Skip to main content

அமெரிக்க தமிழ்சங்கங்களின் பொங்கல் விழாக்களில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
u

 

இவ்வாண்டு பொங்கல் விழாக்களில் அமெரிக்காவில் மிச்சிகன், சியாட்டில், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ வளைகுடா, அட்லாண்டா, சான் அன்டோனியோ, டாலஸ், ஹூஸ்டன், ஃபிலடெல்ஃபியா, வாஷிங்டன் டிசி, நியூஜெர்சி, நியூயார்க் ஆகிய மாகாணங்கள்/பெருநகரங்கள் மற்றும் கனடாவின் கேல்கரி தமிழ் சங்கத்திலும், தமிழகத்தின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு,  தேனி பொதிகை தமிழ் சங்கம், பொன்னமராவதி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் அறிமுகம் மிக சிறப்பாக நடைபெற்றது.

 

சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் விழா அரங்குகளில் குழுமியிருந்த உலகத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோருக்கும் ஹூஸ்டன் தமிழ் இருக்கை குறித்த விழிப்புணர்வு பெறும் வகையில் இருக்கையின் நிர்வாகிகள், ஆலோசகர்கள், குறிக்கோள்கள், முன்னெடுப்புகள், மக்களின் பங்களிப்பு, சமீப-நீண்ட எதிர்கால திட்டப்பணிகள் குறித்து பிரதிநிதிகளால் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், அந்தந்த நகரங்களில் சங்கங்களின் நிர்வாகிகளுடன், இருக்கை பிரதிநிதிகளின் கலந்தாய்வு கூட்டங்களும் சிறப்பாக நடந்தன.

 

us

 

தமிழ் மொழி, தமிழரின் கலாச்சாரம்-பண்பாடு, மானுட வாழ்வியல் மற்றும் வாணிபத்திறன் ஆகியவற்றை ஆராய்ந்து, சீராக தரவாக்கவுள்ள ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் முழு மதிப்பான 42 கோடி ($6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) சரிபாதி தொகையான 21 கோடி( $3 மில்லியன்) நிதியை அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாண அரசு, அதன் ஆய்வகங்கள் நிறுவும் அரசின் ஊக்கத்தொகையிலிருந்து வழங்க முன்வந்துள்ளது. மீதமுள்ள ₹21 கோடி ($3 மில்லியன்) டாலர்களை திரட்டும் முன்னெடுப்பு துவங்கியுள்ள நிலையில் அதன் சரிபாதியை, அதாவது $1½ மல்லியன் டாலர்களை டெக்ஸஸ் மாகாணத்தில் வாழும் தமிழர்களே திரட்டித்தர உத்தரவாதங்களும், நிதித்திரட்டல் நிகழ்வுகளும் முழுவீச்சில் தொடங்கிவிட்டன. இதுவரை ₹2 கோடி ($0.3 மில்லியன்) பெறுமானமுள்ள நிதி திரட்டப்பட்டுள்ளது. 

 

தமிழகத்திலிருந்து மரபுக்கலை நிகழ்ச்சிகள் நடத்த சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் அமெரிக்கா வந்துள்ள கலைஞர்கள் அனைவருடனும் உரையாடல்களை நிகழ்த்திய ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் பிரதிநிதிகள், அந்த கலைஞர்களின் வாழ்க்கை, பொருளாதாரம், அவர்களின் எதிர்கால திட்டங்கள், அவர்களின் கலைத்தொன்மை-திறன்களை அடுத்த தலைமுறையினர் எடுத்து நடத்திச்செல்ல தேவையான முன்னெடுப்புகளுக்கு தமிழ் இருக்கை சார்பான திட்டமிடல்கள் குறித்த ஆலோசனைகளையும் நடத்தினர். ஃபிலடெல்ஃபியா, வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் கலைஞர்களுடன் பயணித்த தமிழ் இருக்கையின் பிரதிநிதிகள், கலைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தனித்திறன்களை கண்டுகளித்தும், வெகுவாக பாராட்டியும் மகிழ்ந்தனர்.

u

 

தமிழகத்தின் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் நிகழ்வித்து காட்டி சாதித்துள்ள மதிப்பிற்குரிய உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் வாஷிங்டன் மாநகரில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை பிரதிநிதிகளின் கலந்துரையாடல் குறிப்பிடத்தகுந்ததாய் அமைந்தது. அமெரிக்க தமிழ் பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் பயிலும் முறை, பாடத்திட்டம் ஆகியவற்றிற்கு உதவியாய் இருக்க ஹூஸ்டன் தமிழ் இருக்கை எடுக்க வேண்டிய முயற்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகள் பெறப்பட்டன. உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களை ஹூஸ்டன் மாநகரத்துக்கு வந்து தமிழ் இருக்கை அமையவுள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழ் இருக்கையின் மூத்த நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து பேசி ஆலோசனைகள் வழங்க பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பையும் விடுத்துள்ளனர்.

 

அமெரிக்காவின் பல நகரங்களில் பரவி வாழும் தமிழர்களை ஒருசேர ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ்சங்கங்களின் தலைவர்கள்/நிர்வாகிகள் மேற்கண்ட நகரங்களுக்கு பயணமாகி அங்குள்ள தமிழ் சங்கங்களின் பொங்கல் விழாக்களில் ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் பிரதிநிதிகளாக பங்கேற்று, இருக்கை குறித்த விளக்கவுரையை மேடையேறி அளித்தது இந்த ஆண்டின் பொங்கல் விழாக்களில் சிறப்பம்சமாக இருந்தது.

 

ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் தலைவரான சொக்கலிங்கம் சாம். கண்ணப்பன் அமெரிக்க வாழ் தமிழர்களின் முத்தவர்களில் ஒருவரும், முன்னோடியுமாவார். பொருளாளர் முனைவர்.நா கணேசன்  அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் மூத்த தமிழ் விஞ்ஞானி. இயக்குனர்கள் முனைவர்.அப்பன் நம் தமிழ் சமூகத்தில் மூத்தவரும் அமெரிக்க பெருவணிகத்தில் மிக நீண்டகால அனுபவம் பெற்றவருமாவார். மற்றொரு இயக்குனரான நாராயணன் பல பத்தாண்டு காலமாக அமெரிக்காவின் சமூக பங்களிப்பில் முன்னோடியும் மூத்தவருமாக இருந்து வருபவர். மற்றும் டாக்டர் திருவேங்கடம் ஆறுமுகம் (ஆராய்ச்சி துணை தலைமை) மற்றும் திரு துப்பில் நரசிம்மன் (நிதி துணை தலைவர்) ஆகியோர் பக்க பலமாக உள்ளார்கள். இருக்கையின் நிர்வாகக்குழு செயலாளர் திரு. பெருமாள் அண்ணாமலை, ஐ.டி. துறையில் மென்பொருள் வல்லுனர் மற்றும் பல சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இளம் தலைமுறை தமிழர்.

 

ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் ஆலோசகர்களாக கலைமாமணி முனைவர்.வி.ஜி.சந்தோசம், பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), கலைமாமணி அபிராமி ராமநாதன், வாழப்பாடி இராம.சுகந்தன் ஆகியோர் தங்களின் மேலான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.  இருக்கை குறித்த மேலும் பலதகவல்களுக்கு சமூக வளைதளங்களிலும், இணையத்தில் www.HoustonTamilChair.org என்ற முகவரியிலும் அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

 

தலைவாழை இலையில் பாரம்பரிய தமிழ் உணவுகள் பரிமாறப்பட்டு, கரும்பு, மஞ்சள், மாவிலை தோரணங்களுடன் இந்த ஆண்டு ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் அறிமுகமும் பொங்கல் விழாக்களை சிறப்பித்துள்ளது என்று கூறுவது மிகையாகாது.

 

        
 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம்! 

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

India is second in the list of US citizens!

 

நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்ற வெளிநாட்டினரின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 

 

கடந்த மாதம் ஜூன் 15- ஆம் தேதி வரை 6,61,500 வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. குடியுரிமைப் பெற்றவர்களில் மெக்சிகோ முதலிடம் பெற்ற நிலையில், அதற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 12,928 பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். குடியுரிமைப் பெறும் வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிலிப்பைன்ஸ், கியூபா நாடுகள் உள்ளன. 

 

Next Story

இந்தியாவில் கொடிய கரோனா அலை; ஜோ பைடனுக்கு கடிதம் எழுதிய 57 எம்.பிக்கள்!

Published on 13/05/2021 | Edited on 13/05/2021

 

joe biden

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பல்வேறு சர்வதேச நாடுகளும் உதவி அளித்து வருகின்றன. அந்தவகையில், அமெரிக்காவும் தடுப்பூசி தயாரிப்புக்கான மூலப் பொருட்களை இந்தியாவிற்கு வழங்கியதோடு, ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் பிற மருத்துவ உபகரணங்களையும் இந்தியாவிற்கு அளித்துள்ளது. மேலும், இந்தியாவிற்குத் தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்துள்ளது.

 

இந்தநிலையில் இந்தியாவில் நிலவும் கரோனா பாதிப்பு தொடர்பாக 57அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள், "கரோனா  பாதிப்பின் அதிகரிப்பு இந்தியாவின் சுகாதார அமைப்பை மூழ்கடித்துள்ளது. வைரஸ் தொற்று உள்ள எல்லா இடங்களிலும், அவற்றை அழிக்க நமது பங்கைச் செய்யவேண்டும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொடிய கரோனா இரண்டாவது அலை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம். இந்தியா இப்போது கரோனா தொற்றுநோயின் மையமாக உள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மீள இந்தியாவுக்குக் கூடுதல் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற முக்கிய வளங்கள் தேவைப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கடிதத்தில், "இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்,  ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஆலைகள், கிரையோஜெனிக் ஆக்ஸிஜன டேங்கர்கள் உள்ளிட்டவரையும், ரெம்டெசிவிர், டோசிலிசுமாப் போன்ற மருந்துகளையும், வென்டிலேட்டர்கள், பைபாப் ஆகிய மருத்துவ உபகரணங்களையும் இந்தியாவிற்கு வழங்க வேண்டும்" என்று ஜோ பைடனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் அவர்கள், "இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் அமெரிக்காவிற்கான நலனுமுள்ளது. முடிந்தவரையில், இந்தியாவிற்குத் தடுப்பூசி வழங்க நீங்கள் முயற்சிப்பீர்கள் என நம்புகிறோம். மேலும், இந்தியா அதிகளவிலான தடுப்பூசி தயாரிப்பதற்காக, அவர்களுக்குத் தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை வழங்கச் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை வரவேற்கிறோம். மேலும் உபரியாக இருக்கும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை விரைவில் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனவும் அவர்கள் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர்.