Skip to main content

கொசு மருந்து திரவத்தை குடித்து பலியான மூன்று வயது குழந்தை!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

Three-year-old child passed away after drinking mosquito repellent

 

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல், பாத்திமா நகர் வெள்ளச்சாமி தெருவைச் சேர்ந்தவர்கள் தமிழரசன் - அருள்மொழி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் கிஷோர் என்ற மகன் உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.10.2021) அன்று கிஷோர் கொசு மருந்து திரவ பாட்டிலை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அதன் மேற்பகுதி திறந்துகொண்டதில் அதிலிருந்த திரவத்தை குழந்தை குடித்ததாக தெரிகிறது. அதன் பின்பு நெஞ்செரிச்சலால் கதறி அழுத குழந்தையை அருகில் இருந்த கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

அங்கு பரிசோதித்த மருத்துவர் சரியான சிகிச்சை அளிக்காமல் நேரத்தைக் கடத்தியதோடு, பின்னர் குழந்தையைக் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அங்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மூன்று வயது குழந்தை கிஷோர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து பிரேதப் பரிசோதனைக்காக குழந்தையின் உடலை காரிலேயே குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்தது எழும்பூர் மருத்துவமனை என்பதால் இங்கு பிரேத பரிசோதனை நடத்த முடியாது, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தனர்.

 

இதனால் பலமணி நேரம் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஜி.எஸ்.டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த குரோம்பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் விசாரித்துவருகிறார்கள். இந்நிலையில், குழந்தை இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக கிஷோரின் பெற்றோர் தனியார் கிளினிக் மருத்துவர் சுபாஷ் மீது புகார் அளித்துள்ளனர். அதில், அவர் வேறொரு மருத்துவரின் பதிவு எண்ணை வைத்து மருத்துவ தொழில் செய்துவருவதாக கூறியுள்ளனர். இதனையறிந்த சுபாஷ் தனது கிளினிக்கைப் பூட்டிவிட்டு தலைமறைவாகியிருக்கும் நிலையில் அவரை போலீசார் தேடிவருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.