் காரகத்துவத்திற்கு ஏற்ற நபர் ஜாதகருக்கு கடைசிவரை நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார். அப்படி எந்த ஸ்தானம், கிரகம் பலம்பெற்று அமைந்திருக்கிறதோ, அந்த ஸ்தானம் மற்றும் கிரகத்தின் காரகத்துவம் பெற்ற நபரைக் கூட்டாகச் சேர்த்து தொழில் செய்யும்போது நல்ல லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.
 

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 7-ஆம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் கூட்டுத்தொழில் செய்வதைத் தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவது நல்லது. அப்படியே செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை கூட்டாகச் சேர்த்துக்கொள்வது நல்லது.

 

Next Story

ராஜஸ்தானில் துர்க்கை; சுஸ்வாணி மாதாஜி மந்திர் !

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Suswani Mataji Temple

சுஸ்வாணி மாதாஜி மந்திர் என்னும் ஆலயம் ராஜஸ்தான் மாநிலத்தில், பிக்கானிர் மாவட்டத்திலுள்ள மோர்கானா என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயமிது. இந்துக்கள் மட்டுமின்றி, சமணர்களும் இந்த ஆலயத்தை மிகவும் பக்திப் பெருக்குடன் வழிபடுகிறார்கள். இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் அன்னை சுஸ்வாணி, துர்க்கையின் அவதாரமாகக் கருதப்படுகிறாள். இந்த ஆலயத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதற்கு அருகில் சிங்கத்தின்மீது அன்னை வீற்றிருக்கிறாள்.

1573-ஆம் வருடத்தில் ஹேம் ராஜ் என்ற மன்னர் இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறார். அதனால் அவரது வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இந்த அன்னையை குலதெய்வமாகவே வழிபடுகின்றனர். இதுதவிர, டுகார், சங்க்லா ஆகிய சமணப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இந்த தேவியைத் தங்களின் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ஜெய்ஸால்மரிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் வெளிச்சுவரிலுள்ள சிற்பங்களும் அந்தக் கற்களாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

பிரதான வாயில் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. பூமிக்குக் கீழேயும் அறைகள் இருக்கின்றன. ஆலயத்தின் மேற்கூரை 16 தூண்களின்மீது அமைக்கப்பட்டிருக்கிறது. சில தூண்களில் கல்வெட்டுகள் உள்ளன. இந்த ஆலயத்திற்குள் ஒரு சிவன் கோவிலும் இருக்கிறது. இங்கிருக்கும் சிவலிங்கம் 5,000 வருடங்கள் பழமையானது. சிவனது ஆலயமும் புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

Suswani Mataji Temple

சேட் சக்திதாஸ் - சுகன் கன்வார் என்னும் தம்பதிக்கு 1219-ஆம் வருடத்தில் மகளாகப் பிறந்தவள் சுஸ்வாணி. பத்து வயதுகொண்ட அவளுக்கும், துகார் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் நடைபெறுவதற்குமுன்பு அவளைப் பார்த்த நாகூர் நவாஸ் என்ற மன்னன் அவளது அழகில் மயங்கி, தான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சிறுமியின் தந்தையிடம் கூறினான்.

"அவள் துர்க்கையின் அவதாரம். அவளது சரீரத்தை வேறொரு சரீரம் தொடக்கூடாது. இந்து மதத்தைச் சேர்ந்த அவளை முஸ்லிமான நீ அடைய நினைக்கலாமா? அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்'' என்று கோபத்துடன் கூறினார் சிறுமியின் தந்தை. அதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தான் மன்னன்.

தன் தந்தைக்கு நேர்ந்த கதியை நினைத்தவாறு கவலையுடன் படுத்திருந்த சுஸ்வாணி, தன் துயரத்தைக் கடவுளிடம் முறையிட்டாள். அப்போது கனவில் ஒரு உருவம் தோன்றியது. "கவலைப்படாதே. நவாப்பைப் பார்த்து நீ சவால் விடு. அவனைப் போட்டிக்கு அழைத்து அதில் வெற்றிபெறும்படி கூறு. போட்டி என்னவென்றால்... நீ ஓரிடத்தில் இருக்கவேண்டும். நவாப் அருகில் வந்து உன்னைத் தொடவேண்டும்'' என்று அந்த உருவம் கூறிவிட்டு மறைந்தது. காலையில் எழுந்தபோது, சிறுமியின் நெற்றியில் ஒரு திலகம் இருந்தது. அந்த செந்தூரத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். நவாப்புக்கு தகவல் சென்றது.

அந்த சவாலை ஏற்றுக்கொண்ட அவன், சிறுமியின் தந்தையை விடுதலை செய்தான். தன் சிப்பாய்களுடன் நவாப், சிறுமியின் வீட்டிற்குச் சென்றான். அந்தச் சிறுமி நடக்க ஆரம்பித்தாள். அதற்குமுன்பு தன் கைகளால் அவள் சுவற்றில் செந்தூரத்தைப் பதித்தாள். பின்னர் அவள் ஓட ஆரம்பிக்க, அவளை குதிரையில் அமர்ந்து விரட்டினான் மன்னன். ஆனால் அவளோ மிகவும் வேகமாக ஓடினாள். மன்னனால் அவளைப் பிடிக்கவே முடியவில்லை. சிறுமி கடவுளை வேண்ட, அங்கொரு சிங்கம் தோன்றியது. அதன்மீது அமர்ந்த சிறுமி, அங்கிருந்து மோர்கானாவுக்குப் பயணித்தாள். அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டாள்.

அவளுக்குமுன் தோன்றிய சிவபெருமான் ஒரு இடுக்கியைத் தூக்கிப் போட, பூமி இரண்டாகப் பிளந்தது. சுஸ்வாணி சிங்கத்துடன் பூமிக்குள் செல்ல, பிளந்த பூமி மூடிக்கொண்டது. அவள் அணிந்திருந்த புடவையின் ஒரு சிறியபகுதி பூமிக்குமேலே இருந்தது. அதைப் பிடிக்கமுயன்ற நவாப்பும் அவனுடைய ஆட்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிந்தனர்.

மோர்கானாவில் அப்போதிருந்த மரம் இப்போதும் இருக்கிறது. 1232-ஆம் ஆண்டில் சக்திதாஸ், அவரது தம்பி மால்காதாஸ் ஆகியோரின் கனவுகளில் தோன்றிய சுஸ்வாணி, அந்த இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கூறினாள். கோசாலையிலிருக்கும் புதையலை எடுத்து அதற்காக செலவிடும்படி சொன்னாள். அதைத் தொடர்ந்து அங்கு ஆலயம் கட்டப்பட்டது. கிணறு தோண்டப்பட்டது. கோசாலை பெரிதாகக் கட்டப்பட்டது.

பாரதத்தில் இந்த சுஸ்வாணி அன்னைக்கு பல இடங்களில் ஆலயங்கள் இருக்கின்றன. ராஜஸ்தானில் நாகூர், ஜோத்பூர், கன்வாலியாஸ், மேற்கு வங்காளத்தில் ராஜாரட், தமிழகத்தில் விழுப்புரம், கர்நாடகாவில் அட்டிபெலே, மகாராஷ்டிரத்தில் அன்டர் சூல் ஆகிய இடங்களில் அன்னை சுஸ்வாணிக்கு கோவில்கள் இருக்கின்றன.

சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் பிக்கானிருக்குப் பயணிக்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் வியாழக்கிழமை அனுவ்ராட் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையிலிருந்து சென்னை வழியாகச் செல்கிறது. பிக்கானிரிலிருந்து மோர்கானா 43 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

Next Story

அதிசயம் நிகழ்த்தும் சோழதரம் அங்காள பரமேஸ்வரி !

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 solatharam angala parameswari temple

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சக்தி வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகிலத்தைப் படைத்த ஆதிசக்தி சிவனை கணவராக அடைந்தாள். அதனால்தான் 'சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்கிறோம். இருவரும் இணைந்தால்தான் உலக இயக்கமே நடைபெறும். ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்ததுதான் சிவசக்தி. அதனால்தான் உலகம் சமநிலையுடன் இயங்கி வருகிறது.

உலகின் அடித்தளமே சக்தி வடிவமாய் அமைந்துள்ளது. உலகெங்கும் வாழும் அனைத்துயிர்களுக்கும் உயிர் கொடுத்து வாழ வைப்பது சக்தி. மனிதர்கள், 'நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன்; அதை சாதித்தேன் இதை சாதித்தேன்; உழைத்தேன் உயர்ந்தேன்' என்று பேசுவதைக் காண்கிறோம். ஆனால் அப்படிச் செய்ய ஊக்கப்படுத்துவது சக்திதான் என்பதைப் பலரும் அறிவதில்லை. யோகம், தியானம், இறை வழிபாடு என ஆன்மீகப் பாதையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்களுக்குத் தங்களை இயக்குவது சக்தியென்பது புலப்படும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களையும் செய்து வரும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருமே ஆதிசக்தியின் அம்சமாகவே கருதப்படுகின்றனர்.

ஒவ்வொரு மனித உடலும் சக்தியால் தான் இயங்குகிறது. உடலை விட்டு சக்தி வெளியேறிவிட்டால் உடல் சவமாகி விடுகிறது. எனவேதான் ஆதிசக்தி வடிவமான பெண் தெய்வங்களை வழிபட்டு வருகிறோம். ஒரு குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு அந்தக் குடும்பத்திலுள்ள அனைவரும் மிகுந்த மரியாதையளிப்பார்கள். அந்தக் குடும்பத்தில் எந்த சுபகாரியங்கள் நடந்தாலும், பிறந்த வீட்டுப் பெண்ணை வேறிடத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தாலும் கூட அவர்களை வரவழைத்து குடும்ப நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கச் சொல்வார்கள். திருமணச் சடங்கு நடைபெறும்போது மணமக்களுக்குப் பின்புறம் கையில் விளக்கேந்தி பிறந்த வீட்டுப் பெண் நின்றிருப்பாள். இப்படித் தங்கள் வீட்டில் பிறந்த பெண்ணை முதல் தெய்வமாக முன்னிருத்தி வருகிறார்கள். அதற்குக் காரணம் அவர்களை சக்தி வடிவமாகப் பார்ப்பதுதான்.

ஆதிசக்தி அநீதிகளைச் செய்யும் அரக்கர்களை அழிக்க பல்வேறு உருவங்களில் தோன்றியுள்ளாள். அப்படிப்பட்ட பராசக்தியை அங்காளம்மன், மகிஷாசுரமர்த்தினி, துர்க்கை, காளி, மாரியம்மன், எல்லையம்மன், பிடாரியம்மன், சுடலையம்மன், அகிலாண்டேஸ்வரி, கருமாரியம்மன், வெக்காளியம்மன் எனப் பல்வேறு வடிவங்களில், பெயர்களில் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பொதுவாக ஆதிசக்தி பீடங்கள் 108 என்பார்கள். ஆனால் அதையும் தாண்டி தமிழகமெங்கும் அம்மனுக்குப் பல்வேறு பெயர்களில் கோவில்கள் உள்ளன. மலேசியா, மியான்மர் போன்ற கடல் கடந்த நாடுகளிலும் அம்மன் கோவில்கொண்டு பக்தர்களைக் காத்து வருகிறாள்.

ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழிபட்டு வந்த கோவில்கள் பல்வேறு அரசர்கள் நாடு பிடிக்கும் ஆசையால் படையெடுத்துச்சென்று போர் நடத்தியதன் காரணமாகவும், பூகம்பம் போன்ற பேரழிவுகளாலும் பல கோவில்கள் அழிந்து போயின; பூமிக்குள் புதையுண்டன. அப்படிப்பட்ட கோவில்களில் இருந்த தெய்வங்கள் தங்களை எப்போது வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் - தங்களை மக்கள் வழிபட வேண்டுமென்று எண்ணுகிறார்களோ, அப்போது அவர்கள் மக்களின் பார்வைக்கு வெளிப்பட்டே தீருவார்கள். பல்வேறு பணிகளுக்காக மக்கள் நிலத்தைத் தோண்டும்போது தெய்வச் சிலைகள் பூமியிலிருந்து கிடைக்கப்பெற்று கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படித்தான் அங்காள பரமேஸ்வரியம்மன் பூமிக்குள்ளிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்டுள்ளாள். கடலூர் மாவட்டம், சோழதரம் என்னும் ஊரில் இந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

இந்த ஊரின் மையப் பகுதியில் பூமிக்குள் புதையுண்டும், செடி கொடிகளில் சிக்குண்டும் கிடந்த தெய்வங்களை வெளியே கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து, சிறிய அளவில் கோவில் எழுப்பி வழிபாடு நடத்தி வருகிறார் பெரியவர் ஜெயராம கொண்டியார். அதுகுறித்து அவர் நம்மிடம் கூறும்போது "ஆதிமனிதன் கல்லையெடுத்து வேட்டையாடினான். அடுத்த மனிதன் காட்டையழித்து ஊராக்கி, தான் வாழ்ந்த இடத்தில் கோவிலைக் கட்டினான்.

 solatharam angala parameswari temple

அந்த தெய்வங்களுக்கு விழா எடுத்தார்கள். தாலாட்டு பாடினார்கள். கொண்டாடினார்கள். அப்படிப்பட்ட தெய்வங்களில் ஒன்றான அங்காள பரமேஸ்வரி இந்த ஊரில் கோவில் கொண்டிருந்திருக்கிறாள். சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் ஒன்று இப்பகுதியில் புதையுண்டு கிடந்துள்ளது. இங்கு பூமிக்கடியில் தெய்வங்கள் இருப்பது எனக்குத் தெரிய வந்ததே ஒரு அதிசயம்.

சில ஆண்டுகளுக்குமுன்பு என் கனவில் செவ்வாடை கட்டி அம்மன் உருவில் வந்த பெண் ஒருவர், 'இந்த இடத்தில் பூமிக்கடியில் புதையுண்டு கிடக்கும் என்னையெடுத்து வழிபாடு செய்; உன்னையும் எம்மை வணங்கும் மக்களையும் பாதுகாப்பேன்' என்று கூறிவிட்டு மறைந்தார். அது கனவா நனவா என புரியாமல் தவித்தேன். கனவில் அம்மன் கூறியபடி இந்த இடத்திற்கு வந்தேன். பாழடைந்து புதர் மண்டிக்கிடந்த இடத்தை எந்திரம் கொண்டு தூய்மை செய்யும்போது, கனவில் அம்மன் கூறியபடியே தெய்வங்களின் சிலைகள் கிடைத்தன. அவற்றை ஓரிடத்தில் வைத்துப் பிரதிஷ்டை செய்தேன். பல்வேறு தொந்தரவுகளுக்கு இடையிலும் தெய்வச் சிலைகளைப் பாதுகாத்தேன். வெளிச்சமில்லாமல் இரவு நேரத்தில் படுத்திருந்தபோது என் மீது பாம்புகள் ஊர்ந்து சென்றன. தேள், பூரான் போன்ற விஷ ஜந்துகள் நடமாடின. அவற்றிடமிருந்து அங்காளம்மன் கருணையால் உயிர்பிழைத்தேன்.

இப்படி கடும் சிரமத்துக்கிடையே இந்த தெய்வங்களை ஒருசேர அமைத்து, ஊர்மக்களின் உதவியோடும், குலதெய்வமாக வழிபடும் குடும்பத்தினரின் ஆதரவோடும் வழிபாடு நடத்தி வருகிறோம். வருங்காலத்தில் அம்மனின் அருளால் இந்தக் கோவிலை நவீனப்படுத்துவார்கள். அவர்களுக்கு அன்னை அங்காள பரமேஸ்வரி அதற்கான சக்தியைக் கொடுப்பார்.

அங்காள பரமேஸ்வரிக்கு பரிவார தெய்வங்களாக பாவாடைராயன், சண்டிகேஸ்வரர், அகோர வீரபத்திரசாமி, பேச்சியம்மன், குழந்தையம்மன், பொம்மியம்மா ஆகிய தெய்வங்கள் வெளிப்பட்டன. அவர்களே இங்கு கோவில் கொண்டுள்ளனர். அங்காள அம்மனின் அருளைத் தெரிந்துகொண்ட பக்தர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது இங்கு வந்து வழிபடுவதோடு, அம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடைபெறுவதற்கும், அமாவாசை, பௌர்ணமி பூஜைகளின்போது அன்னதானம் வழங்கவும் உதவிகளைச் செய்துவருகிறார்கள். எந்தவொரு தெய்வமும் பக்தர்களைக் காக்க யார் மூலமாகவோ தங்களை வெளிப்படுத்தியே தீருவார்கள். அப்படிதான் இங்குள்ள அங்காள பரமேஸ்வரியும் அவரது துணை தெய்வங்களும் தோன்றியுள்ளனர்'' என்றார்.

இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனை குலதெய்வமாக வழிபடும் வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ரங்கநாதன், "இந்த அம்மனை குலதெய்வமாக வழிபட்டுவந்த எங்கள் முன்னோர்கள் சோழநாட்டின் மையப் பகுதியிலுள்ள இந்த ஊரில் வாழ்ந்து வந்துள்ளனர். அதனால்தான் இந்த ஊருக்கு சோழமாநகரம் என்று பெயர் இருந்தது. காலப்போக்கில் மருவி சோழதரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வாழ்ந்த எங்களது முன்னோர்கள் காலத்தில், சோழநாட்டின்மீது அந்நியர் படையெடுப்பால் பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர். அப்படிச் சென்றவர்கள் மேலத்தத்தூர், திருமூலஸ்தானம், பொய்யூர், பொன்னன் கோவில், வலசக்காடு, நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருச்சி, கடலூர், சிதம்பரம் என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கடந்த காலங்களில் எங்கள் குலதெய்வமான அங்காள பரமேஸ்வரியை வழிபட முடியாமல் தவித்துவந்தனர்.

அப்படிப்பட்ட நேரத்தில்தான் எங்கேயோ இருந்த ஜெயராமன் கொண்டியார் கனவில் அம்மன் தோன்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அப்போது முதல் குலதெய்வ வழிபாடு செய்யும் எங்களது வம்சாவளியினர் பல்வேறு ஊர்களிலிருந்தும் இங்குவந்து அம்மனையும் அவரது பரிவார தெய்வங்களையும் வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த தெய்வங்களுக்கு ஒரு கோவில் எழுப்பி அதில் புதிதாகப் பிரதிஷ்டை செய்ய முயற்சித்து வருகிறோம்.

இங்குள்ள தெய்வங்களை வழிபடுவோருக்கு இடர்கள், சிக்கல்கள் அனைத்தும் சிதறியோடும். திருமணத்தடை உள்ளவர்கள் திருமணமாகி சந்தோஷமாக வாழ்கிறார்கள். மகப்பேறில்லாத தம்பதிகள் அம்மனை வழிபட்டு குழந்தைப் பேறு கிடைத்துள்ளது. பல்வேறு மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்துவைத்துள்ளார் அங்காளம்மன்'' என்றார். பொதுவாக தெய்வங்களை "மூர்த்தி பெரிதா கீர்த்தி பெரிதா' என்பார்கள். இங்குள்ள அம்மனின் கீர்த்தி மிகப்பெரிய அளவில் பக்தர்களிடையே பரவிவருகிறது.

அமைவிடம்: விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு உள்ளது. அங்கிருந்து தெற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் சோழதரம் உள்ளது. பேருந்து நிறுத்தம் அருகில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது.