Skip to main content

சந்தேக மரணம்; தாயின் உடலில் காயம் - மகன் பரபரப்பு புகார்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Son complains to police as he is suspicious of his mother passed away

ஈரோடு வீரப்பன் சத்திரம் அசோகபுரம் கலைமகள் 2வது வீதியைச் சேர்ந்தவர் சித்ரா (37). சித்ரா ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் ஜவுளிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது கணவர் செந்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு 20 வயதில் மகன் ஒருவர் உள்ளார். சித்ரா வியாபாரம் சம்பந்தமாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சென்றபோது, காங்கேயத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி சித்ராவின் வீட்டில் வந்து இசக்கியப்பன் தங்கியுள்ளார். 

இந்நிலையில், கடந்த 1ம் தேதி இசக்கியப்பன் அவரது மனைவியுடன் சண்டை போட்டு வந்து, சித்ராவின் வீட்டில் தங்கி, தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். சித்ரா இசக்கியப்பனை கண்டிக்க, இசக்கியப்பன் சித்ராவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், மனவேதனை அடைந்த சித்ரா வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த இசக்கியப்பன், சித்ராவின் தோழி சங்கீதா ஆகியோர் சித்ராவை மீட்டு, சமாதானம் செய்து வீட்டிலேயே படுக்க வைத்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று அதிகாலை சித்ராவின் மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சித்ரா உடலில் பல காயங்களுடன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதையடுத்து சித்ராவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன், ஈரோடு வடக்கு போலீசில் தனது அம்மாவின் உடலில் பல இடங்களில் காயம் உள்ளதால் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.