Skip to main content

பெரியார் சிலை சேதம்: போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர்

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

Periyar statue damage: Political parties involved in the struggle

 

விழுப்புரம் நகரின் மையப் பகுதியில் திருவிக வீதி - காமராஜர் வீதி சந்திப்பு உள்ளது. இந்த இடத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. சிலையைச் சுற்றிலும் இரும்புக் கூண்டு அமைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். சிலைக்கு திமுக-அதிமுக, திக போன்ற பல அரசியல் கட்சியினரும், சமூகநல அமைப்புகளும், சுயமரியாதைக் கொள்கை உள்ள பலரும் பெரியார் பிறந்தநாள் மற்றும் அவரது நினைவு நாள் போன்ற தினங்களில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள்.

 

அப்படிப் பழமை வாய்ந்த அந்தச் சிலை நேற்று முன்தின நள்ளிரவு அந்த வழியாகச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று மோதியதில் இடிந்து சேதமானது. இதனால் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலையை இடித்துத் தள்ளிய லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரி மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்துள்ளது. அந்த லாரி டிரைவர் மச்சீந்திரா திபலி என்பவர் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்திலிருந்து புனேவிற்கு பழைய டயர்களை ஏற்றி கொண்டு சென்றுள்ளார். புதுச்சேரி மார்க்கத்திலிருந்து விழுப்புரத்தைக் கடந்து புனே செல்லும்போது சாலை சந்திப்பில் இருந்த அந்தப் பெரியார் சிலையை கண்டெய்னர் லாரி இடித்து தள்ளி உள்ளது.

 

இதையடுத்து திமுக நகரச் செயலாளர் சர்க்கரை தலைமையில் திமுகவினர் பெரியார் சிலையை இடித்த லாரி ட்ரைவரை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய சிலை அந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று அதிமுகவினரும் சிலை இடித்ததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் கலைந்து சென்றனர். இது சம்பந்தமாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் லாரி டிரைவர் மச்சீந்திரா திபலி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். சிலை இடிக்கப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் மோகன், காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, திமுக எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் உட்பட பலரும் பார்வையிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.