“நீங்க போலீஸா? ப்ரூஃப் காட்டுங்க. நீங்க போலீஸ்ங்கிறதுக்கு என்ன ப்ரூஃப் இருக்கு? போலி போலீஸ் டிரஸ் போட்டிருக்கீங்களா? போலீஸ் டிரஸ் போட்டு நடிக்கிறீங்களா?”
ஒரு நிஜ போலீஸ்காரரை.. அதுவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவரை, அவர் சீருடையில் இருக்கும்போது, பொது இடத்தில் வைத்து இப்படி கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டார் ஒருவர். காரில் வந்த அந்த சப்-இன்ஸ்பெக்டரோ “ஸாரி.. ஸாரி..” என்று கெஞ்சியபடி தள்ளாடினார். காக்கி உடையில் கம்பீரத்துடன் பணிபுரிய வேண்டிய, விருதுநகர் மாவட்டம்- வச்சக்காரபட்டி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன்தான் பொது மக்கள் கூடும் இடத்தில் இப்படி அவமானத்துக்கு ஆளானார்.
அவருக்கு ஏன் இந்த நிலை?
இரவு நேரம் என்றாலும் பணிபுரியும் நேரத்தில் குடித்திருந்தார். காரையும் அவரே ஓட்டி வந்தார். நிதானம் இல்லாமல், விருதுநகர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகிலுள்ள பிள்ளையார் கோவில் முன்பாக காரை நிறுத்தி சிறுநீர் கழிக்க போனார். இதைப் பார்த்த ஒருவர் “நான் அட்வகேட்ங்கிறதுனால கேட்கிறேன்..” என்று பாண்டியராஜனை ஒரு பிடிபிடித்தார்.
“நாங்க தெய்வமா மதிக்கிற கோவில் முன்னால நின்னு சிறுநீர் கழிக்கிறீங்களே? நீங்க இந்துவா? முஸ்லீமா? கிறிஸ்டியனா? உங்க வீட்லயும் இப்படித்தான் பண்ணுவீங்களா? உங்க ஊரு கோவில்லயும் இந்தமாதிரி செய்வீங்களா? ஆமா.. உங்க ஊரு எது?” என்று கேள்விகளை வீச, “வீரசோழன்..” என்று உளறினார் பாண்டியராஜன். அந்த வழக்கறிஞரோ “வீரசோழன்ல இப்படித்தான் பண்ணுவாங்களாம். சார் சொல்லுறாரு. இவரு டிரங்க் அன்ட் டிரைவ். போலீஸ் ப்ரூப் கேட்டா.. ஆதார் கார்டைக் காட்டுறாரு. போலீஸ்ங்கிற ப்ரூஃபே இவர்கிட்ட இல்ல. இவருக்கு எல்லாரும் சல்யூட் அடிக்கணுமாம்.” என்று கலாய்த்தார். இந்தக் கூத்தை செல்போனில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார். வேடிக்கை பார்த்த பொதுமக்களோ சிரித்தார்கள்.
போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை என்று ஹெல்மெட் அணியாதவர்களை விரட்டி விரட்டிப் பிடிக்கிறது தமிழக காவல்துறை. அபராதமும் வசூலித்துவிடுகிறது. டிரங்க் அன்ட் டிரைவ் என்றால், முன்புபோல் ரூ.2000 கிடையாது. ரூ.10000 வசூலித்து விடுகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் சீட் பெல்ட் அணியாமல் தானே காரை ஓட்டி வந்தார். அப்போது, அதிகமாகக் குடித்துவிட்டு நிதானமில்லாத போதையில் இருந்தார். பணி நேரத்தில் சீருடை அணிந்தவாறே குடித்துவிட்டு சீட் பெல்ட் அணியாமல் ஓட்டிவந்த காரை நிறுத்தி, கோவில் முன்பாக சிறுநீர் வேறு கழித்தார்.
‘பாண்டியராஜனுக்கு என்ன தண்டனை? எவ்வளவு அபராதம்?’ என்று கேட்டால், “இனிமேல் இதுபோல் எந்தத் தவறும் செய்யமாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார். எச்சரித்து அனுப்பிவிட்டோம்.” என்கிறார் விருதுநகர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவபிரசாத்.
சட்டத்தின் முன்னால் எல்லோரும் சமம்தானே! பொது மக்களுக்கு ஒரு நீதி! போலீஸுக்கு ஒரு நீதியா?