Skip to main content

எனக்கு திமிரு ஜாஸ்தி...: விஜயகாந்த் மகனின் முதல் அரசியல் மேடை பேச்சு...

Published on 07/10/2018 | Edited on 07/10/2018

 

Vijay Prabhakaran



காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூர் அம்மன் கோயில் திடலில் தே.மு.தி.க.வின் 14-வது ஆண்டு விழா மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை மாலை நடைப்பெற்றது. 
 

மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் ஏற்பாடு செய்த இந்த விழாவில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டார். அவருக்கு இது முதல் அரசியல் மேடை என்பதால் எப்படி பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. 
 

விஜயகாந்த் போலவே விஜய பிரபாகரனின் இயல்பான பேச்சு அனைவரையும் கவர்ந்ததோடு, பலத்த விசில் மற்றும் கைத்தட்டலும் வாங்கினார். 
 

விழாவில் விஜய பிரபாகரன்,
 

"காஞ்சிபுரம் மாவட்டம் எனக்கு பிடித்த மாவட்டம். கட்சி ஆரம்பித்தது முதல் அப்பாவுடன் கூட்டத்திற்கு வருவேன். நான் பின்னாடி அமர்ந்திருப்பேன். காஞ்சிபுரம் மாவட்ட கூட்டம் மட்டும் ஷங்கர் படம் பார்ப்பது போன்று எப்போதுமே மிக பிரம்மாண்டமாக இருக்கும்.
 

காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் முருகேசன் அங்கிள் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் இந்தக் கூட்டத்திற்கு வந்தேன். முருகேசன் அங்கிளை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும். அங்கிள், உங்களுக்காக நான் ஒரு சத்தியம் செய்கிறேன். நீங்க விரைவில் செருப்பு போடுவீங்க. அதைவிட விரைவில் தாடியை எடுப்பீர்கள். 
 

சமீபத்தில் நான் பெங்களூரு, ஹைதராபாத் போயிருந்தேன். அங்கேயும் நம்மைப்போன்ற மனுஷங்கதான் இருக்கிறார்கள். ஏன் அங்க மட்டும் சிட்டி டெவலப் ஆகியிருக்கிறது. இங்க அந்த மாதிரி ஆகல.
 

இங்க இருக்கக்கூடிய மாணவர்களை கேட்டால் 3 விஷயங்களைத்தான் சொல்கிறார்கள். லாயர் ஆகணும், இன்ஜீனியர் ஆகணும், டாக்டரா ஆகணுமுன்னு சொல்றாங்க. இதைவிட மற்ற துறைகள் எவ்வளவோ இருக்கிறது. அந்த துறைகளிலும் போய் நாம் முன்னேறலாம். இதனை பள்ளியில் இருக்கும் ஆசியர்கள்தான் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

நாங்க படிக்கும்போது இந்த அளவுக்கு இன்டெர்நெட், செல்போன்கள் கிடையாது. இன்று உள்ள மாணவர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக படிக்க வாய்ப்பு உள்ளது. 
 

முன்பெல்லாம் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பார்கள். இப்ப எல்லா கோட்டுக்கும் கீழே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 
 

நான் ஆர்கிடெக் படிச்சேன். படித்து முடிந்த பின்னர் அப்பா என்னிடம், எதுவாக இருந்தாலும் அடிப்படையில் இருந்து வரணும். ஒரு கோடு முதல் எல்லாமே தெரிந்து கொள்ள வேண்டும் என சொல்லுவார். எங்கேயாவது வேலைக்கு சேர்த்துவிடட்டுமா என்று கேட்டார். வேணாம், கேப்டன் பையனா போறதவிட, விஜய பிரபாகரனா போறேன். எங்க கிடைக்கிறது என்று பார்ப்போம் என்று சொல்லிவிட்டு, என் பைலை தூக்கிக்கொண்டு பல ஆபிஸ்ல ஏறி இறங்கினேன். 
 

ஒன்னு, நீங்க வேலை கேட்கிறீங்களான்னு சொல்லி அனுப்பிடுவாங்க. இல்லன்னா, அய்யய்யோ பொலிட்டீசியன் ஏதாவது பிரச்சனை ஆயிடும் என்று சொல்லி அனுப்பிடுவாங்க. நான் சொன்னேன், எனக்கு பின்னாடி ஒரு நிழல் இருக்கிறது. அது யாருக்கும் கிடைக்காத நிழல். அந்த நிழல் கேப்டன் விஜயகாந்த். அந்த நிழலை பார்க்காதீங்க. என்னை பாருங்கள் என்றேன். என்னைப் பார்த்து, என் பைலை பாருங்க. வேண்டுமென்றால் வேலை கொடுங்கள் என்றேன். ஒரு வருடம் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்தேன். 
 

எல்லாத்துறையிலும் கஷ்டப்பட்டால் முன்னேறலாம். சைக்கிளில் போறவங்களுக்கு பைக்கில் போகணுமுன்னு ஆசை, பைக்கில போறவங்களுக்கு காரில் போகணுமுன்னு ஆசை. காரில் போறவங்களுக்கு விமானத்தில் போகணுமுன்னு ஆசை. 
 

எல்லா துறையிலும் பிரச்சனை இருக்கு. இந்த பிரச்சனையை சரிகட்டுவதற்கு ஒரு நல்ல தலைவன் வரணும். அது யாருன்னு உங்களுக்கே தெரியும். 
 

நான் காலேஜ் படிக்கும்போது என் மனதுக்கு பிடித்த இரண்டு விஷயங்களை பண்ணினேன். உங்களுக்கு எல்லோருக்மே தெரியும் எனக்கு நாய் என்றால் பிடிக்கும். நாய் கண்காட்சி எல்லா இடத்திலேயும் பண்ணிருக்கேன். 

 

Vijay Prabhakaran


 

முதல்ல நான் ஆரம்பிக்கும்போது யாருமே இல்ல. எதைக்கேட்டாலும் வடநாட்டுக்காரங்க என்று சொன்னார்கள். அப்புறம் விஜயபிரபாகரன்னு ஒருத்தன் இங்க இருக்காண்டான்னு சொல்ல வச்சேன். அப்புறம் எல்லோரும் அங்கிருந்து விஜய் பாய் என்று கூப்பிட ஆரம்பிச்சாங்க. அப்புறம் இந்தியா முழுக்க தெரிந்தது. அப்புறம் வெளிநாட்டுக்கு போனேன். இந்த துறையைப் பொறுத்தவரை வெளிநாட்டில் யாரைக் கேட்டாலும் இந்தியாவில் யாரு என்று கேட்டால் விஜயபிரபாகரன் என்று என் பெயரை சொல்லுவார்கள். 
 

இந்தியாவே கிரிக்கெட் பின்னால் போய்க்கொண்டிருக்கிறது என்பதால் வேற மாதிரி யோசித்தேன். பேட்மிட்டனை தேர்வு செய்து, பி.வி.சிந்துவை தேர்ந்தெடுத்தேன். அவர்கள் எவ்வளவு சாதித்தார்கள் என்று உங்களுக்கே தெரியும். 
 

அதனால்தான் மாணவர்களிடம் அடிக்கடி சொல்கிறேன். ஒரே மாதிரி சிந்திக்க வேண்டாம். மாறி மாறி சிந்தித்து பாருங்கள். கண்டிப்பாக வெற்றி மிக பக்கத்தில் இருக்கிறது. 
 

நான் பண்றதை எப்போதுமே விருப்பப்பட்டுத்தான் செய்வேன். நான் ஆர்கிடெக் பைனல் இயரில் தீசிஸ் பண்ணும்போதுகூட விருப்பப்பட்டுத்தான் செய்தேன். இன்றைக்கும் என்னுடைய ஜூனியர்கள் எனக்கு போன்போட்டு, நீங்க பண்ணின டிசைன் ரொம்ப நல்லாயிருக்கு. யாரும் பண்ணியது இல்லை. எப்படி நீங்க உங்களுக்கு பிடிச்சதை செய்றீங்கன்னு கேட்பாங்க. 

எனக்கு பிடிச்சதையெல்லாம் செய்யறதுக்கு அனுமதி கொடுத்தது அப்பா, அம்மாதான். தெரிஞ்சோ தெரியாமலோ இப்ப எனக்கு பிடிச்ச இடத்தில்தான் வந்து நிற்கிறேன். இரண்டு தொழில் எடுத்தேன். வெற்றி பெற்றதாக நினைக்கிறேன். (வெற்றி பெறுவீர்கள் என்று சத்தம்) பார்க்கலாம்.
 

எனக்கு பிரபாகரன் என்று அப்பா பெயர் வைத்தார். எல்லோரும் சொல்லுவார்கள் இலங்கை பிரபாகரனை நினைத்துதான் அப்பா பெயர் வைத்தார் என்று. அந்த பெயரை காப்பாற்றுவேன் என்று சத்தியம் செய்கிறேன். 
 

இந்தக் கூட்டத்திற்கு புறப்படும் முன்பு அப்பாவிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்பட்டேன். அப்போது அவர், நான் சீக்கிரம் வருவேன்னு சொல்லு என்றார். என் மக்களை தங்க தட்டில் தாலாட்ட சீக்கிரம் வருவேன்னு சொல்லு என்றார். இன்னொரு விசயம் சொன்னார். பெண்கள் நிறைய பேர் வந்திருப்பார்கள். அதனால் முருகேசனை சீக்கிரம் கூட்டத்தை முடிக்க சொல்லு. மழை வந்தாலும் வரும் என்றார். நான் சொன்னேன். நம்ம கட்சி பெண்கள் மிகவும் தைரியமானவர்கள். அம்மா பிரேமலதாவை பார்த்து பார்த்து வளர்ந்தவர்கள். யாரும் எதுவும் பண்ண முடியாது என்று சொன்னேன்.
 

தொண்டர்களை பாரு உனக்கு தைரியம் தானா வரும் என்றார். எனக்கு இப்ப பயங்கர தைரியமா இருக்கு. சத்தியமா சொல்கிறேன். இன்னும் பத்தாயிரம் பேர் வரட்டும், ஒரு லட்சம் பேர் வரட்டும், தேமுதிகவில் இருந்து ஒரு செங்கலை கூட யாராலும் அசைக்க முடியாது. இதனை நான் கேப்டன் மகனாக சொல்லவில்லை. ஒரு தமிழனாக சொல்கிறேன். 
 

நான் ஒரு இளைஞனாக தனியாக என்னால் எதுவும் செய்ய முடியாது. என் கூட பல லட்சம் இளைஞர்கள் வரவேண்டும். என்னை நீங்க விஜயகாந்த் பையனா பாக்காதீங்க. உங்க ப்ரண்டா பாருங்க. ஹாய் ப்ரோ, என்ன மச்சான், என்ன மாமா என்ற அந்த லெவலில் பாருங்க. சேர்ந்து கைகொடுங்கள். கண்டிப்பாக சாதிப்போம். 
 

எனக்கு திமிரு ஜாஸ்தி. ஆணவ திமிரு இல்ல, திரும்பவும் சொல்கிறேன். தேமுதிக அடுத்த முறை ஆட்சியை அமைக்கும். ஏனென்றால் இங்கு வரவேற்பு அப்படி, கூட்டம் அப்படி, பிரபாகனாக உங்கள் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்வேன். 
 

இது என்னோட முதல் மீட்டிங். முதல் மீட்டிங்கிலேயே அவதூறு வழக்கு வேண்டாம், டைம் ஆகப்போகுது. அதனால இங்க எங்க அப்பா, அம்மா இல்ல, வீட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சொன்னதை வைத்து முடிக்கிறேன். தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்... நமது முரசு... நாளை அரசு... விடைபெறுகிறேன். வணக்கம். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூடாரத்தையே காலி செய்து விட்டார்கள்” - கடுமையாக விமர்சித்த பிரேமலதா!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Premalatha Vijayakanth who strongly criticized pmk in election field 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார். அப்போது அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே நேரம் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாத புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கலந்துகொள்ளவில்லை.

Premalatha Vijayakanth who strongly criticized pmk in election field 

இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், “ஜெயலலிதா இல்லாத சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி  சந்திக்கும் முதல் தேர்தல் இது. நான் தே.மு.தி.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, விஜயகாந்த் மறைந்த பிறகு முதல் முறையாக சந்திக்கும் பாரளுமன்ற தேர்தல் இது. நாங்கள் இருவரும் ராசியான வெற்றி கூட்டணியை வரும் காலத்தில் நிச்சயமாக சாதித்துக் காட்டுவோம். அ.தி.மு.க.வும் - தே.மு.தி.கவும் மக்களுக்கு ஒரு சிறந்த அடையாளமான கட்சியாக விளங்குகிறது. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்.

இரண்டு நாட்கள் வரைக்கும் கூட்டணியில் இருக்கின்றோம் இருக்கின்றோம் என நாடகம் நடத்தியவர்கள் எல்லாம், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடனே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று கூடாரத்தையே கிளப்பி வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார்கள். ஆனால் தே.மு.தி.க. அப்படி கிடையாது. ஒரு வார்த்தை சொன்னால் அந்த வார்த்தையில் உறுதியாக இருப்போம். நம்பிக்கையாக இருப்போம். ஏனென்றால், எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். கொங்கு மண்டலக்காரர்கள் மரியாதை மிக்கவர்கள். அன்பானவர்கள். அதே போல நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என ஒவ்வொரு முறையும் நிரூபித்து காட்டுகிறார். ஒரு வார்த்தை சொன்னால் சொன்னது தான். துளசி வாசம் மாறலாம். தவசி வார்த்தை மாறியதாக வரலாறு கிடையாது. என்ன நடந்தாலும் அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. இருக்கும் என உறுதி கொடுத்தேன்” எனப் பேசினார். 

Next Story

“எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகத்தான் அரவிந்த் கெஜ்ரிவால் கைது” - வைகோ குற்றச்சாட்டு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Vaiko has alleged that Arvind Kejriwal was arrested to intimidate the opposition parties

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இந்தியா கூட்டணி சார்பில் நடக்கும் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். 20 நாட்கள் பிரச்சாரம் செய்யும் அவர் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில்  பெரம்பலூர், திருச்சி  திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.

பின்னர் திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது, “வரும் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இன்று கோஷத்தை வைக்கின்ற இந்துத்துவா சக்திகள், சனாதன சக்திகள் கை ஓங்கி விடக்கூடாது என்பதிலே இந்தியா கூட்டணி வலுவாகவே இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியை அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக நடத்தி வருகின்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிரச்சாரத்தை துவங்குகிறார். தமிழகம் - புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துதான் டெல்லி முதலமைச்சரை கைது செய்து கொண்டு போனார்கள்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்கள். இந்துத்துவ அஜண்டாவை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கூட மறுத்து வருகிறார்கள். பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார்கள். ஆகவே ஜனநாயகத்திற்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் சம தர்ம கொள்கைக்கும் விரோதமாக ஒரு கூட்டம் இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது. இது பெரியார் பூமி, அறிஞர் கலைஞருடைய பூமி. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு உண்மையாக விடுக்கப்பட்ட சவால். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகத்தான் கெஜ்ரிவால் கைது. இதனை பாரதிய ஜனதா ஒத்துக் கொள்ள மறுக்கிறது. அவர்கள் எதைத்தான் ஒத்துக் கொள்வார்கள்” என்றார். இதனைத் தொடர்ந்து, நேற்று திருச்சிக்கு வந்த துரை. வைகோ திருவரங்கத்தில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.