Skip to main content

பெண்ணாடம் அருகே சர்க்கரை ஆலை ஆடிட்டரை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் வாக்குவாதம்!

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

Workers protest by besieging a sugar factory auditor near Pennadam

 

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்துள்ள இறையூரில் ஸ்ரீஅம்பிகா தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. திட்டக்குடி,  பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்த கரும்புகளை இங்கு  அரவைக்காக  கொண்டு வருவது வழக்கம். 

 

அப்படி அரவைக்காக கொடுத்த கரும்புகளுக்கான தொகையை  கடந்த 2013 முதல் 2017 வரை ஆலை நிர்வாகம் கொடுக்கவில்லை. மேலும் விவசாயிகளின் பெயரில் சுமார் 150 கோடிக்கும் மேல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆலை நிர்வாகம்  கடன் பெற்று அதனையும் கட்டவில்லை. அதனால் வங்கிகள் கடனை கட்ட வேண்டும் என  விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்தியது.  இதனால் விவசாயிகள் அவ்வப்போது சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

 

அதன் தொடர்ச்சியாக சர்க்கரை ஆலை மூடப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.  அதேசமயம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்தாததால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கூட்டமைப்பு ஆலையை கையகப்படுத்தி ஆலையில் இருந்து வரவேண்டிய பாக்கி தொகையை டெல்லியை சேர்ந்த அனுராகோயல் என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கியது. 

 

அதிலிருந்து ஆலை வளாகத்திற்குள் இருந்த குடியிருப்பில் குடியிருந்துவந்த ஆலை தொழிலாளர்களின் குடும்பங்கள் குடியிருப்பு வளாகங்களிலிருந்து காலி செய்ய வேண்டும் என நிர்ப்பந்தம் படுத்தப்படுவதுடன் அங்கு வழங்கப்பட்டுவந்த மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளையும் துண்டித்தது. இதனால் கடந்த 6 மாதமாக குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த 64 குடும்பங்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

 

இந்நிலையில் நிறுவனத்தின் சார்பில் அதனுடைய ஆடிட்டர் சீனிவாச நாராயணன் என்பவர் நேற்று சர்க்கரை ஆலைக்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினருடன் சீனிவாச நாராயணனின் காரை முற்றுகையிட்டு தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு,  தங்களுக்கு வழங்க வேண்டிய இரண்டு ஆண்டு சம்பள பாக்கி தொகை அனைத்தையும் வழங்க வேண்டும்,  தங்கள் குடியிருப்புகளுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

இதுகுறித்து தகவலறிந்து வந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, சீனிவாச நாராயணனை பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் திட்டக்குடி வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் அருகே 10 ஏக்கர் கரும்பு எரிந்து சேதம்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
10 acres of sugarcane burned and damaged near Srimushnam

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்குபாளையம் கிராமத்தில்10 ஏக்கர் கரும்பு எரிந்து  சாம்பலானது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்குபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார், ராஜேசேகர் ஆகியோருக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று இந்த கரும்பு வயலுக்கு அருகில் இருந்த நெல் வயலில் நெல் அறுவடை முடிந்து வைக்கோலை எரியூட்டியுள்ளனர். அப்போது பலமான காற்று வீசியதால் எதிர்பாராத விதமாக தீ கரும்பு வயலில் பரவியது. இதில் 10 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த கரும்பு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவலறிந்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலான கரும்பின் மதிப்பு ரூ. 10 லட்சம் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பன்னீர் கரும்பு விளைச்சல் அமோகம்; அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Farmers are happy as govt has announced that it will purchase sugarcane at Rs.33

தமிழகத்தில் பெரிதும் போற்றப்படும் தமிழர்களின் விழாவாகப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனைத் தைத்திருநாள் என்று அழைக்கிறார்கள். இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1 ஆம் தேதியில் சூரிய வழிபாடும், விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளாக வருகிற 15 ஆம் தேதி கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் பன்னீர் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, பொங்கல் பானை, அறுவடையில் கிடைத்த புது பச்சரிசி  உள்ளிட்டவை  முக்கிய இடம் பெறுகிறது

இத்தகைய திருநாளைக் கொண்டாடும் விதமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய பன்னீர் கரும்பு சிதம்பரம் பகுதியில் கடவாச்சேரி, பழைய நல்லூர், சாலியந்தோப்பு, பிள்ளைமுத்தாசாவடி, அகரநல்லூர், வேளக்குடி, சேத்தியாதோப்பு, வாழக்கொல்லை, வீராணம் ஏரியின் படுகை, நடுவீரப்பட்டு, பாலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்து விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக அரசே பொங்கலுக்கு பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் கரும்பு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசுடன் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது. இது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, முழு பன்னீர் கரும்பு, ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் 5 அடி உயரமுள்ள முழு கரும்பை ரூ.33க்கு அரசே கொள்முதல் செய்யும் என அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பழைய நல்லூர் பகுதியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயி கூறுகையில், போதிய மழை பெய்ததாலும் இயற்கை இடர்பாடுகள் எதுவும் இல்லாததாலும் கரும்பு நன்றாக விளைந்துள்ளது. ஒரு கரும்பு 6 அடி முதல் 7 அடி வரை வளர்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.