திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சாந்தி டிரைவிங் ஸ்கூல் என்ற பெயரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவரது பள்ளியில் புதிதாக இலகுரக வாகனம் கற்றுக் கொள்ள வருபவர்களுக்கும், கனரக வாகனம் கற்றுக் கொள்பவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு துறையூர் மோட்டார் வாகன பகுதி அலுவலகத்தின் மூலம் உரிமம் பெற்றுத் தருகிறார்.
புதிய ஓட்டுநர்களுக்கு உரிமம் வழங்குவதற்காக துறையூர் பகுதி அலுவலகத்தில் பணிபுரியும் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி என்பவர் இலகுரக வாகனங்களுக்கு 1500 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 3000 ரூபாயும் கொடுத்தால் மட்டுமே உரிமம் வழங்க இயலும் என்று கூறி பணம் பெற்று வருகிறார். இந்த நிலையில் மேற்படி சண்முகம் கடந்த ஒரு வாரத்தில் இலகு ரக வாகனங்களுக்கான உரிமம் பெறுவதற்காக நான்கு விண்ணப்பங்கள் கொடுத்துள்ளார். அவற்றிற்கு வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி உரிமம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.
சண்முகம் தான் அளித்த நான்கு விண்ணப்பங்களுக்கான உரிமங்களை வழங்க சத்தியமூர்த்தியிடம் கேட்டதற்கு தனக்கு 6000 லஞ்சமாக கொடுத்தால்தான் தன்னால் உரிமம் வழங்க முடியும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி மணிகண்டனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று சத்தியமூர்த்தி ரூ 6000 லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.