Skip to main content

தலைக்கேறிய போதை! ஆசிட் கலந்து மது குடித்தவர் பலி! 

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

Person passed away who mixed Acid to alcohol

 

விழுப்புரம் மாவட்டம், குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன்(55). கூலித் தொழிலாளியான இவர், அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர் எனச் சொல்லப்படுகிறது. இவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். 

 

இந்த நிலையில் வாசுதேவன் இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கத்திற்கு மாறாக காலை முதலே மதுபோதையில் இருந்து வந்துள்ளார். அன்று மாலை 6 மணி அளவில் அவரும் அவரது நண்பர் மணிபாலன் என்பவரும் மது அருந்துவதற்காக விழுப்புரத்தில் மது பாட்டிலை வாங்கிக்கொண்டு தங்கள் ஊருக்கு அருகில் உள்ள கோழிப் பண்ணை பகுதிக்கு சென்றுள்ளனர். 

 

மதுவில் கலப்பதற்கு தண்ணீர் இல்லாததால், அருகில் இருந்த கோழிப்பண்ணைக்கு சென்று அங்கு தண்ணீர் போன்று ஒரு பாட்டில் இருந்தை எடுத்து  மதுவில் கலந்து வாசுதேவன் குடித்துள்ளார். மணிபாலன் அப்படி கலந்த மதுவை குடிப்பதற்கு வாய்க்கு அருகே கொண்டு போனபோது அவருக்கு மதுவுக்கு பதில் வேறு மாதிரியான வாடை வந்துள்ளது. அதை அறிந்து மதுவை மணிபாலன் குடிக்காமல் இருந்துள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த வாசுதேவன் அந்த வாடையை பொருட்படுத்தாமல் குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். 

 

உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை வாசுதேவன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் டி.எஸ்.பி. பார்த்திபன், தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். 

 

போலீசாரின் விசாரணையில் கோழிப்பண்ணையில் இருந்த ஆசிட் பாட்டிலை தண்ணீர் என நினைத்து எடுத்து மதுவில் கலந்து குடித்ததால் வாசுதேவன் இறந்து போனதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோழிப்பண்ணை சொந்தக்காரரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கோழிக்கு வைக்கப்படும் குடிதண்ணீரில் ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி ஆசிட் கலந்து தீவனம் வைக்குப்படும். இது எப்போதும் நடைமுறையில் உள்ள பழக்கம். அதற்காக கோழிப் பண்ணையில் ஆசிட் வாங்கி வைத்திருந்ததாகவும் அதை யாரும் இல்லாத நேரத்தில் வாசுதேவன் எடுத்துச் சென்று தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்