ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஈரோடு ரங்கம் பாளையம் அன்னை சத்யா நகரில் வசிக்கும் நரிக்குறவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-'நாங்கள் மேற்கண்ட முகவரியில் கடந்த 45 வருடமாக 37 குடும்பங்களுடன் குடிசை அமைத்தும், சிறிய ஓட்டு வீடுகள் கட்டியும் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் குழந்தைகளுடன் தங்குவதற்கு நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் இடம் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடம் என்று தெரியவந்துள்ளது. எனவே குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டி கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்கள் ஏழ்மை நிலையை மனதில் வைத்து 37 நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு வீட்டு மனை பட்டாவும், வீடுகள் இலவசமாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.