Skip to main content

4 கோடி ரூபாய் மோசடி; நீதிமன்றத்தில் சரணடைந்த 2 பெண்கள்

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

Two women surrender in court in Rs 4 crore fraud case

 

ஆத்தூர் அருகே குறைந்த விலைக்கு தங்க நகைகள் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்து 4.12 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பெண்கள் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

 

பெரம்பலூர் மாவட்டம் நொச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (45). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூரில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் பெண் ஆசிரியர் ஷியாமளா  என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் தனது தங்கை ஜீவா, கணவர் சிவக்குமார் ஆகியோருடன் சேர்ந்து குறைந்த விலைக்கு தங்க நகை வாங்கித் தருவதாகக் கூறினார். அதை நம்பிய நான் அவர்களிடம் 25 லட்ச ரூபாய் கொடுத்தேன். என்னைப் போல் பலர் அவர்களிடம் லட்சக்கணக்கில் கொடுத்தனர். ஆனால், யாருக்கும் அவர்கள் தங்க நகைகளை வாங்கிக் கொடுக்கவில்லை. பின்னர் தான் அவர்கள் திட்டமிட்டே எங்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

 

இது குறித்து குற்றப்பிரிவு டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் காவல்துறையினர் விசாரித்தனர். பள்ளி ஆசிரியர் ஷியாமளா, அவருடைய தாய் சித்ரா, சித்தி விஜயா, தங்கை ஜீவா, கணவர் சிவக்குமார் ஆகிய ஐந்து பேரும் குறைந்த விலைக்கு தங்க நகைகள் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்திருப்பது ஊர்ஜிதமானது. கந்தசாமியைப் போல் மேலும் 23 பேர் அவர்கள் மீது புகார்களைக் கொடுத்துள்ளனர். இதன்மூலம் ஷியாமளா தரப்பினர் கிட்டத்தட்ட 4.12 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.    

 

இதையடுத்து, பெண் ஆசிரியர் ஷியாமளா உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் வீரகனூரில் வசித்து வந்த ஷியாமளா, மஞ்சனியில் வசித்து வந்த ஜீவா, சிவக்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். சித்ரா, விஜயா ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர். காவல்துறையினர் அவர்களைத் தேடிவந்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை (பிப். 20, 2023) அவர்கள் இருவரும் சேலம் 6வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரித்த நீதித்துறை நடுவர், இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதையடுத்து சித்ரா, விஜயா ஆகிய  இருவரும் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். விரைவில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

இளம் பெண் ரயில் நிலையம் அருகே கொடூரக் கொலை; பின்னணி என்ன ?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
A young woman from Chennai was passed away near Gudiyattam railway station

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.