Skip to main content

பாமக வெற்றிபெரும் என்று சொன்னதைக் கேட்டேன்: இன்று இரவு நல்லபடியாக தூங்கப் போகிறேன்! டாக்டர் ராமதாஸ் பேச்சு!!

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் பாமக வேட்பாளரான ஜோதி முத்து போட்டியிடுகிறார். அதன் அடிப்படையில் அதிமுக கூட்டணி  கட்சி சார்பில் திண்டுக்கல்லில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.

 

pmk Founder ramadoss election campagin  in dindugul

 

இக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். அதுபோல் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன். இன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டனர்.

 

இக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்சோ.....

 

 

இங்குள்ள முன்னாள் மேயர் பேசும்போது முதல்வரும், துணை முதல்வரும் பாமகவுக்கு வடக்கே செல்வாக்கு இருக்கிறது. தெற்கே  பாமகவுக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கி இருக்கிறார்கள் என்று சொன்னார். ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் சென்னார்களோ இல்லையோ அதற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ராமதாஸ் சொல்லி முடிப்பதற்குள் மேடையில் ராமதாஸின் அருகே உட்கார்ந்திருந்த அமைச்சர் சீனிவாசன் முதல்வரும், துணை முதல்வரும் அப்படித்தான் சொல்லி இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக சொன்னதைக் கேட்ட ராமதாசும் அதற்கு நன்றி சொன்னார்.

 

அதன் பின் மீண்டும் பேசிய ராமதாஸ்சோ... திண்டுக்கல் தொகுதியில் பாமக நிற்குமோ என  சிலர் நினைத்தார்கள். இன்றைக்கு நீங்கள் எல்லாம் வேறு மாதிரியாக பேசி இருக்கிறதை பார்க்கும்போது ஒரு லட்சம் இரண்டு லட்சம் இல்லை 3 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்று சொன்னதைக் கேட்கவும் தான் இன்று இரவு  நல்லபடியாக நான் தூங்கப் போகிறேன். இதை உடனே அன்புமணிக்கும், ஜிகே மணிக்கு தெரியப்படுத்துவேன். இது மூலம் பாண்டிச்சேரி உள்பட ஏழு தொகுதிகளிலும் பாமக வெற்றி பெறும் அதோடு பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சி வெற்றிபெறும். அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எல்லாம் உண்மையாக உழைப்பவர்கள். அவர்களிடம்  சூதுவாது எல்லாம் கிடையாது. ஆனால் மற்ற கூட்டணிக் கட்சிகள் மாலை போட்டு விட்டு கழுத்து அறுத்துவிடுவார்கள்.

 

 

முதன்முதலில் ஜெ.வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றோம் அதுபோல் தற்போது மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து அதன் மூலம் இந்த மெகா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும்  வெற்றி பெறும்  விவசாய குடும்பத்தில் பிறந்த ஜோதி முத்துவை வேட்பாளராக இறக்கியிருக்கிறோம். இந்த திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை அப்படிப்பட்ட இந்த கோட்டையை யாரும் ஓட்டை போட முடியாது அந்த  அளவுக்கு கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அதில்  பாமகவுக்கு மாங்கனி சின்னம் என்றாலும் அந்த மாங்கனியின் இரண்டு பக்கமுமே இலை இருக்கிறது என்று மக்களிடம் சொல்லுங்கள். நான் அதிமுகவில் கூட்டணி வைத்தைக் கண்டு ஸ்டாலின் முதன் முதலில் வசைபாட ஆரம்பித்துவிட்டார். 

 

 

pmk Founder ramadoss election campagin  in dindugul

 

 

அங்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை கலைஞருக்குப் பிறகு இனிமேல் அந்த கட்சி தேராது. தற்பொழுது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்த அரசு மேல் கோபமாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உங்களுடைய கோரிக்கைகளையும், குறைகளையும் தேர்தல் முடிந்தவுடன் நானே முதல்வரிடமும், துணை முதல்வருடன் பேசி நிறைவேற்றிக் கொடுக்கிறேன் என்று கூறினார்.

 

 

இக்கூட்டத்தில் பாமக மாநில பொருளாளர் திலகபாமா மற்றும் மாவட்ட தலைவர் பரசராமன் உள்பட மாநில பொறுப்பாளர்கள் சிலர் வந்திருந்தனர் அதுபோல் கூட்டணி கட்சியில் உள்ள தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, கிழக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்பட கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

இக்கூட்டத்திற்கு கட்சிக்கார்களோடு பொதுமக்களை டோக்கன் அடிப்படையிலும் அழைத்து வந்து இருந்தனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்த கூட்டம் நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும்போது பொது மக்களின் கூட்டமும் குறைந்து பெரும்பாலான  இருக்கைகள் வெறிச்சோடிதான் காணப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.