விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள சந்தை மேட்டுபதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள் ஆகியவற்றிற்கு அரிசி மற்றும் அது சம்மந்தமான அத்தியாவசிய பொருட்களை லாரிகளில் ஏற்றி அனுப்பப்படும். இந்த கிடங்கில் பல ஆண்டுகளாக பதிவு எண் இல்லாத கனரக லாரிகள் இயக்கப்பட்டு வந்துள்ளன. மேலும் இன்ஷூரன்ஸ் உட்பட பல முக்கிய ஆவணங்கள் இல்லாமல் பல்வேறு கனரக லாரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பதிவு எண் கொண்ட மூன்று லாரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோன்று வேறு ஒரே பதிவு எண்ணில் இரண்டு லாரிகளும் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் ஒரு லாரியும் இயக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆறு கனரக வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக திண்டிவனம் பகுதி முருகம்பாக்கத்தை சேர்ந்த கவுசர்பாஷா என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்ப். திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் வாணிப கிடங்கிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி செல்வதற்கு தேவையான லாரிகளை வாடகைக்கு இயக்கப்பட்டு வருகிறன்றன.
இந்த வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமலும் அந்த வாகனங்களில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணையை எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இதனால் பல்வேறு ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டிய மண்ணெண்ணெய் திருடப்பட்டு இங்கிருந்து இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது இப்பகுதி மக்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.